tamilnadu

img

மத்திய அரசின் அறிவிப்பால் சிறு, குறு நிறுவனங்களுக்கு எவ்வித பயனும் இல்லை

டேக்ட் சங்கம் குற்றச்சாட்டு

கோயம்புத்தூர், மே 15 –  மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள திட்டங்களால் சிறு, குறு தொழில்களுக்கு எவ்வித பயனும் இல்லை. தற்போது சிறு, குறு தொழில்கள் எதிர்நோக்கியிருக்கும் எதார்த்தத்தை அறிந்து திட்டங்களை அறிவிக்க வேண்டும் என டேக்ட் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பில் இருந்து தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு  தொழில் துறையினருக்கு ரூ.3 லட்சம் கோடி புதிய கடன் வழங்குவதுக்காக ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் முடங்கிக் கிடக்கும் சிறு, குறு தொழில்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை. 

மேலும், கடும் நெருக்கடியில் உள்ள தொழில்களை பாதுகாக்க அரசு குறுந்தொழில் முனைவோர்களின் நலன் கருதிட வேண்டும். வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களுக்கு எவ்வித நிபந்தனை இல்லாமல் ரூ.5 லட்சம் வரை சொத்து பிணை இல்லாமல் உடனடியாக  5 சதவீதத்தில் கடன் வழங்கிட வேண்டும். இதனை திருப்பி செலுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கிட வேண்டும். இதுவரை,  ஜிஎஸ்டி மூலமாக அபராதமாக வசூலித்த தொகையினை திருப்பி தருவதுடன் 10 சதம் ஜிஎஸ்டி  தொகையும் மத்திய அரசு தொழில் முனைவோர்களுக்கு தந்து உதவிட வேண்டும்.  தனியார் வங்கிகள், அரசு வங்கிகள் என  அனைத்துக் கடன்களையும் திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் பெற்றுத்தர வேண்டும். இதற்கான வட்டிகள் முழுமையாக ரத்து செய்திட வேண்டும். மாநில அரசு தொழில் முனைவோர்களின் இன்றைய எதார்த்த சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு குறைந்தது மூன்று மாதத்துக்கான மின்சார கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து குறு சிறு தொழில்களை பாதுகாத்திட வேண்டுகிறோம்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சிறு, குறு தொழில் முனைவோர்கள் செய்து கொடுத்துள்ள பணிகளுக்கு 45 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள தொகையினை வழங்கிட நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும். அரசு துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் உதிரிபாகங்கள் மற்றும் உற்பத்தி பொருள்களை உள் நாட்டில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  ஏற்கனவே உள்ள அரசு ஆணைப் படி 25 சதம் சிறு, குறு  தொழில் முனைவோர்களிடம் கொள்முதல் செய்ய இருந்தும் இதுவரை அது நடக்காத நிலையில் அரசு உடனடியாக ஒரு குழு அமைத்து சிறு, குறு தொழில் முனைவோர்களிடம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.