ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் புறப்பட்ட குடிநீர் ரயில் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்துள்ளது
தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. குறிப்பாக சென்னையில் இந்த ஆண்டு வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையின் பலபகுதிகளில் குடிநீருக்காக மக்கள் இரவும் பகலும் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கி விட்டது.
இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரயில் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டது. 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றப்பட்ட முதல் ரயில் இன்று காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரயிலை தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் சென்னையில் உள்ள வில்லிவாக்கத்துக்கு 11.30 மணியளவில் வந்து சேர்ந்தது. ரயில் மூலம் வந்துள்ள தண்ணீர் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.