இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் துவக்கத்திலிருந்து உச்சக்கட்ட காட்சி வரை விறுவிறுப்பாகச் செல்கிறது. இடைவேளைக்குப் பிறகு படம் சூடுபிடிக்கிறது. அரசியல், சமூகப் பிரச்சனைகளை இடையிடையே கையாண்டுள்ள இப்படத்தை லாப நோக்கத்தை மட்டுமே கொண்ட முதலீட்டாளர்கள் தயாரிக்க முன்வர மாட்டார்கள். சமூகப் பார்வை கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது பாராட்டுக்குரியது. இதற்கு முன்பும் சமூகப்பிரச்சனைகளை அலசும் பரியேறும் பெருமாள் படத்தையும் ரஞ்சித் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை இரண்டு டிராக்கில் செல்கிறது. கரைஒதுங்கிய வெடிகுண்டை துரத்தும் காவல்துறையினர், ஆயுதத் தரகர் ரத்தன், பத்திரிகையாளர் தன்யா, காவல்துறையிடம் சிக்காமல் வெடிகுண்டை லாரியில் கொண்டு செல்லும் தினேஷ் என விறுவிறுப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாயகி சித்ரா (ஆனந்தி), லாரி டிரைவர் தினேஷ் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தாலும், நாயகியின் பெற்றோர்கள் இந்த சாதி மறுப்புத் திருமணத்திற்கு சம்மதிக்க மறுக்கின்றனர். இதில் ஏற்படக் கூடிய திருப்பங்கள் ஒரு டிராக்காகச் செல்கிறது. நகைச்சுவைக் காட்சிகள் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக இல்லாமல் திரைக்கதையோடு ஒட்டியே வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளில் பஞ்சர் (சுப்பையாசாமி) தன்னுடைய முத்திரையைப் பதிக்கிறார். பத்திரிகையாளராக குண்டைத் துரத்தும் ரித்விகா தனது பாத்திரத்தை நன்றாக செய்துள்ளார். நாயகன் தினேஷ் இந்த திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காயலாங்கடை காட்சிகள் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், அவர்களை மிரட்டி வேலை வாங்கும் உரிமையாளர், தொழிலாளர்கள் உரிமைகளுக்காக சங்கம் வைப்போம் என்று தினேஷ் சொல்வது படத்தின் இறுதிக் காட்சியில் சங்கம் அமைக்கப்பட்டதை சங்கத்தின் பெயர்ப் பலகை மூலமாக சொல்வது அருமை. படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மிக நேர்த்தியாக உள்ளது. ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய குண்டினால் ஏற்பட்ட அழிவையும், மக்கள் பலியானதையும் குறிப்பாக ஜப்பானிய சிறுமி உயிர்பிழைத்து சில ஆண்டுகளுக்கு பின்பு மரணமடையும் காட்சி படம் பார்ப்பவர்களை உருக வைக்கிறது. நெகிழ வைக்கிறது. “யுத்தம் வேண்டாம்; சமாதானம் வேண்டும்” என்ற முழக்கத்தோடு இறுதிக்காட்சியில் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட அழிவில் தப்பிய வயது முதிர்ந்த ஒருவர் யுத்தத்தைப் பற்றியும், வெடிகுண்டினால் ஏற்படும் அழிவைப் பற்றியும் குறிப்பாக, அவர் திருக்குறளை மேற்கோள் காட்டுவதும் படத்திற்கு மகுடம் சூட்டுகிறது. திரைக்கதையில் இடையிடையே பாத்திரங்கள் மூலமாக அரசியல், சமூக பிரச்சனைகளைப் பற்றிய வசனங்கள் படம் பார்ப்பவர்களின் மனதில் தைப்பது போல் அமைந்துள்ளன. தமுஎகச தலைவர்கள் ஆதவன் தீட்சண்யா வசனத்தில் உதவியுள்ளார். கவிஞர் தனிக்கொடியின் பாடலும் இடம் பெற்றுள்ளது. இயக்குநர் அதியன் ஆதிரை தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரையைப் பதித்து விட்டார். காதல், காதல் முறிவு, பறந்து பறந்து தாக்கும் சண்டைக் காட்சிகள் போன்ற வழக்கமான பாணியில் செல்லாமல் புதிய களத்தையும், புதிய பாணியையும் தேர்ந்தெடுத்து இயக்கிய இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பொதுவாக சிறந்த முறையில் படத்தை இயக்கியதோடு நடிகர்களை அவர்களின் பாத்திரத்திற்கு ஏற்ப அசலாக நடிக்க வைத்துள்ளது படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. இறுதிக்காட்சியில் சாதி, மத, வர்க்க வேறுபாட்டை தகர்க்க வேண்டுமென்ற கருத்தை படம் செய்தியாகச் சொல்வது இன்றைய அரசியல், சமூகம், பொருளாதாரச் சூழலை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தனிநபர் சாகசங்களே பிரச்சனைக்குத் தீர்வு என்று எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் அனைத்துத் தொழிலாளர்களும் சங்கம் அமைத்து போராடுவதே தீர்வு என காட்டுவது இயக்குநரின் அரசியல் நேர்மையை வெளிப்படுத்துகிறது. அனைவரும் பார்க்க வேண்டிய, ஊக்குவிக்க வேண்டிய படம் இரண்டாம் உலகப் போரின் கடைசிக்குண்டு.