tamilnadu

img

வீதிமன்றம் வீறுகொண்டு எழும்- தே.லட்சுமணன்

கடந்த ஜனவரி 13 அன்று இருபது கட்சிகள் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பின் பேரில் கூடி, மோடி ஆட்சி கொண்டு வந்துள்ள  குடியுரிமை திருத்தச் சட்டம் எதிராக விவாதித்து சில முக்கிய முடிவுகள் எடுத்தன. இந்திய மக்களை மதத்தின் பேரால் கூறுபோடும் இந்தச் சட்டங்கள் ரத்தாகும் வரை, தொடர்ந்து போராடுவது என்பதுதான் அந்த முடிவு. ஆனால் இருபது கட்சிகள் கூடி எடுத்த தீர்மானங்கள் பாகிஸ்தானை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அரண்டன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல் யார் பாஜக-வுக்கு எதிராகப் பேசினாலும் பாகிஸ்தானின் கையாள் என்பார்கள். பாஜக-வினருக்கு இது ஒரு வாடிக்கை. எதிர்க்கட்சிகளை மிரட்ட இதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்களாம். இது விஷமத்தனமானது. உண்மையிலே பாகிஸ்தான் மகிழ்ச்சி அடைந்திருப்பது பாஜக இரண்டாவது முறையும் இந்தியாவில் ஆட்சிப்பீடம் ஏறியிருப்பதினால்தான். பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான்கான் பாஜக-வின் தேர்தல் வெற்றியை வரவேற்று அறிக்கை விட்டார். இது சம்பிரதாய பூர்வமாக விட்ட அறிக்கையல்ல!  உண்மையிலே இது பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி. பாஜக-வினர் இந்தியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக செய்யும் அரசியல் நடவடிக்கைகளை வகையாக அங்கே அரசியல் நடத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறே இந்தியாவில் பாஜக அரசியல் நடத்த பாக்கிஸ்தானைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். “பாம்பின் கால் பாம்பறியும்”  என்பது போல, “நரியின் குணம், நரி அறியும்!”  என்பது போல, இது முழுக்க முழுக்க விஷமத்தனமான அரசியல் லாவணி.  இதேபோல, மத்திய அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க ராணுவம்  தயாராக இருக்கிறது என்று ராணுவத் தளபதி  நரவானே  கூறியிருப்பதை வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன், நமது இராணுவப் படை மீது நாடு முழு நம்பிக்கை வைத்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் அறிக்கைவிட்டார்.  இது ஒன்றுபோதும், பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான்கானுக்கு. அங்கே அவர் அரசியல் நடத்த இதை  கச்சிதமாகப் பயன்படுத்துவார். இவையெல்லாம் சாதாரண  விஷயம் அல்ல, இரண்டு நாடுகளும் அணுகுண்டுகள் வைத்துள்ளன. வீண் வீராப்பு பேசி சவால்விட்டு விபரீதத்தை  விலை கொடுத்து வாங்கிய கதையாக ஆகிவிடும். முப்படையின் உயர்மட்ட தளபதியாக ஆக்கப்பட்டுள்ள பிபின் ராவத்தும் பகிரங்கமாக அரசியல் பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை விமர்சனம் செய்தார். மாணவர் களை வழி நடத்தும் தலைமைகளின் பண்பு சரியில்லை என்றார். இப்படி பேசிய இவர், ஓய்வு பெற்றுப் போகாமல், முப்படைக்கும் மூத்த தளபதியாக உருவாக்கப்பட்ட பதவியில் அமர்ந்துவிட்டார். இது முறைகேடான ஏற்பாடு.

இவர்களுக்கு ‘ராணுவ சர்வாதிகாரம்’ தேவைப்படுகிறது
சுதந்திர இந்தியாவில், குடியரசு ஆட்சியில், நாடாளுமன்ற ஜனநாயகத்தில், மூன்று இராணுவப் படைகளும் தனித் தனியான நிர்வாக அமைப்பு முறையில் இயங்க வேண்டும். இந்த மூன்றையும் இணைக்கும்  புள்ளியாக ஓர் இராணுவ அதிகாரம் பெற்ற அமைப்பு இருக்கக் கூடாது. சில நெருக்கடி காலத்தில் அது சிக்கலில் போய் முடியும் என்றுதான் நம் அரசியல் சாசன முன்னோடிகள் ஆழ்ந்து, சிந்தித்துதான் தனித் தனியான ஏற்பாட்டைச் செய்து வைத்தார்கள். அண்டை நாடான பாகிஸ்தான் என்ன கதியாயிற்று? ராணுவ ஆட்சியில் அவதிப்பட்டதல்லவா? ஆட்சியாளர்களுக்கும், இராணுவத்துக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும் இராணுவம் ஆட்சியாளர்களின் ஆளுகையில்தான் இருக்க வேண்டும் என்பதினால்தான் மூன்று படைகளும் தனித்தனி நிர்வாக ஏற்பாட்டில் இயங்க வைத்தார்கள்.  நாம் சுதந்திரம் பெற்ற ஏக காலத்தில் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் (பர்மா) போன்றவை தனி அதிகாரம் பெற்ற ஜனாதிபதி ஆட்சி அல்லது இராணுவ ஆட்சி என அல்லல்படுகின்றன. இந்தியாதான் நாடாளுமன்ற குடியரசாக உருவாகியது. சுதந்திரத்திற்காக போராடிய சில ஜனநாயகத் தலைவர்கள் இதில் எச்சரிக்கையாக இருந்தார்கள். இப்போது மத்தியில் ஆட்சியிலுள்ள ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதிகளின் பாஜக ஆட்சியாளர்களின் நோக்கமென்ன? இந்தியா போன்ற ஒரு பன்முக நாட்டில் “இந்துராஷ்டிரா” இந்து ராஜ்ஜியம் உருவாக வேண்டுமானால் அவர்களுக்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி தேவைப்படுகிறது. இதை நோக்கித்தான் பாஜக ஆட்சி நகர்கிறது.  ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஊழியர்களுக்கு வகுப்பு எடுப்பதில் முக்கியமான பாடங்கள் இரண்டு. அதில் ஒன்று மனு தர்மம் பற்றியது. மற்றொன்று அர்த்தசாஸ்திரம் பற்றியது. அந்த அர்த்தசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள நிர்வாக அமைப்புமுறையை செயல்படுத்த ஒரு எதேச்சதிகாரமான மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார முறைதான் வழிகாட்டப்பட்டுள்ளது.

நேரு சொன்ன உண்மை
சர்வாதிகாரிகளான முசோலினியையும், ஹிட்லரை யும் வழிகாட்டும் ஆசான்களாக ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த இடத்தில் நேரு சொல்லியுள்ள ஓர் உண்மையை நினைவுப்படுத்திக் கொள்ளுவோம்; “ஆர்.எஸ்.எஸ் அடிப்படையிலேயே ஓர் இரகசிய அமைப்பு. அதற்கு ஒரு வெளித் தோற்றமும் உண்டு. அதற்கு  உறுப்பினர் பதிவேடு கிடையாது, சேர்க்கைக்கான சட்டங்கள்  கிடையாது, கணக்குகள் கிடையாது. ஆனால் அந்த அமைப்பு பெரும் பணம் வசூலிக்கிறது. அமைதியான வழி முறைகள் மீது நம்பிக்கை கிடையாது. அவர்கள் வெளியில் சொல்லுவது ஒன்றாக இருக்கும், ஆனால் அதற்கு எதிராக உள்ளுக்குள் இரகசியமாகச் செயல்படுவார்கள். ஐரோப்பாவில் பல்வேறு பாகங்களில் பாசிசத்திற்கு ஆதரவாகத் தோன்றியுள்ள அமைப்புகளின் மறுபதிப்பாக ஆர்.எஸ்.எஸ் இங்கு செயல்படுகிறது”. இந்து மகாசபை பற்றியும் நேரு சாற்றியுள்ள சாட்சியம் சரியானதே: “இந்து மகா சபைக்காரர்கள் பிற்போக்கான வகுப்புவாதிகள். தேசியம் என்ற போர்வையில் தங்கள் வகுப்பு வாதத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்து என்ற போர்வையில் இந்து நிலப்பிரபுக்களையும், இந்து அரசர்களையும் பாதுகாக்க விரும்புகிறார்கள். இதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இவர்களுக்கு அற்பமான சலுகைகள் கிடைக்கலாம். ஆனால் இது தேசியப் போராட்டத்துக்கு இழைக்கும் துரோகம். இவர்களை விட தேச விரோதிகள், முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடுகிறவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது”.  இதைவிட நமக்கு என்ன விளக்கம் வேண்டும்? அதனால்தான் மோடி வகையறாக்கள் நேருவை கடுமையாக காய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் முக்கியமான ஒருவர் மூஞ்சே. இவர் சர்வாதிகாரி முசோலினியை நேரில் சந்தித்துவிட்டு புளகாங்கிதத்தோடு இந்தியா திரும்பினார்.

அதன் விளைவு “முசோலினியும், பாசிசமும்” என்ற புத்தகம் ஒன்றை 1934ல் எழுதினார். முசோலினி “பலில்லா” என்ற ஒரு தனி இராணுவப்படை உருவாக்கி வைத்திருந்தான். ஹிட்லரும் ஒரு தனி இராணு வப்படை உருவாக்கி வைத்திருந்தான். அதற்கு ஆங்கிலத்தில் (Strom Troupe) என்று பெயர். அந்தக் காலத்தில் தமிழில் அதற்கு “சண்டமாருதப்படை” என்பார்கள். அதே போலத்தான் இங்கே ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பாசிச உணர்வின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.  மூஞ்சே சொல்லுகிறார்... “இந்து தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்துயிசக் கோட்பாட்டை உருவாக்கி இந்தியா முழுவதும் பரப்புவதற்காக திட்டம் ஒன்றை ஆலோசித்து வருகிறேன். ஆனால் ஒரு இந்து சர்வாதிகாரி யின் கீழ் நமக்கு சுயராஜ்யம் கிடைத்தால்தான், இந்தத் திட்டத்தை அமுல்படுத்த முடியும். அதற்காக சர்வாதிகாரிகள் உருவாகிறவரை, நாம் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியாது. நாம் விஞ்ஞான ரீதியாக ஒரு  திட்டத்தை உருவாக்கி பிரச்சாரத்தைத் தொடங்கவேண்டும்.” இவர்களின் இந்தத் திட்டம் இதுதான் என்பதை உறுதி செய்திட பிரிட்டிஷ் ஆட்சியின் உளவுத் துறை அறிக்கை மேலும் மெய்ப்பிக்கிறது: “எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு - இத்தாலி பாசிசமாகவும், ஜெர்மனி நாசிசமாகவும் தன்னை  உறுதிப்படுத்திக் கொள்ளும். இது மிகைப்படுத்தப்பட்டதாகக் கருத வேண்டாம்.” (NAI - HOMEPULL DEPARTMENT 88/33, 1933) (சங் பரிவாரின் சதி வரலாறு - விடுதலை க.இராஜேந்திரன்) ஆக மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஏன் இராணுவத்தை காவிமயமாக்குகிறது; ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளை இராணுவ உயர்ந்த பதவிகளில்  நியமிக்கிறது என்பது தெளிவாகிறது. பாஜக-வின் முன்னோர்கள், ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர்கள் எதிர்பார்த்தது போல் நாடு விடுதலை பெற்றபோது ஒரு இந்து சர்வாதிகாரி யின் கீழ் இந்து சுயராஜ்யம் கிடைக்கவில்லை. ஆகவே, இப்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள மோடி தலைமையில் அதை முடிக்கப் பார்க்கிறார்கள்.

இராணுவத்தைக் காவிமயமாக்க எத்தனிக்கிறார்கள். ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ் அனுதாபியாக இருந்த இராணுவ தளபதி வி.கே.சிங் பாஜக-வில் சேர்ந்து இப்போது அமைச்சராக உள்ளார்.  அரசியல் விற்பன்னர்கள் சொல்வது போல் எமர்ஜென்சி காலத்தைவிட இப்போது இந்தியாவில் மக்கள் அடக்குமுறைகளை அதிகமாகவே சந்தித்து வருகிறார்கள். இராணுவத் தலையீடுகளும் அதிகமாகி வருகிறது. இப்போதும் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அரசின் அனுமதியேடு அரசியலில் நேரடியாக தலையிட்டு பேசி வருகிறார்: “காஷ்மீரில் 10 முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள், பெண் பிள்ளைகள் உட்பட தீவிரவாத வலையில் வீழ்ந்துவிட்டார்கள். அவர்களையெல்லாம் கணக்கெடுத்து, குடும்பத்திலிருந்து பிரித்தெடுத்து தனியாக முகாமில் அடைத்துவைத்து மூளைச் சலவை செய்து மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்கிறார் இராணுவத்தின் கையில் சிக்கியவர்கள் திரும்ப அனுப்பப்படுவார்களா?  இவர்கள் கணக்குப்படி எல்லா சிறுவர்களுமே தீவிர வாதத்துக்கு பலியாகிவிட்டார்களா!? இப்போது காஷ்மீரில் 7 லட்சம் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள். காஷ்மீரை இன்னும் என்னதான் செய்யப்போகிறார்கள்? இந்தியாவில் அந்த ஒரு மாநிலத்தில் மட்டும் 80 சதவீத மக்கள் இஸ்லாமியர்களாக இருப்பது குற்றமா? அப்படி ஒரு இனவெறி, மதவெறி ஆட்டுகிறது. மேலும் மற்றொரு ஆத்திரமும், எரிச்சலும் அவர்களுக்கு உண்டு. உலகில் இந்தியாதான் இரண்டாவது இடத்தில் அதாவது 20 கோடி இஸ்லாமியர்களைக் கொண்ட நாடு. இதில் முதலிடம் இந்தோனேஷியா. இஸ்லாமியர்களை எப்படியாவது ஒழித்துக் கட்ட  வேண்டும் என்கிற பல சதித் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டமும் இவைகளில் ஒன்றாகும். வெறுப்பு அரசியல் வெற்றிபெற இயலாது.  இந்து ராஷ்டிராவை உருவாக்க இந்துத்துவா சக்திகள் வரலாற்றுச் சக்கரத்தை ஓராயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ள முயற்சிக்கிறார்கள். இதற்காக ஜனநாயக நிறுவனங்களையெல்லாம் நிர்மூலமாக்கிவிட்டு ஓர் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்குத் திட்டமிடுகிறார்கள்.  அதற்கு எதிராக இப்போது தீப்பொறி பற்றியுள்ளது. அந்தத் தீப்பொறி பெரும் தீயாக, காட்டுத் தீயாக மாற்றப்பட வேண்டும். மாமேதை லெனின் இதை எப்போதோ யாருக்கோ சொன்னது மட்டுமல்ல, இப்போது களத்தில் நிற்கும் நமக்கும் சொல்லப்பட்டதுதான். ஆம், வருமுன் காப்பதுதான் விவேகம்.