tamilnadu

img

கர்நாடக எல்லையில் தவித்த மலைமக்கள் மீட்பு

திருவண்ணாமலை, ஏப்.25- கர்நாடக எல்லையில் உணவின்றித் தவித்த ஜமுனாமரத்தூர் மலைப் பகுதியைச் சேர்ந்த, 14 பேரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியைச் சேர்ந்த 14 பேர் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவில் உள்ள சிக்கனஹல்லி கிராமத்தில் மிளகு தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் ஊரடங்கு பிறப்பிக் கப்படும் முன்பு, சொந்த ஊருக்குத் தனியார் வாகனத்தில் ஒன்றாகக் கிளம்பி வந்துள்ளனர்.

அச்சமயம் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியானதால், அழைத்து வந்த வாகன உரிமையாளர் கர்நாடக எல்லையிலேயே 14 பேரையும் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார். எனவே செய்வதறியாது தவித்தனர். இதனையறிந்து மாவட்ட நிர்வாகம், அவர்களை மீட்டு வேன் மூலம் திருவண்ணாமலை அழைத்து வந்து, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் பின்னர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும், 14 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.