மதுரை, மே, 17 -சந்தேகத்திற்கிடமான முறையில் சாலை விபத்தில் இறந்தவர் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மேலூரைச் சேர்ந்தவர் பொற்கொடி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்,“2011- ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சித் தலைவர் தேர்தலில், எனது கணவர் பிச்சை மனுத் தாக்கல் செய்திருந்தார். நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். வானம்பாரைப்பட்டி கிராம ஊராட்சியில் அப்போதைய ஊராட்சித் தலைவராக இருந்தவர் முருகன். ஊராட்சித் தலைவர் பதவியை அவரும் அவரது குடும்பத் தாரும் ஏகபோகமாக அனுபவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக யாரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. இந்த நிலையில், எனது கணவர் அவருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ததால் அவரும், அவரது குடும்பத்தாரும் வேட்பு மனுவைத் திரும்பப் பெறு மாறு எனது கணவரை பலமுறை மிரட்டினர். முருகன் குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், காமேஷ், லோகு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சி யாக மிரட்டவே 2011ஆம்ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதிஎனது கணவர் தனது வேட்புமனு வைத் திரும்பப் பெற்றார். அக்டோபர் 1ஆம் தேதி இயற்கை உபாதையை கழிப்பதற்காகச் சென்றபோது, மேலூர்-சிவகங்கை சாலையில் வாகனம் மோதி அவர் உயிரி ழந்தார். இது இயல்பாக நடந்த விபத்துஅல்ல. அப்போதைய ஊராட்சித் தலைவராக இருந்த முருகன் திட்டமிட்டு செய்த கொலை. இது தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரைக் குறிப்பிடாமல் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கீழவளவு காவல் ஆய்வாளரும் குற்றம்சாட்டப்படும் முருகனுக்கு ஆதரவாக செயல்படுகிறார். ஆகவே இந்த வழக்கை அவர் விசாரித்தால் விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.வழக்கை வெள்ளியன்று விசாரித்த நீதிபதி புகழேந்தி, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.