சென்னை, ஜூலை 28- கொரோனா காலத்தில் வேலையும் - வருமானமும் இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களைப் பாதுகாக்க ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் செவ்வாயன்று (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நான்கில் ஒரு பங்கு மட்டுமே நிதி
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யாக மத்திய - மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்து 125 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அன்றாடம் உழைத்து வாழும் கிராமப்புற குடும்பங்கள் வாழ்க்கை நடத்திட தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவிட மனமில்லாத மத்திய ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு இதே காலத்தில் பல லட்சம் கோடியை கொரோனா நிவா ரணத் தொகுப்பு என்ற பெயரிலும் வராக்கடன் கள் என்ற பெயரிலும் வாரி வழங்கியுள்ளனர். மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி அதன் மூலம் கிராமப்புற ஏழைகளுக்கு உதவுவதைக் கூட விரும்பாத பாஜக அரசு வேலை அட்டை பெற்றுள்ள சுமார் 14 கோடி பேருக்கு வேலை வழங்கிட 4 லட்சம் கோடி ஒதுக்குவதற்குப் பதிலாக நான்கில் ஒன்று என்ற விகிதத்தில் வெறும் 1 லட்சம் கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. கடும் நெருக்கடியான இந்த சூழலில் அட்டைப் பெற்றுள்ள அனைவருக்கும் வேலையும் - முழு கூலியும் வழங்கிட மறுத்து வஞ்சித்து வருகிறது.
முதியோர் பென்சன் நிலுவை
முதியோர் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்து மாத கணக்கில் ஆகியும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பல்லாயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது வழங்கப்படும் ரூ.1000 என்பது ஒரு மாதத்திற்கு மூத்த குடிமக்களின் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதுமானதல்ல. கிராமப்புற குடும்பங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிட ஆயிரக்கணக் கான நுண்நிதி நிறுவனங்களில் கடன்பெற்று உள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்தக் கடன்களை வசூலித்திடக்கூடாது என ரிசர்வ் வங்கியும். மாநில அரசும் அறிவித்துள்ளது. ஆனால் நுண்நிதி நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலிப்பதை எந்த கிராமத்திலும் நிறுத்தவில்லை.
கொரோனா தொற்று நெருக்கடி காலத்தில் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்கும் மோடி அரசு குடிதண்ணீ ரையும் தனியாருக்கு விற்றிட ‘ஜல்ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை கிராமங்களில் செயல்படுத்தும் முயற்சியைத் துவக்கி உள்ளது.
150க்கும் மேற்பட்ட மையங்கள்
இவ்வாறு கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு துயரங்களை உருவாக்கியுள்ள மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு கொரோனா காலம் வரை மாதத்திற்கு ரூ.7500 நிவாரணம் வழங்கிட வேண்டும். முதியோர் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ளவர் களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ரூ.3000ஆக உயர்த்திட வேண்டும், நுண்நிதி கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்வதுடன், கூட்டுறவு, வணிக தேசிய வங்கிகள் மூலமாக மானியக்கடன் வழங்க வேண்டும். ஊரக வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்திடவும், வேலை நாட்களை 200 நாள்களாகவும் - தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்திட வேண்டும். கொரோனா தொற்றுப் பரிசோதனையை வீடு வீடாக நடத்திட வேண்டும். ஜல் ஜீவன் மிஷன் என்ற பெயரில் குடிநீர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மையங்களில் நடைபெற்ற இப்போராட்டத் தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 30 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாநிலத் தலைவர் ஏ.லாசர் மதுரை மாவட்டம் சமயநல்லூரிலும், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் நாகை மாவட்டம் கீழ்வேளூரிலும், மாநில பொருளாளர் எஸ்.சங்கர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும், மாநில செயலாளர்கள் அ.பழநிசாமி (திருச்சி புள்ளம்பாடியிலும்), எம்.சின்னதுரை(தஞ்சாவூர் திருக்கானுர்பட்டி), மாநில துணைத தலைவர்கள் பி.வசந்தாமணி (திண்டுக்கல் ஒட்டன்சத்திரம்), மலைவிளைபாசி(நாகர்கோவில்) ஆகியோர் கலந்து கொண்டனர்.