tamilnadu

img

வேலைவாய்ப்பு மீது மோடி அரசின் துல்லிய தாக்குதல்

முந்தைய மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று வேலையின்மை. இந்த பிரச்சனை தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கவில்லை என்பது தனிக்கதை! எனினும் இந்த பிரச்சனை தனது வெற்றி வாய்ப்பை பாதிக்குமோ எனும் பயம் மோடிக்கு இருந்தது. எனவேதான் வேலையின்மை தொடர்பான ஆய்வறிக்கையை மோடி அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு வெளியிட மறுத்தது. தற்பொழுது தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையின் சில அம்சங்கள் தேர்தலுக்கு முன்பே கசிந்தன. அவற்றை மோடி அரசாங்கம் மறுத்தது. கசிந்த அந்த விவரங்கள் உண்மைதான் என்பதையும் வேலையின்மை எவ்வளவு கடுமையாக உள்ளது என்பதையும் முழு அறிக்கை தற்பொழுது வெளிப்படுத்துகிறது.

உண்மை விவரங்கள்
வேலையின்மை விகிதம் 6.1% என இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள வேலையின்மை ஆகும். எனினும் இந்த 6.1% என்பதே சரியான கணக்கீடு அல்ல என பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 15 வயது முதல் 59 வயது வரை உள்ள வேலை செய்வதற்கு தகுதி உடையவர்களின் எண்ணிக்கையில் எவ்வளவு பேர் வேலை செய்கின்றனர் எனும் விவரங்களை தொகுத்து அதன் அடிப்படையில் வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர் என சில ஆய்வாளர்கள் கணக்கீடு செய்துள்ளனர். இந்த விவரங்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.

வேலையில்லாதோரின் எண்ணிக்கை/ அகில இந்திய அளவில்
                                                       2011-12        2017-18
கிராமப்புற ஆண்கள்          18.00%        24.80%
கிராமப்புற பெண்கள்         62.80%        74.50%
நகர்புற ஆண்கள்                  21.60%        25.80%
நகர்புற பெண்கள்                79.00%        80.20%

ஆண்களில் கிராமப்புறத்தில் சுமார் 25% பேரும் நகர்புறத்தில் 26% பேரும் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். பெண்களின் நிலைமை இன்னும் மோசம். 75 முதல் 80% வரை பெண்களிடையே வேலையின்மை உள்ளது. சில குறிப்பிட்ட மாநிலங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணத்திற்கு பீகாரில் வெறும் 4% பெண்கள்தான் வேலையில் உள்ளனர். அசாம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் 15%க்கும் குறைவான பெண்கள்தான் வேலையில் உள்ளனர். விவசாயத்தை நம்பி சுமார் 60% மக்கள் உள்ளனர். ஆனால் கிராமப்புறத்தில் விவசாயத்துறையில் ஆண்களுக்கு 28.4% மற்றும் பெண்களுக்கு 12.8% மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரும் விவசாய நெருக்கடியை இது பிரதிபலிக்கிறது. குறிப்பாக கடும் வீழ்ச்சி விவசாயத் தொழிலாளர்களை கூடுதலாக பாதித்துள்ளது. கிராமப்புற விவசாய தொழிலாளர்களில் வெறும் 5.5% பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. விவசாய நெருக்கடியால் கிராமப்புற உழைப்பாளிகள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். ஆனால் சுருங்கி வரும் நகர்ப்புற வேலை வாய்ப்புகள் அங்குள்ள உழைப்பாளிகளின் தேவையை பூர்த்தி செய்யாமல் உள்ள நிலைமையில் இடம் பெயரும் கிராமப்புற உழைப்பாளிகள் நகரங்களில் கூடுதலான வேலையின்மை பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 

தோல்வி அடைந்த பகட்டுத் திட்டங்கள்
‘மேக் இன் இண்டியா’/ ‘ஸ்கில் இண்டியா’/ ஸ்டார்ட் அப் இண்டியா’ என பல திட்டங்களை மோடி படாடோபமாக அறிவித்தார். ஆனால் நகர்ப்புறத்தில் இந்த திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் சிறிதளவும் அதிகரிக்கவில்லை. உற்பத்தி மற்றும் சுரங்கத் துறையில் உருவான அற்ப வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள்:

                                                     2017-18
நகர்ப்புற ஆண்கள்            12.20%
நகர்ப்புற பெண்கள்            3.60%
கிராமப்புற ஆண்கள்         4.30%
கிராமப்புற பெண்கள்       1.40%

கடந்த சில ஆண்டுகளாக கட்டிடத்தொழில் விரிவடைந்த காரணத்தால் வேலை வாய்ப்புகள் பெருகின. ஆனால் அந்த தொழிலும் சுருங்கியுள்ளதால் வேலை வாய்ப்புகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆண்களில் 6.8% பேரும் பெண்களில் வெறும் 0.75% மட்டுமே கட்டிட தொழிலில் வேலையில் உள்ளனர். ஒட்டு மொத்த உழைப்பாளிகளில் சுமார் 8% பேர் மட்டுமே ஓரளவு சீராக மாத ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர். மற்றவர்களுக்கு ஊதிய பாதுகாப்பு இல்லை எனவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நிரந்தரமற்ற கேசுவல் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கூட கடந்த 5 ஆண்டுகளில் 12%லிருந்து 8.6% ஆக வீழ்ச்சி அடைந்துவிட்டது.  “நாம் வேலைக்காக கெஞ்சுபவர்களாக இருக்கக் கூடாது; பிறருக்கு வேலை தருபவர்களாக இருக்க வேண்டும்” என மோடி அரசாங்கம் கனவுகளை இளைஞர்களிடம் விற்றது. ஆனால் மோடி அரசாங்கம் தொடங்கிய ‘ஸ்டார்ட் அப் இண்டியா’ தோல்வியை சந்தித்துள்ளது. ஜனவரி வரை திட்டமிடப்பட்ட 33,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வெறும் 88 க்கு மட்டுமே வரிச் சலுகைகள் கிடைத்துள்ளன. வரிச் சலுகைகள் இல்லாமல் ‘ஸ்டார்ட் அப் நிறுவனம்’ அடுத்த ஒரு சிறு நகர்வை கூட சாத்தியமாக்க இயலாது. மோடி அறிவித்த படாடோபமான இன்னொரு திட்டம் சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் “முத்ரா” கடன்கள் ஆகும். இதன் மூலம் இளைஞர்கள்  தொழில் அதிபர்களாக மாறலாம் என ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன. ஆனால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் முத்ரா திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட கடனில் வாராக்கடன் தொகை ரூ.9200 கோடி அதிகரித்து ரூ.16,481 கோடியாக நிலுவையில் உள்ளது. 30.57 இலட்சம் கணக்குகள் வாராக்கடன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது சுமார் 30 இலட்சம் பேர் சிறு தொழில் தொடங்கி அதனை தொடரமுடியாமல் உள்ளனர் என்பதை இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக நிலைமை
வேலையின்மை கொடுமையிலிருந்து தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தமிழகத்தில் வேலையில்லாதோரின் விவரங்கள்:

                                                       2011-12        2017-18
நகர்ப்புற ஆண்கள்              17.9%        21.9%
நகர்ப்புற பெண்கள்            72.1%        71.8%
கிராமப்புற ஆண்கள்         16.8%        23.80%
கிராமப்புற பெண்கள்        48.1%        61.2%

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக கடுமையான தேக்கத்தில் உள்ளது. விவசாயமும் கடுமையாக பாதித்துள்ளது. எடப்பாடி அரசாங்கம் தமிழகத்தின் வளர்ச்சியில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. எனவே வேலையின்மை தமிழகத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. இளநிலை பட்டமும் முதுநிலை பட்டமும் படித்த இளைஞர்கள் கூட ஓலாவில் ஓட்டுநர்களாக பணியாற்றுவதும் உணவு பொருட்களை விநியோகிக்கும் பணியில், வெயில் எனவும் மழை எனவும் பாராது இரவு பகலாக அலையும் நிலை உள்ளது.

ரோபோக்கள் பறிக்கும் வேலைகள்
இந்தச் சூழலில்தான் இந்திய முதலாளிகள் தமது இலாபக் கொள்ளைக்காக மிக வேகமாக ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவை புகுத்த திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுதும் 2030ஆம் ஆண்டிற்குள் ரோபோக்கள் காரணமாக சுமார் 80 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து உள்ளது என மெக்கன்சி ஆய்வு நிறுவனம் அபாயச் சங்கு ஊதியுள்ளது. இந்தியாவில் 21-41 வயதினரிடையே 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 20 கோடி பேர் வேலையின்றி இருக்கும் நிலை ஏற்படும் என கல்வியாளர் மோகன் தாஸ் பாய் குறிப்பிடுகிறார். ஏற்கெனவே வங்கிகள், மென்பொருள் நிறுவனங்கள் சில உற்பத்தித் தொழில்களில் ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்த புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கும் அதே வேளையில் வேலையின்மையை தடுப்பது எப்படி எனும் எந்த ஒரு கொள்கை அல்லது அணுகுமுறை மோடி அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கவலை தரும் விவரங்கள் வேலையின்மை எவ்வளவு கொடுமையாக விஸ்வரூபம் எடுக்கும் ஆபத்து உள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன. மோடியின் முந்தைய ஆட்சியை மட்டுமல்ல, இந்த ஆட்சியையும் வேலையின்மை ஆட்டுவிக்கப்போகிறது என்பதே தற்போதைய நிலைமை. எனவேதான் வேலையின்மைக்கு எதிராக வலுவான இயக்கம் நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய கடமையாக முன்மொழிந்துள்ளது. 

தகவல் விவரங்கள்: விகாஸ் ராவல்/பிரச்சி பன்ஸால் 
(Net work ideas)/ டைம்ஸ் ஆஃப் இண்டியா 
06.02.2019/பி.பி.சி. கட்டுரை 29.11.2017