tamilnadu

img

தருமபுரி தோழர் பி.சங்கரய்யா காலமானார் - அஞ்சலி.

 தருமபுரி, ஏப்.21-  தருமபுரி மூத்த தோழர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தோழர் பி. சங்கரய்யா(வயது 77) உடல்நலக் குறைவால் செவ்வாயன்று காலமானார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தருமபுரி மாவட்ட ஸ்தாபக தலைவர் மற்றும் நீண்ட ஆண்டுகாலம் மாவட்டசெயலாளராக இருந்து பணியாற்றியவர் .அரசு பள்ளியில் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர். மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், தீரம் மிகுந்த இயக்கப் போராளியாகவும், பல்வேறு ஆசிரியர் போராட்டங்களில்  முன் நின்ற களப்போராளி என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான தோழர் பி. சங்கரய்யா உடல்நலக்குறைவால் ஏப்ரல் 21,அன்று காலமானார்.  

தருமபுரி நகரம் வி.ஜெட்டிஅள்ளியில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு மாவட்டசெயற்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன்,நகரசெயலாளர் ஆர்.ஜோதிபாசு,நல்லம்பள்ளி ஒன்றியசெயலாளர் கே.குப்புசாமி,தமிழ்நாடுநடுநிலை உயர்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டசெயலாளர் ச.கவிதா ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் தோழர் சங்கரய்யாவின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  மறைந்த தோழர் சங்கரய்யாவின் மனைவி முத்துலட்சுமி(73) ஓய்வு பெற்ற தலைமையாசிரியராவார் , மூன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.