தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே தாழ்த்தப்பட்ட பெண் ஊராட்சி மன்றதலைவரை அலுவலக நாற்காலியில் அமரக்கூடாது என ஊராட்சி துணைத்தலைவர் சாதிவெறியுடன் தீண்டாமை கொடுமையை அரங்கேற்றி வருவதாகவும், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை எனவும் குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தனது தந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை ஒன்றியம், மன்னம்பந்தல் ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருபவர் பிரியா பெரியசாமி (23). எம்.ஏ., பி.எட் படித்த இவர்உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் திமுக-வில் இணைந்து கொண்டார். திருமணமாகாத இவர் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் முன்னின்று செயல்படுபவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இவரின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத சாதி ஆதிக்க சக்திகள் தொடர்ந்து பிரியாவை பணி செய்யவிடாமல் பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளனர்.
குறிப்பாக துணைத்தலைவராக உள்ள அமலா ராஜகோபால் மற்றும் அவரின் கணவரான அதிமுக-வை சேர்ந்த ராஜகோபாலும் சாதிய ரீதியில் தொந்தரவு அளித்துள்ளனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தளவாட பொருட்கள் வாங்கியதில், ஊராட்சிமன்ற தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கி யதற்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் அமலா ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்ததோடு சாதியைக் குறிப்பிட்டு தரக்குறைவாக பேசி யுள்ளார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் ராஜகோபாலும் அவரை இழிவுபடுத்தி, ரோலிங் சேரை எட்டி உதைத்திருக்கிறார்.தொடர்ந்து ஊராட்சிக்கு வளர்ச்சித் திட்டங்கள் செய்வதற்கு உண்டான நிதியை பெறுவதற்கு கமிஷன்கேட்டும், ஒவ்வொரு பணிக்கும் கமிஷன் கேட்டும் மிரட்டியுள்ளனர். தர மறுத்தால் கையெழுத்திட மறுத்தும் ஊராட்சி தலைவர் பிரியாவை மக்கள் பணி செய்யவிடாமல் தொந்தரவு கொடுத்துள்ளனர். தொடர்ச்சியாக தீண்டாமைக் கொடுமைக்கு ஆளான பிரியா நீதிகேட்டு திங்களன்று மாலை மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தலித் சமூக பெண் நமக்கு தலைவராக பதவி வகிப்பதா என்ற எண்ணத்தோடு தன்னை இழிவுபடுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென அவர் போராடியுள்ளார். அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவிடாமல் நாள்தோறும் தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க கூறினார்.
சிபிஎம் தலைவர்கள் நேரில் சந்திப்பு
தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், எஸ்.துரைராஜ், மாரியப்பன், ஒன்றிய செயலாளர் சி.மேகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.கணேசன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட ஊராட்சித் தலைவரிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, ‘சாதிய அடக்குமுறைக்கு எதிராக போராட துணை நிற்போம்’ என ஆறுதல் கூறினர்.தீண்டாமைக் கொடுமையில் ஈடுபட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், துணைத்தலை வர், அவரது கணவரின் அராஜகத் திற்கு உறுதுணையாக உள்ள ஊராட்சிசெயலர் மீது ஒன்றிய நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். விரைவில் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர்.