tamilnadu

தருமபுரியில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

தருமபுரி, ஏப். 28- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள சக்கிலி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் டிராக்டரில் மணல் கடத்துவதாக பாலக்கோடு வட்டாட்சியர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது, தகவலறிந்த சின்னசாமி தலைமறைவாகி விட்டார். பின்னர் மணல் கடத்தலுக்கு பயன்பத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதேபோல் மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ரவி, செங்கண் பசுவந்தலாவ் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்து கொண்டிருந்தார். அப்போது வட்டாட்சியர் ராஜா மற்றும் வருவாய் துறையினர் டிராக்டரை மறித்தனர். இதனால் ரவி டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட மணல் மற்றும் அதற்குப் பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

;