டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் நேர்காணல்
கேரளாவின் நிதியமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக், திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வு மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். அதற்குப் பின்னர் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்த அவர், கேரளாவின் புகழ்பெற்ற அதிகாரங்கள் மற்றும் வளங்களைப் பரவலாக்குவதற்கான மக்கள் திட்டப் பிரச்சாரத்தில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். 2006-2011 காலகட்டத்திலும் மாநிலத்தின் நிதியமைச்சராக பணியாற்றியுள்ளார். மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கோவிட்-19 குறித்த கேரள அரசின் செயல்பாடுகள் வேறுபடுவது; மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் குழப்பமான உத்திகள்; மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தித் தராமல் ஊரடங்கு நடவடிக்கை ஏன் நீடிக்க முடியாது; இறுதியாக, கேரளாவின் தீவிரமான சூழ்நிலை சார் உத்திகள் மற்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும் நிலையில், இந்தியாவில் அது ஏன் பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப்போகிறது என்பவை குறித்து ஃப்ரண்ட்லைனுடன் தாமஸ் ஐசக் மிக விரிவாகப் பேசினார். அவரது நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
கேள்வி : இந்த அளவிற்கு தொற்றுநோயின் தாக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்துவதற்கு கேரளா என்ன செய்தது?
பதில் : இதற்கான பதிலை, கேரளாவில் உள்ள பொது சுகாதார அமைப்பின் பலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றே நினைக்கிறேன். அது ஒரு நீண்ட வரலாறு, கடந்த காலத்தின் மரபு. பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதில் தற்போதைய இடதுசாரி அரசாங்கம் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளது. மருத்துவமனைக் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்காக KIIFB எனப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திடமிருந்து சுமார் ரூ.4,000 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் இன்றைக்கு ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் புற்றுநோயியல் துறை உள்ளது. ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் இதயம் தொடர்பான துறை உள்ளது. மற்றும் ஒவ்வொரு தாலுகா மருத்துவமனையிலும் குறைந்தது 20 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களை இலக்காகக் கொண்டு செயல்படுகின்ற ஆர்த்ராம் திட்டத்தை தொடங்கியுள்ள கேரள அரசாங்கம், ஆரம்ப சுகாதார நிலையங்களை குடும்ப சுகாதார மையங்களாக மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.
நாட்டின் சிறந்த முதல் 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இன்றைக்கு கேரளாவில்தான் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள 68 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிக விரைவாக நோய்த்தடுப்பு வலையமைப்பு மற்றும் மருத்துவமனை மேம்பாட்டுக் குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்திற்கு பிந்தைய நெருக்கடியில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டதிலும், நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கேரளாவின் முயற்சிகளிலும், இந்த பொது சுகாதார அமைப்பின் வலிமைதான் துணை நின்றது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கையாளுவதில், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கேரளா மாறுபட்டு இருப்பதற்கு பல குறிப்பிட்ட காரணிகள் உள்ளன. முதலாவதாக, தீவிர சுழற்சி முறையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நோயுடன் தொடர்புள்ள அனைவரையும் கண்டறிவது, பின்னர் அவர்களுக்கும் பரிசோதனை செய்வது, அவர்களைத் தனிமைப்படுத்துவது என்று நாங்கள் பின்பற்றிய இந்த சுழற்சிமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உண்மையில், நோயாளிகளின் பாதை குறித்த வரைபடங்களை உருவாக்கியது கேரளாவின் கண்டுபிடிப்பே ஆகும். நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட அனைவரின் கடந்த இரண்டு வாரங்களுக்கான நடவடிக்கைகள் குறித்த பாதை வரைபடம் உடனடியாக உருவாக்கப்பட்டது. பின்னர் அது செய்தித்தாள்களிலும் பிற இடங்களிலும் வெளியிடப்பட்டது. அதன் மூலம் அவர்களுக்கு அருகில் இருந்த அனைவருக்கும் எச்சரிக்கை ஏற்பட்டது; மக்கள் எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கினர். இது உண்மையிலேயே மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இது நாட்டில் வேறெங்கும் இல்லாத செயல்பாடாகும். ஏனெனில் அங்கெல்லாம் எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை. அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட சில மாநிலங்களில் கோவிட்-19 நோய் இருந்தவர்கள் அதிகமாக இல்லை என்பதை உங்களால் காண முடியும். அது பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் அந்த மாநிலங்களில் கண்டறியப்படவில்லை என்பதையே குறிக்கிறது. அவ்வாறு இருக்கின்ற இடைவெளி பேரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
இரண்டாவதாக, ’பிரேக் தி செயின்’ (சங்கிலியை உடைப்போம்) என்ற பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்பதை நான் சொல்ல வேண்டும். கேரளாவில் உள்ளவர்களுக்கு வெற்றிலை மெல்லும் பாரம்பரியம் உள்ளது. அதனால் சாலையில் வெற்றிலைச் சாற்றைத் துப்புவது மிகவும் சாதாரணமானது. பிரச்சாரம் கீழ்மட்டம் வரை பரவியதால், அந்த பழக்கம் இப்போது மறைந்துவிட்டது. ’பிரேக் தி செயின்’ பிரச்சாரம் சானிடைசர்கள் மற்றும் சோப்பை மக்கள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளது. முகக்கவசங்களை நாங்கள் அணியவில்லை என்றாலும், அதுவும் அடுத்த கட்டத்தில் பிரபலமாகிவிடும் என்றே நான் நம்புகிறேன். மருத்துவக் கண்ணோட்டத்தில், கேரளா அடைந்திருக்கும் வெற்றிக்கு இந்த இரண்டு முக்கிய காரணிகளும் காரணம் என்றே நான் கூறுவேன்.
ஏற்கனவே எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியை அறிவித்த முதல் மாநிலம் கேரளாவாகும். கோவிட்-19 நெருக்கடியின் ஆரம்பத்திலேயே இதைச் செய்ய வேண்டும் என்று அரசைத் தூண்டியது எது?
ஆற்றல் மிக்க சமூக இயக்கங்களைக் கொண்ட மாநிலம் கேரளா என்பதால், வாழ்வாதாரத்திற்கான உதவியை அரசு வழங்கத் தவறினால், அதைக் கோரி போராட்டங்கள் நடக்கும். கீழிருந்து மிகப்பெரிய அழுத்தம் இருப்பது, மிகவும் சாதகமான விஷயம் என்றே நான் நினைக்கிறேன். அது வெறுமனே மாநில அரசின் கருணையால் நடப்பதாக இருக்காது. எந்தவொரு அரசாங்கத்தாலும் புறக்கணிக்க முடியாது என்ற அளவில் அவ்வாறான அழுத்தம் கீழிருந்து இருக்கும். ஊரடங்கின் விளைவாக மக்களின் வாழ்வாதாரங்களும் அடைபட்டிருக்கின்ற நிலையில், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை மக்களுக்கு உறுதி செய்து தராமல், ஊரடங்கை அமல்படுத்த முடியாது என்பதை அரசு நன்கு உணர்ந்திருந்தது.
நாங்கள் அதைச் செய்யாவிட்டால், அல்லது அதில் கவனம் செலுத்தா விட்டால், விளைவு என்னவாக இருந்திருக்கும் என்பதை இப்போது நமக்குத் தெரிகிறது. நகரங்களிலிருந்து தப்பி ஓடுகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும், இந்த ஊரடங்கின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை பொருளற்றதாக்கி இருப்பார்கள். மக்களுடைய மிகக்குறைந்தபட்சத் தேவைகளுக்கான உத்தரவாதத்தை அளிக்காமல், அவர்களிடமிருந்து இணக்கத்தை வலியுறுத்திப் பெற முடியாது என்பதை இந்திய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மிகக் குறைவான நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே, நாங்கள் ரூ.20,000 கோடி நிதியுதவிக்கான தொகுப்பை அறிவித்திருந்தோம். ஆனாலும் பட்ஜெட்டுக்கு வெளியே 20,000 கோடி ரூபாயை மாநில அரசால் பெற முடியாது. பட்ஜெட் கட்டுப்பாடுகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆகையால் எங்களுடைய கடன், என்ன செலவு செய்யப் போகிறோம் என்ற சுமையை முன்கூட்டியே ஏற்றுக் கொண்டிருப்பது மட்டுமே எங்களால் செய்ய முடிந்தது. ஆண்டின் பிற்பகுதியில், அதுவும் ஒரு தேர்தல் ஆண்டில், பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது என்பதால், இது நிச்சயம் விவேகமான செயலாகக் கருதப்படாது. ஆனாலும் நாங்கள் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை.
நோயை எதிர்த்துப் போராடுவது மட்டுமே இப்போது மிக முக்கியமாக கருதப்பட வேண்டிய செயல் என்பதால், மக்களின் தேவைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு இணையாக வேறு எந்த செயல்பாடுகளும் இருக்க முடியாது. 55 லட்சம் முதியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.8,500 வழங்கியிருக்கிறோம். மக்கள்நலன் சார்ந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கின்ற, கிட்டத்தட்ட அதே அளவிற்கான தொழிலாளர்களுக்கு, தலா ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் கீழ் வராத ஆனால் நிதியுதவி தேவைப்படுகின்ற அனைவருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. பணக்காரர்களா அல்லது ஏழைகளா என்பதைப் பொருட்படுத்தாமல், மாநில அரசாங்கத்தின் நிதியில் இருந்து கூடுதல் தானியங்களையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1,000 மதிப்புள்ள உணவுப் பொருட்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இப்போது முழுமையான உணவுப் பற்றாக்குறை உள்ளதால், உணவு பற்றாக்குறை கொண்ட மாநிலமாக கேரளா இருப்பதால் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதை வறுமை ஒழிப்பிற்கான நடவடிக்கை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
மாநிலமெங்கும், 1,300 சமூக சமையலறைகளை நாங்கள் தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் இலவச உணவை அனைவருக்கும் அவை வழங்கி வருகின்றன. ஒரு அழைப்பு விடுத்தாலே, உணவு வீட்டு வாசலில் வழங்கப்படுகிறது; அல்லது அங்கே இருக்கின்ற கவுண்டருக்கு வந்து உணவு பாக்கெட்டை எடுத்துச் செல்லாலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச உணவு வழங்கப்படுவதை நாங்கள் இவ்வாறு உறுதி செய்திருக்கிறோம். வீதிகளில் தூங்கிக் கொண்டிருந்த அல்லது அலைந்து திரிந்து கொண்டிருந்த வீடற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறாக தெருக்களில் யாரும் இல்லை என்பதையும், அனைவருக்கும் உணவு வழங்கப்படுவதையும் நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றோம். இந்தப் பணி குறிப்பிடத்தக்கது என்றே நான் கருதுகிறேன்.
கோவிட்-19 பாதிக்கப்பட்ட பல நாடுகளிலிருந்து, குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் இருந்து மிகப் பெரிய எண்ணிக்கையிலான கேரளவாசிகளின் வருகைக்கான சாத்தியம் இப்போது தெளிவாக ஏற்பட்டிருக்கிறது. அரசு எந்த அளவிற்குத் தயாராக உள்ளது?
இது கேரளாவிற்கு அடுத்த பெரிய சவாலாக இருக்கும். எத்தனை பேர் திரும்பி வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை வருவார்கள் என்று அரசு எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் எத்தனை பேர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெரியாது. அவர்கள் ஒவ்வொருவரையும் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களில் நோய் அறிகுறியற்றவர்கள் இருப்பார்கள் என்பதால், தனிமைப்படுத்தப்படும் காலத்தை 28 நாட்கள் என்று நாங்கள் முடிவு செய்திருக்கின்றோம். எனவே அனைத்து ஹோட்டல்கள், விடுதிகள், கல்லூரிகள், வீடுகள் மற்றும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் குடியிருப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு, கோரிக்கை வைத்துள்ளோம்... இந்த இடங்கள் அனைத்தும் இப்போது ‘ஜியோ டேக்’ (புவிக்குறியீடு) செய்யப்பட்டுள்ளன. அதனால் எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் [வெளிநாட்டில் உள்ளவர்கள்] வந்தவுடன், இரண்டு விஷயங்கள் நடக்கலாம். ஒன்று, இரண்டாம் நிலை பரவல் இல்லாத வகையில், அவர்களை நாங்கள் தனிமைப்படுத்தி வைப்போம்.
இரண்டு, நாம் என்ன செய்தாலும், இரண்டாம் நிலை பரவல் இருக்கலாம் என்பதால், தலைகீழ் தனிமைப்படுத்தல் என்ற உத்தியைப் பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். அதாவது பிற நோய்கள் இருப்பதால் ஆபத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மக்களும் வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். சிறிது காலத்திற்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டு விடும் போது, மற்றவர்களை வெளியே செல்ல அனுமதிக்கலாம். ஆனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். நோயின் அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நபர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்காக, தொடர்ந்து நாங்கள் அவர்களைக் கண்காணித்து வருவோம். கோவிட்-19 காரணமாக அவர்கள் இறந்து போவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இளைஞர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான ஆபத்து இருக்கலாம். இவையனைத்தையும் செய்து முடிப்பதற்கு துல்லியமான திட்டமிடல் தேவைப்படுகிறது.
மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அதாவது 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் குறித்த உலக சுகாதார அமைப்பின் தரவை நாங்கள் பெற்றிருக்கின்றோம். அதிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கான புதிய தகவல்களை அளித்து அதை ஒருங்கிணைத்து வருகின்றோம். பெரிய தரவுத் தொகுப்பாக இருப்பதால், சில சூழல்களில் வருங்கால நிலைமை குறித்த பல்வேறு காட்சிகளை மிகத் துல்லியமாகக் கணிப்பதற்கு அது உதவுகின்றது. இதை வைத்துக் கொண்டு, மாவட்டங்களுக்கும், மற்ற பிராந்தியங்களுக்கும் என்ன செய்து தர வேண்டும் என்பது குறித்து திட்டமிட முடியும். இந்த பெரிய தரவு குறித்த பகுப்பாய்வில் நாங்கள் இப்போது ஈடுபட்டு வருகிறோம். இதில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வருகின்றன.
நீங்கள் குறிப்பிட்ட கேரளா குறித்த உலக சுகாதார அமைப்பின் தரவு சேகரிப்பு பற்றி மேலும் ஏதாவது சொல்ல முடியுமா?
உலக சுகாதார அமைப்பு அதன் [உலகளாவிய] காசநோய் திட்டத்திற்காகச் சேகரிக்கப்பட்ட தரவுகளைச் சேமித்துள்ளது. அது ஒரு பெரிய தரவுத் தொகுப்பாகும். அந்த தரவு மிக நீண்ட காலமாகச் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு மிகுந்த பரிவுடன் எங்களுக்கு அந்தத் தரவை கிடைக்கச் செய்துள்ளது. தரவு பாதுகாப்பிற்கான நெறிமுறைகள் உள்ளன என்பதை உறுதிசெய்த பிறகு நாங்கள் அதைப் பயன்படுத்தவிருக்கின்றோம்.
வளைகுடா நாடுகளில் குடியேறியவர்கள் பலரும் நிரந்தரமாக இங்கே திரும்பி விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?
அவர்கள் எப்போது அங்கே திரும்பிச் செல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. வளைகுடா நாடுகளில் ஏராளமான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். எனவே அவர்கள் இங்கே நிச்சயமாக திரும்பி வருவார்கள். பலர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போது அங்கே திரும்பிச் செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
கேரள பொருளாதாரத்தின் மீது அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
அது ஏற்படுத்துகின்ற தாக்கம் மிகப் பெரிதாக இருக்கும். ஒன்று, அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கும். அது அரசின் கருவூலத்திற்கு பெரும் சுமையாக இருக்கும். இரண்டு, இது பிராந்திய பொருளாதாரத்தின் மீது தலைகீழ் பெருக்க விளைவைக் கொண்டிருக்கும் பணப்பரி மாற்றங்களின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். 1980களின் பிற்பகுதியிலிருந்து இப்போது வரை, முப்பதாண்டுகளாக தேசிய சராசரியை விட வேகமாக கேரள பொருளாதாரம் வளர உதவி வந்த இந்த காரணிகளாலேயே, தனிநபர் வருமானத்தில் மிகக் குறைந்த தரவரிசைகளில் ஒன்றாக இருந்து வந்த கேரளா, இன்று தேசிய தனிநபர் வரு மானத்தை விட 60 சதவீதம் அதிகமாக தனிநபர் வருமானத்தைக் கொண்டதாக மாறி யிருப்பதை உங்களால் காண முடிகிறது. அந்த காட்சி மாறப் போகிறது, அல்லது மாறக்கூடும்.
வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்ற, மாநிலங்களுக்கு இடையில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் பிரச்சினையும் இப்போது இருக்கிறதே?
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்களுக்கு வேலைகள் இல்லை. வருமானம் இல்லாததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். ஆனாலும் இந்தியாவின் இந்த மூலையிலிருந்து அவர்கள் வங்காளத்திற்குச் செல்ல முடியாது. ஆகவே, அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியாது என்றாலும், மனிதநேயம் கொண்ட வாழ்க்கை, உணவு மற்றும் பலவற்றையும் அவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறோம். கேரளாவைப் பொறுத்த வரை அவர்கள் எங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். ஐரோப்பாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் கேரளவாசிகள் வேலைக்குச் செல்கின்ற வரை, இன்னும் பல தொழிலாளர்கள் இங்கே வர வேண்டியிருக்கும். அவர்கள் ஒட்டுண்ணி அல்லது அதைப் போல ஏதோ ஒன்றாக இங்கே இருக்கவில்லை. கேரள அரசும் அவ்வாறு நினைக்கவில்லை. அவர்கள் கேரளாவைப் பொறுத்த வரையில், மிகவும் பயனுள்ள பாத்திரத்தை வகித்து வருகின்றனர்.
கேரள அரசால் இதுவரையிலும் நிர்வகிக்க முடிந்திருக்கிறது. இனி எவ்வளவு காலத்திற்குத் தொடர முடியும்?
உண்மையில் இந்த உதவிகளை இந்திய அரசே வழங்க வேண்டும். வெறுமனே அமைதியான பார்வையாளர்களாக மட்டும் அவர்கள் இருக்க முடியாது. பாஜக அல்லது காங்கிரஸ் என்று எந்தக் கட்சியாலும் ஆளப்படுகின்ற அனைத்து மாநிலங்களுமே தங்களிடம் பணம் இல்லை என்று கூறுகின்றன. வருமானம் எதுவுமற்ற நிலையே இப்போது உள்ளது. எனவே மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறிது காலத்திற்குப் பிறகு, கடுமையான நிதி நெருக்கடி ஏற்படப் போகிறது. நீண்ட சரிவை நாம் சந்திக்கப் போகிறோம். அதிலிருந்து இந்தியா மீளப் போவதில்லை. இந்த உலகமும் அந்தச் சரிவிலிருந்து மீளப் போவதில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், மாநிலங்களால் இந்த சரிவைச் சரி செய்ய முடியாது. மத்திய அரசு ஏராளமான பணத்தை தருவதால் மட்டுமே, பொருளாதாரம் மீட்டெடுக்கப்படப் போவதில்லை. அவ்வாறு எதுவும் நடக்கப் போவதில்லை. பணம் வழங்குவது நிவாரணத்திற்காக மட்டுமே. பொருட்கள் விநியோகத்திற்கான சங்கிலிகள் உடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும். மாநிலத்தின் பற்றாக்குறை உச்சவரம்பை குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்குத் தர வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் உடனடியாகத் தர வேண்டும். சுகாதார அமைப்புகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கித் தர வேண்டும். இவற்றையெல்லாம் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும்; இவற்றைச் செய்யுமாறு அவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இதைச் செய்வதற்கு மத்திய அரசு ஏன் தயங்குகிறது?
அது கருத்தியல் ரீதியானது. பழைய நவீன தாராளமய கருத்தோட்டத்திற்குள் இன்னும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்கள், பணவீக்கம், அதிக வட்டி விகிதம் மற்றும் பல பிரச்சனைகளுக்கு நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு வழிவகுத்து விடும் என்று கருதுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அது இங்கே பொருந்தாது. இது குழப்பமான சிந்தனையாகும். இந்த உலகைப் பாருங்கள். உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்திய அரசாங்கமும் தன்னை எப்படியாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.
அரசாங்கங்கள் இப்போது அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்ற நிலையில், மத்திய அரசு செலவினங்களைக் குறைக்குமாறு மாநிலங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்று நீங்கள் புகார் கூறுகிறீர்கள்!
அதைத்தான் அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் [நிதி] கொடுக்கவில்லை. மார்ச் மாதத்தைச் சேர்த்தால், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.50,000 கோடி அளவிற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டியுள்ளது. ஏப்ரல் வந்தால், அது இன்னும் அதிகமாகும். தற்போது ஜிஎஸ்டி வருமானம் இருக்காது என்பதால், அவர்கள் அதைத் தரமாட்டார்கள். மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை நான்கு சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளது என்றாலும், அது மாநிலங்களை அதிக கடன் வாங்க அனுமதிக்காது. பெரும்பாலான மாநில அரசுகள் செலவினங்களைக் குறைப்பதற்கான எளிதான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளன. பல மேம்பாட்டுத் திட்டங்களை மாநில அரசுகள் கைவிட்டுள்ளன. ஐந்து மாநிலங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வெட்டியுள்ளன. மத்திய அரசு செலவினங்களை அதிகரித்துக் கொண்டு போகின்ற நிலையில், மாநில அரசுகளை செலவினங்களைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்துவது முற்றிலும் பைத்தியக்காரத்தனம். இதற்கு எந்த பொருளாதார அர்த்தமும் இருக்கப் போவதில்லை. மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்து பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கான திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரளா அதிக எண்ணிக்கையிலான கோவிட் 19 பரிசோதனைகளை நடத்தி யுள்ளது. ஆனாலும் செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணி க்கை இன்னும் கொஞ்சமாகத்தான் இருக்கிறது இல்லையா?
இப்போது பரிசோதனைகள் இல்லாமல், நாங்கள் முடங்கிக் கிடக்கிறோம். பரிசோதனைக்கான கருவிகளை நாங்கள் தயாரிப்பதில்லை. சீனா அல்லது கொரியா தயாரிக்கின்ற பரிசோதனை கருவிகள் அனைத்தையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு தனதாக்கிக் கொள்கிறார். ஏற்கனவே இந்தியாவில் சில மாநிலங்களில், எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மற்றும் தில்லி மாநிலங்கள் வாங்கிய பரிசோதனைக் கருவிகளை, அமெரிக்கா எடுத்துச் சென்று விட்டதாக புகார் எழுந்தது. இப்போது உலகில் பரிசோதனைகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. எங்களுக்கும் அது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
இந்தியா ஒரு முக்கியமான பொருளாதார சக்தி. போர்க்கால நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றும் தீர்க்க முடியாத தொழில்நுட்பரீதியான சவால் இல்லை. நமக்குத் தேவையான பரிசோதனைக் கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகின்ற வகையில், இந்திய உயிர்மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். உண்மையில், அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த இந்திய மருந்துத் துறைக்கு ஆதர வளிப்பது ஊரடங்கிலிருந்து இந்தியா வெளியேறுவதற்கான உத்தியின் முக்கிய அங்கமாக இருக்கலாம். சீனா முயற்சித்ததைப் போலவே, நாமும் அதை வேகமாகச் செய்தால், நமக்கென்று ஒரு சந்தை இருக்கும்.
இப்போது சீனா, தென் கொரியாவிலிருந்து வாங்குகிறார்கள். இப்போது அவற்றை நேரடியாக மாநிலங்கள் பெறக்கூடாது என்றும், மத்திய அரசின் மூலமாகவே வாங்க வேண்டும் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது. எனவே இப்போது முற்றிலும் மத்திய அரசின் தயவிலேயே நாங்கள் இருக்கிறோம். மாநிலங்களுக்கு இந்த சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நீண்ட காலத்திற்கு அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆம். ஏனெனில் இது ஒரு நுகர்வோர் மாநிலம் என்பதால், குறுகிய காலத்திற்கு உணவு பற்றாக்குறை இருந்தால்கூட கடுமையான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருட்களின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடரும் போது, வீட்டில் உள்ள அலமாரிகள் காலியாகி விடும். பல பொருட்கள் பற்றாக்குறையாகிவிடும். உணவைக்கூட வெளியில் இருந்தே கொண்டு வர வேண்டியிருக்கும். ஆனால் முடிந்தவரை நாங்கள் உணவுப் பொருட்களைச் சேமித்து வருகிறோம். சில வழிகளில் கேரளா தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. எனவே ஊரடங்கின் போது, மக்கள் வீட்டிற்குள் இருக்கின்ற நிலையில் ‘உங்களுக்குத் தேவையான காய்கறிகளை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். யாருக்குத் தெரியும், ஊரடங்கு முடிந்த பிறகு, கேரள மக்கள் மீண்டும் விவசாயத்திற்கு திரும்புகின்ற நம்ப முடியாத முடிவை ஒரு வேளை நீங்கள் காண நேரிடலாம்.
கேரளாவில் வேலை வாய்ப்பின் மீது என்ன பாதிப்பு இருக்கும்?
இது வரலாற்றில் மிகப்பெரிய சரிவாக இருக்கப்போகிறது. இது ஏற்கனவே இருந்து வருகின்றது. இந்த காலாண்டில், சீனா மற்றும் அமெரிக்கா உட்பட அனைத்து முன்னேறிய பொருளாதார நாடுகளும் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. கோவிட்-19 இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கட்டுப்படுத்தப்பட்டால், இந்த ஆண்டில் நான்கு, ஐந்து அல்லது ஆறு சதவீத வளர்ச்சி குறைவு இருக்கும். ஆனால் தொற்றுநோய் தொடருமே யானால், நமக்கு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது. பொருளாதாரப் பேரழிவிலிருந்து பொருளாதாரத்தை மீட்க நீண்ட காலம் ஆகலாம். கேரளாவில், அது நிச்சயமாக எதிர்மறையான வளர்ச்சியாகவே இருக்கும். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ.7.5 லட்சம் கோடி. நாம் அதில் பாதியை இழக்க நேரிடும்.
சுற்றுலா மற்றும் சேவைத் துறைகளின் மீது மிகப் பெரிய தாக்கம் இருக்கும். சந்தை செயலிழந்து விட்டதால் அனைத்து ஏற்றுமதி தொழில் நிறுவனங்களும் மந்த நிலையிலேயே இருக்கும். இடைநிலை பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் பலவற்றை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். இப்போது அவற்றின் தேவை இல்லாமல் போய்விட்டது. எனவே, தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. வர்த்தகப் பயிர்களுக்கான அகில இந்தியத் தேவை குறையப் போகிறது. சர்வதேச சந்தையில் விலைகள் கடுமையாக குறைந்துபோவ தால், ஊரடங்கு முடிந்ததும் வெளியில் இருந்து இறக்குமதி அதிகரிக்கும். கேரளா மிகப் பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளப் போகிறது. எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டிய கால கட்டத்தில், இது மிகப்பெரிய சமூகப் பிரச்சனைகளுக்கான காலமாக இருக்கப்போகிறது. இது போன்று நம் வாழ்நாளில் ஏற்கனவே நடந்திருக்கவில்லை என்பதால், உண்மையில் யாருக்கும் தெரியாது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், இடைக்கால யுகத்திலும் இது போன்று நடந்துள்ளது. உலகமயமாக்கப்பட்ட உலகில் உலகளாவிய தொற்றுநோய் ஏற்படும் போது என்ன நடக்கும்? நமக்குத் தெரியாது. அதன் தாக்கம் வெளிப்படுவதற்கு நீண்ட காலம் ஆகப்போகிறது. அப்போது கேரளாவோ அல்லது இந்தியாவோ நிச்சயம் பாதிக்கப்படாமல் தனித்து இருக்காது.
கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தைச் செயல்பட உதவுவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தப் போவதாக நீங்கள் சொன்னீர்கள். அதற்கான உங்களுடைய உடனடி முன்னுரிமைகள் யாவை?
இப்போது நோயைக் கட்டுப்படுத்துவதில், அதை முழுமையாக அகற்றுவதில் மட்டுமே கவனம் இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதிலிருந்து வெளியேறுகின்ற உத்தி எங்களிடம் உள்ளது. அதைச் செய்து கொண்டிருக்கிறோம். இங்கே திரும்பி வருகின்ற புலம்பெயர்ந்தோரின் அடுத்த அலை கேரளாவுக்கு வரும்போது என்ன நடக்கப் போகிறது என்பதை நாங்கள் கண்காணித்துக்கொண்டி ருக்கிறோம். மாநிலத்தில் நிலையற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு தற்செயல் திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதுதான் இப்போதைய தேவை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் நாம் திட்டமிட முடியாது. இது நீடித்தது என்று வைத்துக்கொள்வோம், பொருளாதாரத்திற்கு எவ்வாறு வழியேற்படுத்தித் தரப் போகிறீர்கள்? அதை நிரந்தரமாக மூடி வைக்க முடியாது. எனவே, தலைகீழ் தனிமைப்படுத்தலை அறிமுகப் படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. பெரியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை தனிமைப்படுத்திப் பாதுகாக்கவும், மற்றவர்களை வெளியே சென்று வேலை செய்ய அனுமதிக்கவும் வேண்டும். ஆனால் இது ஒருவகையிலான இறுதி நிலையாகும். பிற வகையான நிலைகளும் இருக்கின்றன. இந்த விருப்பத்தேர்வுகளை நாம் கவனித்துப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.