tamilnadu

img

தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்தச் சூட்டில் தண்ணீர் தகிக்கத் துவங்கியுள்ளது. வாக்குக் கேட்டுச் செல்லும் வேட்பாளர்களிடமும் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் தொண்டர்களிடமும் மக்கள் குடிநீர் பிரச்சனையை பெரும் பிரச்சனையாக முன்வைக்கிறார்கள். குடிநீர் மட்டுமல்ல; வறண்டு கிடக்கும் நீர்நிலைகள், விவசாய சீரழிவு, தூர்வாரப்படாத கால்வாய்கள், கடுமையாக மழைப் பொழிந்தாலும் தண்ணீர் தேங்காத கொடுமை, லேசான மழைக்குக் கூட வெள்ளக்காடாய் மாறும் நகரங்கள் என... தண்ணீர் இத்தேர்தலில் ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ளது.  



பேராசிரியர் ஜனகராஜன். நாடறிந்த நீரியல் நிபுணர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) புகழ்பெற்ற பொருளாதார அறிஞரும் பேராசிரியருமான சி.டி.குரியனின் மேற்பார்வையில் ஆய்வு மாணவராக அவர் இணைந்திருந்த நேரம். அப்போது இரண்டு ஆண்டுகளாக ஆய்வுக்கான தளத்தைத் தேடிப் பயணித்துக்கொண்டிருக்கையில் வாசித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தின் அடிக்குறிப்பில் ஆய்வுப்பொருள் துலக்கம் பெற்றது. ‘மாறிய வேளாண்மை பொருளாதாரத்திலுள்ள, மாறாத நிலப்பிரபுத்துவ தாக்கங்கள்’. அதன்வழி ஆய்வுப்பணிகள் நகர 1980-களில் வேளாண்மையில் தண்ணீர் ஒரு சந்தைப் பொருளாக மாறிவிட்டதைக் கண்டு உணர்ந்தவுடன், தண்ணீரே அவரது எதிர்கால ஆய்வின் மையச்சரடாக மாறிவிட்டது. வேளாண்மைப் பொருளாதாரம் மாற்றமடைந்திருந்தாலும் நிலப்பிரபுத்துவ தன்மைகளும் தாக்கங்களும் மாறாமல் இருப்பதற்கு, அடிப்படையான காரணம் நிலம் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படாததே என உறுதியாகக் கூறுகிறார். 


சந்திப்பு : ஜி.செல்வா


வளர்ச்சி எனப்படுவது யாதெனில்...


இன்றைய உலகளாவிய தாராளமய சந்தைப்பொருளாதார யுகத்தில் சமூக, பொருளாதார,நகர்ப்புறத் தொழில் வளர்ச்சி விரிவாக்கம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.வளர்ச்சி என்பது நீடித்து, நிலைத்து முன்னேறுவதாக இருக்கவேண்டும். ஆட்சியாளர்கள் ஏழு சதவீதவளர்ச்சியடைந்துள்ளோம் என சொல்வதெல்லாம், பக்கச் சார்போடு சொல்லப்படும் கணக்கீடு. இந்தப்பொருளாதார உற்பத்தி - வளர்ச்சிக்காக இயற்கைவளங்கள் எவ்வாறு, எப்படி, எந்தளவு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என கணக்கீடு உள்ளதா? சுற்றுச்சூழல் கணக்கீடு, சூழலியல் தொகுப்பு மதிப்பீடு (Environmental accounting and Eco

system valuation) செய்யப்பட்டுள்ளதா? உத்தர்கண்ட்,காஷ்மீர், சென்னை, கேரளம் ஆகிய பகுதிகளில்ஏற்பட்ட மழைவெள்ளம், வீசும் அனல்காற்று, வறட்சிஆகியவை இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை. சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டிருப்பதன் தாக்கத்தைவிவசாயத்தில் அதிகமாக உணரமுடிகிறது.




நகர்மயமாகும் தமிழகமும் தீவிரமாகும் தண்ணீர் பிரச்சனையும்


நவீனத் தொழில்நுட்பங்கள் புதுப்புது மாற்றங்களை கொண்டுவருகின்றன. நகரமயமாக்கல் மக்களின் தேவையை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் 1947இல் மக்கள்தொகை 35 கோடி.இதில் 20 சதவீத மக்கள் நகர்ப்புறத்திலும் மீதி 80 சதவீதம் கிராமங்களிலும் வசித்தனர். 2019-லோ 130கோடி மக்கள் தொகையில் 38 சதவீதம் நகர்ப்புறத்தில்வசிக்கின்றனர். இந்தியாவிலேயே அதிக நகர்மயமான மாநிலம் தமிழகம். 52 சதவீதமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். எனவே, மற்ற மாநிலங்களைவிட நகர்மயமாக்கலின் தாக்கம் தமிழகத்தில் அதிகம். அதன் நேரடியான வெளிப்பாடுகளில் ஒன்றுதண்ணீர் பிரச்சனை. சமுதாயம் மாறிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், மாற்றங்களில் இடையிட்டுமுறைப்படுத்தத் தவறிவிட்டோம்.


தவிக்க வைக்கும் தண்ணீர்க் கொள்கை


இந்தியாவில் முதன்முதலில் தேசிய தண்ணீர் கொள்கை (National Water Policy) 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு அந்தக் கொள்கை மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இக்கொள்கையால் எந்தவிதமான பிரயோ சனமும் இல்லை. இக்கொள்கையை ஆதாரமாகக் கொண்டு எந்தவொரு நபரும் நீதிமன்றத்துக்குச் சென்று தன் உரிமையைக் கோர முடியாது. 


1987ஆம் ஆண்டில் தண்ணீருக்கான முன்னுரிமை என்பது முறையே குடிநீர், வேளாண்மை, தொழிற்சாலை, நகர்ப்புறத் தேவை என்றிருந்தது. அதுவே2012இல் குடிநீர், தொழிற்சாலை, நகர்ப்புறத் தேவை,வேளாண்மை என மாற்றி வரிசைப்படுத்தப்பட்டு விட்டது. வேளாண்மைக்கான தேவையை கடைசியானதாக மாற்றிவிட்டது தேசிய தண்ணீர் கொள்கை. 


விரயமாக்கப்படும் தண்ணீரும் வியாபாரமும்  


தண்ணீர்த் தேவை அதிகமாகும்போது தண்ணீர் விநியோகம் செய்யும் அரசு நிறுவனங்கள்  (Chennai Metro Water, TWAD, Etc) தங்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்திக் கொள்ளாமல் பழைய தொழில்நுட்பங்களையே பயன்படுத்துகின்றன. மக்களின் தண்ணீர் தேவைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதிலும் 20 முதல் 30 சதவீதம் கசிவு மூலமேவீணாகிறது. ஊழல், கடன் சுமையால் இந்த அமைப்புகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. இதைச் சமாளிப்பதற்காக உலக வங்கி, ஆசிய வங்கி உள்ளிட்டபன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் வாங்கப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் வழியாகவே இது நடைபெறுகிறது. சுருங்கக் கூறினால் கடன் சுமையில்தத்தளித்துக் கொண்டிருக்கும் மாநில அரசுகளிடம்தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் எனபன்னாட்டு நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன. இந்தநிர்பந்தங்களுக்குப் பணிந்து, பல்வேறு மாநில அரசுகள் மிக வேகமாகத் தண்ணீர் விநியோகத்தைத்தனியார்மயமாக்கி வருகின்றன. ஆனால், பன்னாட்டுநிறுவனங்கள் இயற்கை ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் தண்ணீரை விநியோகிக்கும் வேலையை மட்டும்தான் கருத்தில் கொண்டுள்ளனவே தவிர நீர் சுத்திகரிப்பு, மறுசுழற்சி செய்து நீரைப்பயன்படுத்துவது போன்றவற்றில் அவை ஈடுபடுவது இல்லை. இப்படியாக இன்று தண்ணீர் விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.  


கோவையில் நடப்பது என்ன? 


கோயம்புத்தூர் மாநகராட்சி பிரெஞ்சு நிறுவனமான ‘சூயஸ்’ உடன் ரூ. 3,200கோடி ஒப்பந்தம் போட்டது இதற்கு ஒரு சான்று. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் சிறுவாணித் தண்ணீரை எடுத்து, அதாவது நம்முடைய இயற்கை வளமான தண்ணீரை எடுத்து நமக்கே வியாபாரம் செய்வதற்கு, எதற்குப் பிரெஞ்சு நிறுவனம்? ஏன் இதை அரசே ஒழுங்காகச் செய்யக்கூடாது? அரசுநீர்வளத் துறை என்ன செய்கிறது? திறமையான தொழில்நுட்பச் செயற்பாடுகளுக்காக தனியார் நிறுவனத்தை நம்பத் தொடங்கினால் நகர்ப்புறத்திலுள்ள30 முதல் 40 சதவீத ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தண்ணீர் விநியோகத்தை தனியாருக்குக் கொடுத்துவிட்டால் அரசோ தனிநபரோ நீர் சேகரிப்பு, ஆழ்துளைக் கிணறு இட்டு நீரெடுப்பது போன்றவை இயலாத காரியமாகிவிடும். தண்ணீர் பயன்பாட்டுஅமைப்புகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும். தண்ணீர் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு விலை நிர்ணயிக்கப்படுவது தவறு.


செயற்கையாக உருவாக்கப்படும் தண்ணீர்ப் பஞ்சம்


கடந்த 150 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆண்டு மழையளவு பெருமளவு மாற்றமடையாமல் இருக்கும்போது, வறட்சி ஏன் ஏற்படுகிறது? 2015இல்வரலாறு காணாத வெள்ளம், 2016இல் வரலாறு காணாத வறட்சி. இந்த ஆண்டு (2019இல்) சென்னைகுடிநீர் வாரியம் மார்ச் மாதத்திலேயே குழாய் மூலமாகஅல்லாமல், 7,600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்துவருகிறது. இனிவரும் மாதங்களில் இதுஇரண்டு மடங்காக மாற சாத்தியமுள்ளது. சென்னைநகரத்துக்கு தண்ணீர் தரும் நீர்நிலைகள் அனைத்தும்கிட்டத்தட்ட வறண்டுவிட்டன. வடகிழக்குப் பருவமழைவரை தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம்என்பது புரியாத புதிராகவே உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவே பல்வேறு ஐ.டி. நிறுவனங்கள், உணவகங்கள் மூடத் திட்டமிட்டுள்ளன. சென்னையின்ஓராண்டு சராசரி மழையளவு 1,350 மில்லி மீட்டர். சராசரியாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் 1,800 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் நல்ல மழை பெய்யும் பகுதிகள். அவ்வாறு, மழைபெய்யும்போது தேக்கிவைத்துப் பராமரிப்பதற்கு எந்தநடவடிக்கையும் இல்லாதபோது, தண்ணீர் பஞ்சம் ஏற்படத்தானே செய்யும். ஆறு, ஏரி, சதுப்புநிலம் போன்ற நீராதாரப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. நீர்வழித் தடங்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றும் அரசு, பெரும் அடுக்குமாடி குடியிருப்புகளை, நிறுவனக் கட்டிடங்களை ஒன்றும் செய்வதில்லை. சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வெள்ளமும் மனிதப் பிழையால் (Manmade disaster) ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


எல்லாம் இருந்தும் ஏன் அந்த துயரம்?


சென்னையில் இயற்கையாக இருப்பதைப் போன்று வெள்ள வடிகால் வசதி வேறு எந்தநகரத்திலும் இல்லை. சென்னை நகருக்குள் மூன்றுஆறுகள், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்துகடலைச் சென்றடைகின்றன. வடபகுதியில் கொசஸ்தலை ஆறு, மத்தியில் கூவம் ஆறு, தெற்கில் அடையாறு உள்ளன. இந்த 3 ஆறுகளையும் ஒருங்கிணைக்கும் பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் காலத்தில்அமைக்கப்பட்டது. இது தவிர ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், வேளச்சேரி, மாம்பலம் கால்வாய் போன்று16 பெரும் ஓடைகள் சென்னையில் பாய்கின்றன. இவைஅனைத்தும் இருந்தும் 2015இல் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது எப்படி? 500 பேர், 20ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்கு அரசு செய்த தவறே காரணம். 


சோம்பேறித்தனமான தீர்வு


மழைநீர் சேகரிப்பு (Rain water harvesting) என்பது பெய்யும் மழையை ஏரி, குளம்,கண்மாய் போன்றவற்றில் தேக்கி வைப்பதுதான்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போதுள்ள 3,600 முதல் 4 ஆயிரம் ஏரிகளைப்பாதுகாத்து வலுப்படுத்தினால் 150 டி.எம்.சி. முதல்200 டி.எம்.சி. தண்ணீர் சேகரிக்க முடியும். சென்னை மாநகரத்துக்கு ஒருமாத குடிநீர்த் தேவை ஒரு டி.எம்.சி.தண்ணீர். ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர். எனவே, தண்ணீர் பிரச்சனையை மிக எளிதாகத் சமாளிக்க முடியும். வறட்சி எட்டியே பார்க்காது.நிலைமை இவ்வாறு இருக்க, சென்னையை வறட்சியான பகுதியாக அறிவித்து கடல்நீரை குடிநீராக்கும் மோசமான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே இரண்டு தொழிற்சாலைகள் மூலம் ஒவ்வொரு நாளும் 20 கோடி லிட்டர்கடல்நீரைக் குடிநீராக்கி வருகின்றனர். இன்னும் புதிதாக இரண்டு தொழிற்சாலைகளைக் கட்டி அதன்மூலம்ஒவ்வொரு நாளும் 35 கோடி லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கத் திட்டமிட்டுள்ளனர்.தண்ணீர் தேவைக்கு வேறுவழியே இல்லாத இஸ்ரேல், சவூதிஅரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியகிழக்கு நாடுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால், தேவைக்கேற்றாற்போல் மழை பெய்துகொண்டிருக்கும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மிகமோசமான, சோம்பேறித்தனமான தீர்வு. இதன்மூலம் கடற்கரையோர சூழலியல்தொகுப்பு (Coastal Ecosystem) கடுமையாகச் சேதமடையும். 


ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? ஏரிகள் எங்கே? மணல் எங்கே?



கடந்த 25-30 ஆண்டுகளாக ஆறு, ஏரி, கண்மாய் போன்றவற்றைத் தூர்வாருவதற்காக உலக வங்கி, ஐரோப்பிய யூனியன், ஆசிய வளர்ச்சி வங்கி,ஜப்பான் போன்றவற்றிடம் இருந்து பல்லாயிரம் கோடிரூபாய் கடனாக வாங்கி அரசு செலவழித்துள்ளது. சமீப காலத்தில் தமிழக அரசு ஐஹஆறுஹசுஆ திட்டம்மூலம் ஏரிகளைப் பராமரிக்க நான்காயிரம் கோடி ரூபாய் செலவழித்து உள்ளது.இப்படித் தூர்வாரப்பட்ட, பராமரிக்கப்பட்ட ஏரிகளின் பட்டியலை அரசு வெளியிட வேண்டும். எப்படி பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். புதிதாக 500 பேருந்துகள் வாங்கியதை எப்படி மக்களுக்குக் காண்பிக்கிறார்களோ, அதுபோல தூர்வாரப்பட்ட ஏரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்.ஏரியின் கொள்ளளவு, மண், வண்டல் போன்றவற்றின் தன்மை, வரத்துக் கால்வாய் ஆகியன குறித்துகவனத்தில் எடுத்துக்கொண்டு பராமரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், தூர்வாரப் போவதாக சொல்லி ஜே.சி.பி. இயந்திரங்களை ஏரிகளுக்குள் இறக்கி நல்ல மண் கிடைக்கும் இடத்தில்மட்டும் மண் எடுக்கிறார்கள். இப்படி கண்மூடித்தனமாக மண் எடுக்கப்பட்டு இயற்கைவளம் சீரழிக்கப்படுகிறது. கணக்கு வழக்கில்லாமல் பணம் கொள்ளைஅடிக்கப்படுகிறது. உள்ளபடியே கூறினால், பணத்தையும் செலவழித்து ஏரிகளின் வளத்தையும் இழக்க வைத்து நடைபெறும் இந்தப் பணிகள், எதுவும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு பதிலாக ஆறு, ஏரிகளில் உள்ள மண்,வண்டல் போன்றவற்றை தூர்வாரி விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டே பராமரிப்புப் பணிகளைச் செய்துவிடலாம்.


நகரமயமாக்கலில் செய்ய வேண்டியது என்ன?


நகரமயமாக்கல் - மெதுவாகவும் சீராகவும் நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். 1990-களுக்குப் பிறகு இது வேகமெடுக்க ஆரம்பித்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தாராளமயமாக்கல், நவீனத்தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டதகவல் தொழில்நுட்பச் சந்தைகள் ஹைதராபாத், சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பெருகஆரம்பித்தன. நகர்ப்புற விரிவாக்கம் நடக்கும்போது அந்த இடத்தின் புவியியல் அமைப்பு குறித்துப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, தற்போதுள்ள சென்னைப் பெருநகரம் 1,190 சதுர கிலோமீட்டர். விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள சென்னையின் பரப்பளவு 8,800 சதுர கிலோ மீட்டர். இப்படி விரிவுபடுத்தும்போது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் (நுஉடிடடிபiஉயட ழடிவளயீடிவ) எவை என்று எல்லை வரையறுக்கப்பட வேண்டும். நீர்நிலைகள், மரம், செடி, கொடிகள், சதுப்புநிலம், காடுகள் என அடையாளப்படுத்தப்பட்டவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வரையறுக்க வேண்டும். இவற்றை அழித்தோ சேதப்படுத்தியோ சாலை, மேம்பாலம், கட்டிடங்கள் கட்டுவது கூடவே கூடாது.இதுபோன்றே தமிழகமெங்கும் உள்ள நீர்நிலைகளை அடையாளம் கண்டு பாதுகாத்தாலே தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் உருவாவதை தடுத்து நிறுத்திவிட முடியும். இதுபோல நகர விரிவாக்கப் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்பு ஏரி, குளம், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள், மரம் செடிகொடிகள், காடுகள், சதுப்புநிலப்பகுதி போன்றவற்றைப் பாதுகாக்க ஆளும் அரசுகள் முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராகஉள்ளனவா?


;