சென்னை, மே 17-கமல்ஹாசன் பேச்சை சாக்கிட்டு தமிழகத்தில் மதவெறிக் கலாச்சாரத்தைப் பரப்ப முயலும் சக்திகளை முறியடிக்கத் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது.மேடை அமைப்பின் மாநில செயற்பாட்டுக்குழுக் கூட்டம் சென்னையில் வெள்ளியன்று (மே 17) நடைபெற்றது. சைவ சித்தாந்த அறிஞர் சத்தியவேல் முருகனார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தென்னிந் திய சைவ சித்தாந்த நூற்பதிவுக் கழகத் தலைவர் சுப்பையா, அய்யா வைகுந்தர் தர்மபதி நிர் வாகி சுந்தரேசன், பேராயர் தேவசகாயம், காங்கிரஸ் கட்சித் தலைவர் நெடுஞ்செழியன், மனித நேயமக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத், விடுதலைக்கட்சிகள் கட்சி சார்பில் பக்ருதீன், மேடை ஒருங்கிணைப்பா ளர்கள் பேராசிரியர் அருணன்,க.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:-நல்லிணக்கப் பாரம்பரியம் உள்ள தமிழகத்தில் ஒரு மதவெறிப் பதற்றச் சூழலை உருவாக்குவதற்கு ஏற்ற சந்தர்ப் பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல, தேசப்பிதா காந்தி கொலை தொடர்பாகவும் தீவிரவாதம் தொடர்பாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதைச் சாக்கிட்டு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவாரத்தினர் திட்டமிட்ட முறையில் பகைமைப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.தேசப்பிதாவை கொலை செய்தது தீவிரவாதம்தான் என்பது வரலாற்றில் பதிவான உண்மை. அதைத்தான் கமல் ஹாசன் சுட்டிக் காட்டினார். அவர் பேசிய வேறு விஷயங்களில் மாறுபாடு இருக்குமானால் அது குறித்து பேசலாம், எதிர் வாதத்தை முன்வைக்கலாம்.அதைவிடுத்து மக்களிடையே மதவாத அடிப்படையில் வெறுப்பு அரசியலை வளர்க்க முயல்கின்றனர். தமிழக அமைச் சர் ஒருவரே, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுகிறார். தமிழகத்தில் கமல்ஹாசன் நடமாட முடியாது என்று ஒரு ஜீயர் பேசுகிறார். நாட்டின் பிரதமரே மத உணர்வுகளைத் தூண்டுவது போல் கருத்துப் பதிவிடுகிறார். இந்த அபாயகரமான போக்கை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.
“அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவர் வாயில் மண்ணு” என்று நல்லிணக்கத் தைப் பேணி வளர்த்த தமிழ்ச் சமூகத்தில் இவ்வாறு திட்டமிட்ட முறையில் திணிக்கப்படும் மதவெறிக் கலாச்சாரம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டாக வேண்டும். பகைமையை வளர்க்கிற, வன்முறையைத் தூண்டுகிற இந்தப் போக்கிற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற இயக்கங்களும் ஜனநாயக அமைப்புகளும் வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும். மதவெறியர்களின் திட்டம் இங்கு நிறைவேறாது என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். நல்லிணக்க மாண்பை மக்களிடையே விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக்கொள்கிறது.
மத நல்லிணக்க மாநாடு
தற்போது தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் உருவாக்கப்பட்டு வரும் பதற்ற சூழலில் மத நல்லிணக்க மாநாடு ஒன்றை சென்னையில் நடத்துவதென இக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. மத நல்லிணக்கத்தில் அக்கறையும் உள்ள சமயத் தலைவர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் ஆகியோரைக் கொண்டு இந்த மாநில அளவிலான மாநாட்டை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.