tamilnadu

img

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் சுந்தர்ராஜனும், புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


இதை அடுத்து அரசு மணல் குவாரி ஒப்பந்தத்தை மறைத்தும், தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றதாக கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.


இதை தொடர்ந்து, டிடிவி தினகரன் அணிக்குத் தாவிய சுந்தர்ராஜன், முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சுந்தர்ராஜன் பதவி இழந்தார். இவர் உட்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை 3 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.


கடந்த 10-ஆம் தேதி, காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 3 தொகுதிகளை நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி ஒத்திவைத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்நிலையில் வழக்கு தொடர்ந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி இன்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் செல்லாது என தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


இதை ஏற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு, கிருஷ்ணசாமி அளித்த மனுவின் அடிப்படையில் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை முடித்து வைப்பதாகவும், தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டார்.

;