வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தொழிற்சாலைகளும், நவீன தொழிலாளி வர்க்கம் உருவான காலத்திலேயே உரிமைக்கான போராட்டமும் துவங்கியது. துப்பாக்கிச்சூடு, தூக்குதண்டனை, சிறைக் கொடுமைகள், அடக்குமுறை என போராட்டத்தை ஒடுக்க முயற்சித்தும் ஆளும் வர்க்கம் வெற்றி பெறவில்லை. தொழிலாளர் போராட்டத்தால் பல்வேறு தொழிலாளர் நலசட்டங்கள் உருவானது. நேரடி போராட்டம் மட்டுமின்றி சட்டரீதியாகவும் பலன்களைப் பெறும் வாய்ப்பும் உருவானது.
தொழிலாளர்களது பலன்களை மறுக்க ஒப்பந்தமுறை உருவானது. ஒப்பந்த ஊழியர்கள் உரிமைக்கான போராட்டம் தொடங்கியது. 1972 ஒப்பந்த ஊழியர் சட்டம் உருவானது.ஆனால் எந்த சட்ட வரையறையும் இன்றி உருவானது அணிசேரா தொழிலாளர்கள் என்ற வர்க்கம். அணிசேரா தொழிலாளர்களுக்கு சமுகப்பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கைக் கான போராட்டம் தொடங்கியது. வேறு வழியின்றி சட்டங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அணிசேரா தொழிலாளர்கள் சட்டம்
1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1982ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் எவ்வித பலனும் இன்றி பெயரளவிற்கான சட்டமாகவே இருந்தது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமுலான பின்பு அணிசேரா தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்கள் சுயதொழிலாகவும் உடலுழைப்பு தொழிலை மேற்கொண்டனர். புள்ளி விவரங்களின்படி இந்தியாவில்உள்ள தொழிலாளர்களில் 93 சதமான தொழிலாளர்கள் அணிசேரா தொழிலாளர்களாகவே உள்ளனர்.வலுவான போராட்டங்கள் காரணமாக தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்சட்டம் படி 1993ஆம் ஆண்டு கட்டுமான நலவாரியம் அமைக்கப்பட்டது. கட்டுமான தொழிலாளர் தவிர்த்து, இதர தொழிலாளர்களுக்கும் நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின்பேரில் சிஐடியு தலைமையில் வலுவான போராட்டங்கள் நடைபெற்றன.
சிஐடியு போராட்டமும், நலவாரியமும்
கட்டுமான தொழிலாளர்களைப்போல் மற்றஅணிசேரா தொழிலாளர்களுக்கும் நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்ட கோரிக்கையுடன் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் உள்ளிட்ட சிஐடியு தலைவர்கள் அன்றைய முதல்வர் கலைஞரை சந்தித்தனர். பரந்துகிடக்கும் முறைசாரா தொழிலாளர்களை அரசு எப்படி கணக்கெடுக்க முடியும் என கலைஞர் கேட்டார். நாடு முழுவதும் அரசுக்குச் சொந்தமாக எத்தனை மரம் உள்ளது, குளம் உள்ளது என கணக்கெடுக்கும் அரசால், தொழிலாளர்களை கணக்கெடுக்க முடியாதா என அ.சவுந்தரராசன் கூறினார். கேரளாவில் நலவாரியம் உள்ள விவரத்தையும் கூறினர். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர், அரசு அதிகாரிகளையும், சிஐடியு தலைவர்களையும் கேரளாவிற்கு அனுப்பி நலவாரிய செயல்பாடு சம்பந்தமாக நேரில் கண்டு அதனடிப்படையில் தமிழ்நாட்டிலும் நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது 17 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.
நலவாரிய நோக்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை
விபத்தால் மரணம், இயற்கை மரணம், கல்விஉதவித்தொகை போன்ற பல்வேறு சலுகைகள் இன்று நலவாரிய உறுப்பினர்களுக்கும் உள்ளது. நீண்ட போராட்டத்திற்குப்பின் 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 1000ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட இந்த சலுகைகள் முழுமையாக அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கவில்லை. தொழிலாளர்களுடைய பலன் கேட்புமனுக்கள் உரிய காலத்தில் தீர்வு செய்யப்படுவதில்லை. விஏஓ சான்று வேண்டும் என்றும் தொழிலாளர்கள் நேரடியாக வரவேண்டும் என அலைக்கழிக்கப்பட்டனர். தொழிற்சங்கமே தொழிலாளர்களைப் பதிவுசெய்யலாம் என ஆரம்பத்தில் இருந்த வழிமுறைகளை மாற்றி குழப்பத்தை உருவாக்கியது அரசு. போலி சங்கங்களும், இடைத்தரகர்களும் இதை வியாபாரமாக மாற்றிய நிலையில் நலவாரியத்தின் மீதான நம்பிக்கை குறையும் நிலையே ஏற்பட்டது. நலவாரிய குளறுபடிகளை போக்க சிஐடியு தொடர்போராட்டங்களை நடத்தி வருகிறது.
கொரோனா கற்பித்த பாடம்
மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அறிவித்தபோதே ஊரடங்கு கால நிவாரணமாக பணம் உள்ள வாரியங்களான கட்டுமானம், ஓட்டுனர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ. 1000/- நிவாரண உதவி அளிப்பதாக அரசு அறிவித்தது. மற்ற வாரிய உறுப்பினர்களுக்கும் இப்பலன் அளிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் சிஐடியு போராடியது. வேறு வழியின்றி மற்ற வாரிய உறுப்பினர்களுக்கும் பணம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. ஆவணப் பராமரிப்பில் உள்ள கோளாறு காரணமாக இன்னும் பலருக்கு நிவாரணநிதி கிடைக்கவில்லை.
எல்லோருக்கும் பலன்கோரி சாலைப்போக்குவரத்து சம்மேளனம் வழக்கு
கொரோனா நிவாரணநிதி நலவாரிய திட்டஅடிப்படையிலான நிதி அல்ல. இது பேரிடருக்காககொடுக்கப்படுவது. சுமார் 30 லட்சம் மோட்டார் தொழிலாளர்கள் இருந்தாலும் அரசின் குளறுபடி காரணமாக 85000 பேர் மட்டுமே வாரியத்தில்பதிவு செய்துள்ளனர். எனவே வாரிய உறுப்பினர் என்ற நிபந்தனையின்றி அனைவருக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். வாரியத்தை முறைப்படுத்த வேண்டும் என சிஐடியு சாலைப்போக்குவரத்து சம்மேளனம் உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராணை மனுதாக்கல் செய்தது (WP 7520/2020). இதைத் தொடர்ந்து ஆட்டோ சம்மேளனமும் நீதிப்பேராணை மனுதாக்கல் செய்தது (WP 7529/2020).
வாரியத்தை முறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு
நாம் கோரிய அடிப்படையில் நிவாரணநிதி வழங்க அரசிடம் பணம் இல்லை என அரசுத் தரப்பு வாதாடியது. வாரிய உறுப்பினர்களுக்கு மட்டும் நிவாரணம் என்ற அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனஅரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கொள்கை முடிவில் தலையிட முடியாது; எனவே நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட முடியாது என முடிவுக்கு வந்தது. ஆனால் வாரிய செயல் பாடுகள் சம்பந்தமாக நாம் வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.கல்வி மறுக்கப்பட்ட, போதுமான கல்வி வாய்ப்பில்லாத தொழிலாளர்களே உடல் உழைப்புத் தொழிலாளர்களாக உள்ளனர். வாரியத்தை உருவாக்கி சட்டம் போடுவது மட்டும் அரசின் வேலையில்லை. எல்லோரையும் வாரிய உறுப்பினர்களாக்க வேண்டும். தொழிலாளர்களிடம் வருவாய்த்துறை சான்று (VO) கேட்பது தேவையற்றது. எல்லோரையும் வாரிய உறுப்பினராக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாதிட்டோம்.இனி வருவாய்த்துறை சான்றை தொழிலாளர்கள் கொடுக்க வேண்டியதில்லை; தொழிலாளர்துறையே வருவாய்த்துறைக்கு அனுப்பி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் என அரசுத்தரப்பில் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,வருவாய்த்துறை சான்றிதழ் தொழிலாளர் கொடுக்க வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள் ளது. தமிழகம் முழுவதும் அனைத்து முறைசாரா தொழில்களிலும் எவ்வளவு தொழிலாளர்கள் உள்ளனர் என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் கணக்கெடுக்க வேண்டும். 8 வார காலத்திற்குள் இப்பணியை முடிக்க வேண்டும்எனவும், அனைவரையும் வாரிய உறுப்பினராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடலுழைப்பு தொழிலாளர்கள் சட்டம் 1982இல் வாரியத்திற்கான நிதியை ‘செஸ்’ வரி மூலம் திரட்ட வழி உள்ளது. இப்போது கட்டுமான வாரியத்தில் இதனடிப்படையிலேயே நிதிஉருவாக்கப்பட்டுள்ளது. முறைசாரா ஓட்டுனர்வாரியத்தில் வாகன பதிவின்போது ஒரு சிறுதொகையும் வசூலிக்கப்படுகிறது. மற்ற வாரியத்துக்கு நிதி உருவாக்க சட்டப்படி ஈவுத்தொகை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை அரசு அமுல்படுத்தாததால் தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர் என வாதிட்டேம். இதை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், முறைசாரா தொழிலாளர்கள் சேவையைப் பயன்படுத்தி யார் பலன் பெறுகிறார்களோ அவர்களிடம் இருந்து நிதி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உதாரணமாக நூல், துணி உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வருகிறது; தையல் தொழிலாளர்கள் சேவையின்றி நூலும், துணியும் விற்பனை ஆகாது; அப்படியெனில் நூல், துணி மற்றும்தையல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளிடமிருந்து நலவாரிய நிதி வசூலிக்க வேண்டும். அதேபோல் சுமைப்பணி தொழிலாளர்கள் பணி செய்யாமல் கடைவீதிக்கு சரக்கு விற்பனைக்கு வராது; எனவே சரக்கு உற்பத்தியாளர்களிடம் வாரிய நிதி வசூலிக்க வேண்டும். மோட்டார் தொழிலாளர்கள் பணிசெய்யாமல் டீசலும், பெட்ரோலும், உதிரிபாகமும் விற்பனை ஆகாது;எனவே எண்ணெய் நிறுவனங்கள் உதிரிபாகஉற்பத்தியார்களிடமும் செஸ் வசூலிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு தொழிலையும் எடுத்தால் எல்லாவற்றிற்கும் மொத்த உற்பத்தியாளர்கள் இருப்பர். இவர்கள் அனைவரிடமும் வாரிய நிதி வசூலிக்க வேண்டும் என்பதே நீதிமன்ற உத்தரவு. இது சம்பந்தமாக 12 வார காலத்திற்குள் முடிவு எடுக்க நீதிமன்றம் அரசுக்கு காலவரையறை நிர்ணயம் செய்துள்ளது.
அரசு என்ன செய்ய வேண்டும்?
கள எதார்த்தம், நீதிமன்ற உத்தரவு அனைத்தையும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட வேண்டும். அனைத்திற்கும் ஆதார்அட்டை கட்டாயம் ஆன பின்பு வருவாய்த்துறைசான்றே தேவையில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து தொழிலாளர்களையும் பதிவுசெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது ஆன்லைன் பதிவு என அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் பதிவிற்கு உரிய மென்பொருள், சர்வர் போன்ற அடிப்படை கட்டமைப்பை உருவாக்காமல் அவசர கோலத்தில் ஆன்லைன் பதிவு என அரசு அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 6 மாதகாலமாக வேலையின்றி தவிக்கும் முறைசாரா தொழிலாளர்களைஆன்லைன் பதிவு என்ற பெயரில் அலைக் கழிக்கும் அவலத்திற்கு வழிவகுத்துள்ளது. எனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள மத்திய சங்கங்களுடன் பேசி சங்கங்கள் மூலம் பதியவும் பதிவை எளிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முறைசாரா வாரியத்திற்கு என நிர்வாக குழுமம் (Board) மாற்றியமைக்கப்பட வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதிகளைக் கொண்ட குழுமம் உருவாக்கப்பட வேண்டும். வாரியத்திற்கு நிதிதிரட்டவும், வாரிய பலன்களை மேம்படுத்தவும், அரசு வழிவகை செய்ய வேண்டும். உடலுழைப்பையே தங்கள்வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் தொழிலாளர்கள் எவ்வித சேமிப்புமின்றித் தான் வாழ்ந்துவருகின்றனர். புள்ளி விவரப்படி தினமும் சுமார் 20,000 தொழிலாளர்கள் 60 வயதைக் கடக்கின்றனர். எனவே இவர்களுக்கு முறையாகஓய்வூதியம் கிடைக்க வேண்டும். அதற்கேற்ப நிதியைப் பலப்படுத்த வேண்டும். தேசத்தின் முன்னேற்றத்திற்கு தனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர்கள் அரசின் கருணையால் வாழும் அபலைகளாக இருக்கமுடியாது. இவர்களது எதிர்காலதின் நலன்களையும் பாதுகாக்க வாரியம் மேம்படுத்த வேண்டும்.இதற்காக சிஐடியு ரோட்டிலும், கேட்டிலும் போராடும். இப்போராட்டத்திற்கு லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களை அணிதிரட்டுவோம், வெல்வோம்.
====கே.ஆறுமுகநயினார்==
தலைவர், தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)