tamilnadu

img

காவிரியில் கால் நனைப்போமா? -சு.பொ.அகத்தியலிங்கம்

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை,              தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி! என மகிழ்ந்து கூத்திடுவார் சிலப்பதிகாரத்தில் இளங்கோ.

 

தமிழர் நீர் நிலை குறித்த பார்வைக்கு சான்றாக உள்ள நீர்நிலை வடிவங்கள் கீழே உள்ளன. நதி என்பது பின்னர் வந்த சொல். ஆறு என்பதே பழமையானது. அருவி என்பதே பழஞ்சொல் நீர்வீழ்ச்சி. என்பது பின்னர்  புகுந்தது.

அகழி : பெரிய கோயில்கள் மற்றும் கோட்டைகளைச் சுற்றி இருக்கும் நீர் நிலை
ஆழ்கிணறு : கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தோண்டப்பட்டிருக்கும் நீர் நிலை
ஊருணி : ஊர் நடுவே உள்ள குடிநீர் குளம்
இலஞ்சி : ஒரு சிறிய நீர் தேக்கம். பெரும்பாலும் குடிநீருக்காகவே பயன்படுத்தப்படுகிறது.
கட்டுங்கிணறு : சரளை நிலத்தில் வெட்டி இருப்பார்கள். செங்கல்லால் உட்புறச்சுவர் எழுப்பப்பட்டிருக்கும்.
கண்மாய் : அளவில் சிறியதாய் இருக்கக்கூடிய ஏரி பாண்டிய நாட்டில் இதனை கண்மாய் என்று குறிப்பிடுகிறார்கள்.
கலிங்கு : ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் உடைப்பு எடுக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக கட்டப்பட்டு பல கைகளால் அடைத்து திறக்கக்கூடிய (ஷட்டர்ஸ்) மாதிரியான கட்டமைப்பு.
கால் : சாதாரணமாக நீர் ஓடும் வழியைக் கால் என்று சொல்வார்கள்.
கால்வாய்  :  ஏரி, குளம், ஊருணி போன்ற நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் “பாயும் கால்” வழி.
குட்டை : கால் நடைகளை குளிப்பாட்டப் பயன்படும் சிறிய நீர் நிலை
குட்டம் : அளவில் கொஞ்சம் பெரிதாக இருக்கும் குட்டைகளை குட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.
குண்டு  :  சிறிய அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குளிக்கும் நீர்நிலை/செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நீச்சல் குளங்கள் இந்த குண்டு வகையைச் சார்ந்தவை தான்.
குண்டம் : குளிப்பதற்கு உள்ள சிறிய களம் தான் குண்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

 

ஆற்றைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு.நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளை ஊரே மகிழ்ந்து ஆடிப் பாடி காதல் கடைக்கண் வீசி கொண்டாடிய மரபு நம்முடை யது. காவிரி பொய்த்துப் போனதும்; நம் பண்பாடு வைதீகத் தலையீட்டால் வெறும் சடங்காய் சிறுத்துப் போனது எவ்வளவு பெரிய பண்பாட்டுச் சோகம்? சித்திரை முழுநிலவில் வசந்த விழாவும், ஆடிப் பதி னெட்டில் நதியில் ஆடும் கொண்டாட்டமும் தமிழரின் காதல் பெருவிழா அன்றோ; அந்த வேரை மறந்தோம். இப்போது வாலண்டைன் தினம். காதலர் தினம் கொண்டாட லாமா கூடாதா என வெட்டிப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டி ருக்கிறோம். காதலையும் இயற்கையையும் கொண்டாடுவதே உயர்ந்த பண்பாடு. அதன் சொந்தக்காரர்களே நாம். காவிரியை எப்படி எல்லாம் மகிழ்ந்து போற்றினோம் என ஒரு சில இலக்கியச் சான்றுகள் பார்ப்போம். “வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கு ஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி (பட்டினப்பாலை:1-6) ‘அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் காவிரி வந்து கவர்ப்பு ஊட்டத் அநதண் ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்...’ புறநானூறு (பாடல் 35) ‘இன்குரல்இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் --- பொன்கரை பொரு பழங்காவிரியின்...’ [திரு ஞானசம்பந்தர் தேவாரம்.] ‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை’ மணிமேகலை (பதிகம்:24-25) ‘விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும் சூல்முதிர் கொண்மூப் பெயல் வளம் சுரப்ப குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை....’ சிலப்பதிகாரம் (காதை 10:104-109)

திருக்குறளில் கடவுள் வாழ்த்தை அடுத்து உள்ள அதிகாரம் வான்சிறப்பு. அவ்வளவு முக்கியத்துவம் மழைக்கு தருவது தமிழர் வாழ்வின் உயர் சிறப்பாகும். “விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து/உள்நின்று உடற்றும் பசி.” ஆம். கடல்நீர்  சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். ஆக மழை, நீர், நீர்நிலை இவை தமிழரின் பண்பாட்டில் நீக்கமற நிறைந்தது. “மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் /காடும் உடை யது அரண்” மணிபோல் தெளிந்த நீர் நிலைகளை உடைய அகழியும், வெளிநிலமும் மலையும் அணிகலன் போன்ற அழகிய நிழல் தரும் காடுகளையும் உடையதே சிறந்த அரண் ஆகும். இப்படிப்பட்ட இயற்கை அரண்களை உடைய நாடே பாது காப்பானது ஆகும். ஆனால் இன்றைய உலகம் மேற்கண்ட அணிகலன்களின் பொலிவை இழந்து சுற்றுச் சூழல் சீர்கேடு களால் பாதிக்கப்பட்டு வருகிறது. என்ன செய்யப் போகிறோம்?  ஆடி பதினெட்டில் இது குறித்து உரக்க சிந்திக்க தொடங்க லாமே!

இப்போது நம் காவிரி நிலை என்ன? ஒரு புறம் நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் .இதனைப் பேசபேச நீளும் அரசியலாய் … அறிவியலாய் … வரலாறாய் …

மறுபுறம் காவிரியை தூர் வாரினோமா? நீர் நிலைகளைத் தூர்வாரினோமா?

காவிரி நெடுக - நீர் நிலைகள் நெடுக குப்பைகொட்டாமல் மாசுபடுத்தாமல் தூய்மை காத்தோமா?

நீர் நிலைகளில் நீர் வழிகளில் பிளாஸ்டிக் குப்பை, மனிதக் கழிவுகள், அன்றாடம் நாம் கொட்டும் குப்பைகள் தவிர்ப்போமா?

பூஜை, புனஸ்காரம் அது இதுவென ஆற்றில் குளத்தில் நதியில் நாம் கொட்டுவது தீங்கானது என்பதை அறிந்தோமா?


புஷ்பகரணம், மகாமகம் என்றெல்லாம் பொருளற்ற சடங்குகளில் நீர் நிலைகளை மாசு படுத்துவதும்; சடங்காக சம்பிரதாயமாக வெறும் பூஜை, வழிபாடென பண்பாட்டை மரத்துப் போகச் செய்வதும் சரியா? ஆடிப்பதினெட்டு போன்ற ஆழமும் அழகும் பொருளும் மிக்க விழாக்களை நம் சொந்தப் பண்பாட்டின் கூறாக மீட்டெடுக்க வேண்டாமா? காலத்திற்கு ஒப்ப அதனை மேலும் பொருட்செறிவு மிக்கதாய் மாற்ற வேண்டாமா? ஆடிப்பதினெட்டை நதி, ஆறு, குளம், ஏரி, கண்மாய், குட்டை, ஊரணி இப்படி பலவாறான நீர்நிலைகளை காக்க வும், தூய்மைப்படுத்தவும், தூர்வாரவும், விழிப்புணர்வு ஊட்ட வும், ஆழவிவாதிக்கவும், உரக்கப் பேசவும் ஆரம்பம் செய்ய லாமே.

பண்டிகைகளே இல்லாத சமூகம் வறட்டுத்தனமாக மலட்டு த்தனமாகப் போய்விடும். மூடத்தனமான பண்டிகைகளை ஒதுக்குவோம். ஆடி பதினெட்டு போன்றவற்றை சடங்காக்கா மல் தமிழர் பண்பாட்டு பெருமையை பறைசாற்ற – நீர் நிலை பேண விழித்தெழும் விழாவாக மறுகட்டமைப்பு செய்யலா மே! முற்போக்காளர்கள், இடதுசாரிகள், சிவப்பு, நீலம், கருப்பு இணைந்து முயலலாமே! தொடங்குக விவாதம்…

;