tamilnadu

திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவர், சிறுமி பலி...

திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 38). ஆட்டோ ஓட்டுனர். இவருடைய மனைவி மஞ்சுளா (30). இவருடைய மகள்கள் தீபிகா(13), ஹேமலதா(11). ராஜூவின் தங்கை வனிதா என்பவர், திண்டிவனம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(7), பவி(5), ராமகிருஷ்ணன் என்கிற தேவேஷ்(4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதாவின் கணவர் ராமலிங்கம் இறந்து விட்டார். இந்த நிலையில் வனிதாவின் மகன் ராமகிருஷ்ணன், கோவடியில் உள்ள தனது மாமா ராஜூ வீட்டில் தங்கியிருந்தான்.தீபிகா, ஹேமலதா, ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள், கோவடியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற் காக சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்த போது, நீச் சல் தெரியாததால் ஹேமலதா, ராமகிருஷ்ணன் ஆகியோரில் நீரில் மூழ்கினர்.இதற்கிடையே வெகுநேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியில் வராததால், தீபிகா மற்றும் அவருடன் வந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் தேடினர். இருப்பினும் அவர்கள் பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து சிறுவர்கள் ஊருக்குள் சென்று நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஏரிக்குள் இறங்கி நீரில் மூழ்கிய ஹேமலதா, ராமகிருஷ் ணனை மீட்டனர்.இதையடுத்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.குளிக்க சென்ற சிறுவன்-சிறுமி நீரில் மூழ்கி பலியான சம்பவத்தை கேட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியது.