tamilnadu

img

ஜனவரி 8, 2020 - க.சுவாமிநாதன்

தேசம் தழுவிய வேலை நிறுத்தம் ஏன்?

தில்லியின் நெரிசலான அனாஜ் மண்டி பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டிசம்பர் 8 அன்று 43 உயிர்கள் பலியாகியுள்ளன. “விடிவதற்கு ஒரு மணி நேரமே இருந்த நேரத்தில் பற்றிய தீ இந்த 43 அற்புதமான மனித உயிர்களுக்கு விடிவே இல்லாமல் செய்து விட்டது.” அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிகளின் மூச்சுக் குழலை நிரப்பியது நெருப்பின் புகை. அவர்களை சுவாசிக்க இயலாமல் திணறடித்து வீழ்த்தி விட்டது. அவர்களில் ஒரு சிறுவனும் உண்டு. இன்னும் 16 பேருக்கு காயம். 4 பேர் மட்டுமே தப்பித்துள்ளார்கள்.

இந்த கொடூரம் “வெறும் விபத்தா?” அனுதாபம் செலுத்திவிட்டு அந்த கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு கோப்பை மூடிவிடலாமா? 
 

அந்த கம்பெனி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கிறது. தொழிலாளர், பாதுகாப்பு, சுற்றுப்புற சூழல் ஆகியன குறித்த சட்டங்கள் எல்லாம் என்ன ஆனது. மாநகர- வருமான வரி- தொழிலாளர் துறை கண்காணிப்பு அதிகாரிகள் என்ன செய்தார்கள். அரசியல் வாதிகள் பங்கு என்ன? “எல்லாம் மாமூல்தான் என்ற சந்தேகம் எப்படி வராமல் இருக்கும்?” ஆனால் இதை வெறும் லஞ்சம், நேர்மையின்மை என்று முடிவுக்கு வரப் போகிறோமா? 

உலகமயத்தின் கண் மூடித்தனமான நகர மயமாக்கல், லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட வெறித்தனமான வேட்டை, மனிதத் தன்மையற்ற இரக்கமற்ற சுரண்டல், “கூலிக்காக மாண்புகளை எல்லாம் இழந்து சொந்த மண்ணை விடுத்து உறவுகள் துறந்து பல நூறு பல ஆயிரம் கி.மீ துரத்தப்படுகிற அவலம்...” இவை காரணங்கள் இல்லையா? 

தொழிலை கட்டற்ற முறையில் நடத்துவது “(Ease of doing business)” பற்றி கவலைப்படுகிற ஆட்சியாளர்களின் பொருளாதார பாதை, உழைப்பை செலுத்துவதற்கான உரிய சூழலை “(Ease of doing Labour)” பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுகிறதா?

2011 ல் இருந்து 2017 வரை “ஒவ்வோர் ஆண்டும் 90 லட்சம் பேர்” சராசரியாய் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து தொழிலாளிகள் வந்துள்ளனர். 2001- 2011 ல் இந்த சராசரி 50 லட்சம் முதல் 65 லட்சமாக இருந்தது. (இந்து பிசினஸ் லைன்- 10.12.2019 தலையங்கம்). 

தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் வட மாநில இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் தினமும் வந்து உடலுழைப்பில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் வசிக்க, தூங்க, குளிக்க, உண்ண என்ன ஏற்பாடுகள்? என்ன சமூக பாதுகாப்புகள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகள் இல்லவே இல்லை. வெயிலும், குளிரும் தாக்குகிற தகர செட்டிற்குள் வாழ்ந்து, திறந்த வெளியில் குளித்து இவர்கள் நாட்களைக் கழிப்பதை நம்மால் பார்க்க முடியும். “கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு” புலம் பெயர் தொழிலாளிகளுக்கு அடுக்கக வீட்டு வசதி செய்து தந்திருப்பது மட்டுமே அவர்களின் புண்பட்ட மனசை வருடும் மயிலிறகாகும்.

கிராமப்புற விவசாயம் பாழ்பட்டதால் நகரமயத்திற்கு கிடைக்கிற மலிவான உழைப்பாளிகள் இவர்கள். வழியும், வக்கும் அற்ற இவர்களுக்கு பெருமிதமான உழைப்பு எப்படி கிடைக்கும்? 

Dignity of labour (உழைப்பின் பெருமிதம்) உலகமயப் பாதையில் அரிதிலும் அரிது. “பன்னாட்டு, கார்ப்பரேட்டுகள் மனம் கோணக் கூடாது” என்பதையே Ease of doing business என்கிறார்கள். 

“அந்த லாபத்தேர் ஓடுவதற்கு” அதன் சக்கரங்களில் தரப்படுகிற பலிகளாக, அப்பாவி கோழிகளாக தொழிலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தேர்ச் சக்கரங்களில் ரத்தம் பிசுபிசுக்கிறது. உறைந்து காட்சி அளிக்கிறது. 43 உயிர்கள் அல்லவா?

கோடானுகோடி அமைப்பு சாரா உழைப்பாளிகளின் சுயம், தன்மானம் கேள்விக்கு ஆளாக ஆளாக அடுத்த குறியாய் அமைப்பு சார் உழைப்பாளிகளை நோக்கியும் நகர்கிறது உலகமயம். 

“இந்த ஈவு இரக்கமற்ற பொருளாதார பாதைக்கு எதிரான சங்கமமே ஜனவரி 8.

;