தருமபுரி, மே 25-அரூரை அடுத்த கட்டவடிச்சாம்பட்டியில் புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தமலை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கட்டவடிச்சாம்பட்டி கிராமத்தில் 900க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி வகையில், சுமார் 35 வருடங்களுக்கு முன்பு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியானது தற்போது முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றம் செய்வதில்லை.இந்நிலையில், கிராம மக்கள் ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் குடிநீரை நேரடியாக பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தால் குடிநீரை சேமித்து முறையாக பிடித்து பொதுமக்கள் பயன்படுத்த முடியும். நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் போதிய அளவில் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் நாள்தோறும் அவதியுறுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நிதி ஒதுக்கீடு செய்து, கட்டவடிச்சாம்பட்டி கிராமத்துக்கு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.