“சென்னை சவாலான பகுதியாக இருப்பதால் கொரோனா தொற்று எண்ணிக்கை வரும் நாட்களில் இரட்டிப்பாகும். ஆனாலும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை”.
---ராதாகிருஷ்ணன், சிறப்பு அதிகாரி.
சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்ட சிறப்பு அதிகாரி ராதா கிருஷ்ணன்,“அதிதீவிரமாக அதிக எண்ணிக்கை யில் கொரோனா சோதனை நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார். ஆனால் இதற்குப் பிறகுதான், முதலமைச்சர் பழனிசாமி தலை மையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு புதிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் “தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவுக்கு தளர்த்தப்படுகிறது” என்றார்.
“தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டில் ஆரம்பத்திலிருந்தே வைரஸ் தொற்று தலைநகரை கெட்டியாக பிடித்துக் கொண்டது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து தொடர்ந்து முதல் இடத்தி லேயே நீடித்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய முதல மைச்சரோ, மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால் தான் சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் மற்ற மாவட்டங்களில் கிராமப்புற மக்களை போன்று சென்னை நகர மக்கள் ஊரடங்கை முறையாக கடைப்பிடிப்பதில்லை” என்றும் கூறினார்.
அத்துடன் நின்றாரா? என்றால் அதுவும் இல்லை. ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, மேலும் ஒரு ஊரடங்கு என்று நான்கு நாட்கள் மக்கள் யாரும் வெளியில் வரக் கூடாது, வர்த்தக நிறுவனங்களும் திறக்கக்கூடாது என்று ‘குண்டு’ வீசினார். மாநிலத்திலேயே மக்கள் தொகை அதிகமும் நெருக்கமும் கொண்டது சென்னை மாநகரம் என்பதில் முதல மைச்சர் கூறிய கருத்திலிருந்து யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது.
நமது கேள்வி என்னவென்றால்? மாநகரில் அதிக அளவில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்து கொடுக்காமல் ‘அவசர கோலத்தில்’ அள்ளித் தெளித்ததன்’ (முழு ஊரடங்கு) விளைவாக ‘ஹாட் ஸ்பாட்டாக’ மாறியது கோயம்பேடு.
தும்பை விட்டு...
சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருந்தது இந்த சந்தை. கோயம்பேடு வளாகத்திற்கு பல மாவட்டங்களிலிருந்து சில்லரை விற்பனையாளர்கள், தொழி லாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட ஆயிரக்க ணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக பல மாநிலங்களி லிருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் அதிகமாக வருகின்றன. அதேபோல், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் காய்கறி, பழங்கள், பூக்கள் வருகின்றன. தொடக்கத்தில் இந்த பகுதியில் எந்தவித பரிசோதனையும் நடத்தவில்லை. மருத்துவ முகாமும் இல்லை. இதனால், எவ்வித அச்சமும் இல்லாமல் காய்கறி வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தனர்.
காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கும் எந்த வித கட்டுப்பா டும் விதிக்கப்படாமல் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் சந்தைக்கு வந்து சென்றுள்ளனர். இதனை கண்காணித்து, முறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகமும் ஆட்சியாளர்களும் தவறிவிட்டனர். இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக கோயம்பேட்டில் ஒரே நேரத்தில் ஒன்று கூடியதால் வியாபாரிகளிடமிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து சென்ற பொதுமக்கள், சிறு வியாபாரி கள், தொழிலாளிகள் என அனைவரையும் தாக்கிய வைரஸ் தமிழகம் முழுவதும் குடும்பம் குடும்பமாக கொத்துக்கொத்தாக பரவி வருகிறது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
கடந்த நாற்பது நாட்களாக பசி பட்டினியால் கொடுமைகளை அனுபவித்து வந்த ஏழை எளிய மக்களும் வணிகர்களும் தமது தொழில்களை துவங்க ஆர்வம் காட்டினர். இதற்குக் காரணம், ஊரடங்கு காலத்தில் ‘யானைப் பசிக்கு சோளப்பொரி’ கூட போடாமல், வெறும் வாயால் வடை சுட்ட பிரதமர் மோடி கைதட்டி, விளக்கேற்றி, மலர் தூவி விட்டார். அவரது வழியை பின்பற்றும் தமிழக முதல்வரும் அரசும் அதை மெய்ப்பித்து வருகிறது.
கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசின் உத்தரவு கள் காற்றில் பறந்தன. கடைகளை திறக்க அரசு அனுமதி கொடுத்தது காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி யதால் திறந்த வேகத்திலேயே சில கடைகளை மூட காவல்துறை யினர் உத்தரவிட்டனர். மேலும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்தனர். இதனால் செய்வதறியாமல் வணிக நிறுவன உரிமை யாளர்கள் திகைத்தனர்.
விழுப்புரம், மதுராந்தகம், காஞ்சிபுரம் என ஏராளமான நகரப் பகுதிகள் வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு பகுதி என்பதால் கடை களை திறக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முழுமையாக தடை விதித்திருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை; தனிமனித இடைவெளியும் கடைப் பிடிக்கவில்லை. சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கையை அரசும் மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் தலைநக ரின் கடைகளை திறக்க அனுமதிப்பதால் வைரஸ் தொற்று மேலும் அபாய கட்டத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் குமுறிக் கொண்டிருப்ப தால் அதை திசை திருப்பும் முயற்சியாக ஊரடங்கு கட்டுப்பாடு களை தளர்வு செய்து மனித உயிரோடு விளையாடி வருகிறார்கள்.