tamilnadu

குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி மனு

 தருமபுரி, மே 5 - காட்டேரி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி காட்டேரி ஒன்றிய சிபிஎம் கவுன்சிலர் வி. கோவிந்தசாமி, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார். ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட காட்டேரி ஊராட்சியில் கோடை காரணமாக குடிநீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், காட்டேரி ஒன்றிய கவுன்சிலருமான வி. கோவிந்தசாமி அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, லக்கம்பட்டி பழைய ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள திறந்த வெளிக்கிணற்றில் உள்ள தண்ணீரை பைப்லைன் அமைத்து குடிநீர் தொட்டிக்கு விடுவதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு போக்க முடியும்.

எனவே கிணற்றை ஆழப்படுத்தி தண்ணீரை குடிநீர் தொட்டிக்கு விட உரிய நிதி ஒதுக்கித் தரவேண்டும். அனுமந்தீர்த்தம் ஆண்டிச்சேரி முனியப்பன் கோயில் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண ஆண்டிச்சேரி ஏரியில் வடக்குக் கரையோரம் திறந்தவெளி கிணறு வெட்டப்பட்டுள்ளது. இந்தக் கிணறு மூலம் பைப்லைன் அமைத்து நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் விடவும் அதுபோலவே தாதனூர் கிராமத்துக்கு போர்வெல் அமைத்து பைப்லைன் மூலம் நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் விட வேண்டும். மேலும், இந்நடவடிக்கைகளுக்கு உரிய நிதி ஒதுக்கி குடிநீர் பிரச்சனைக்கு போர்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;