tamilnadu

img

பேரிடரை கொண்டாடுவோர் - வெ.ஜீவகுமார்

கொரோனாவோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள் என மத்திய மாநில அரசுகள் கிளிப்பிள்ளையாக திரும்ப திரும்ப சொல்கின்றன. ஆங்காங்கே வரும் கொரோனா தொற்று மரண செய்திகளோ வெகுமக்கள் மத்தியில் பீதியை கிளப்புகின்றன.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் ஆகும். ஆமதாபாத் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒரு முதியவர் கொரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் அவரின் பிணம் டானிலிம்டா தாலுக்காவில் ஒரு பேருந்து நிலையத்தில்  கிடந்தது. மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தால் போதும் என்று வீட்டிற்கு அனுப்பியதாக கூறுகின்றனர். இறந்தவரின் குடும்பத்தினரோ அவரின் உடலை மருத்துவமனை நிர்வாகமே பேருந்து நிலையத்தில் வீசியதாக கூறுகின்றனர்.  தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றின் காரணமாக மதுசூதன் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சையில் இருப்பதாக வீட்டினர் கருதினர். எனினும் அவரை குறித்து குடும்பத்தினர் விசாரித்த போது அவர் இறந்துவிட்டதாகவும் அவரின் இறுதி சடங்கை அரசே நடத்தி முடித்ததாகவும் தகவல் சொல்லப்படுகிறது. கணவரை காணவில்லை என்று இப்போது மனைவி புகார் செய்கிறார்.

கொரோனா பேரிடரை மூன்றாம் உலகப்போருக்குச் சமம் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.  ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று எடப்பாடியும் கூறினார். இப்போதோ உலக அரங்கில் கொரோனா தொற்றில் இந்திய கணக்கை முதலாவது இடத்திற்கு கூடைப்பந்தாக மோடி தூக்கிச் செல்கிறார். எடப்பாடியோ தமிழக கணக்கை மராட்டிய அளவுக்கு உயர்த்துகிறார். இத்தகு கையாலாகாத சூழலில்தான் நோயாளிகளை வீட்டிலேயே தனித்திருக்க இவர்கள் உபாயம் முன்மொழிகின்றனர். வீடுகளே இல்லாதோரும் வீடுகள் இருந்தாலும் தனித்திருக்க வசதியற்ற குடிசைகளில் வசிப்போரும் மிகுந்துள்ள ஒரு நாட்டில் நோயாளியை தனிமைப்படுத்த கோருவது நிதானத்தில் பேசப்படுவதா? 

எல்லா நிகழ்வுகளுக்கும் வரலாற்றில் தஞ்சம் புகுந்து விட முடியாது. ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் அல்லதான். எனினும் ஒட்டுமொத்த இந்தியா பாரம்பரியமான மருத்துவத்தை கொண்டிருந்தது ஆகும். 

கி.மு. 326ல் அலெக்சாண்டர் வட இந்தியா மீது படை எடுத்தார். வெற்றிகளை ஈட்டி அவர் திரும்பும் போது இந்திய மருத்துவர்களின் திறமையை அறிந்து இந்திய ஆயுர்வேத மருத்துவர்கள் சிலரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பிரிட்டனின் எலிசபெத் மகாராணியின் மகப்பேறுவிற்கு மருத்துவர் ஏ.எல். முதலியார் என்பவரை இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் அழைத்துச் சென்றனர். பொதுமக்களின் சுகாதாரம் மன்னர்கள் காலத்தில் கூட அலட்சியப்படுத்தப்படவில்லை என்பதற்கு தமிழக சான்றுகளே உள்ளன. 

பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் மருத்துவமனைகள் ஆதுல சாலை அல்லது ஆதுர சாலை என்று அழைக்கப்பட்டன. நோய்களுக்கு மருந்துகள் அளிப்பதோடு சல்லிக்கிரியை எனப்படும் அறுவை சிகிச்சைகளும் நடந்தன.

ராசராச சோழன் சகோதரி குந்தவை பிராட்டி. கி.பி 1015ல் மக்களுக்கு ஓர் இலவச மருத்துவமனையை அமைக்கிறார். பாபநாசம் வட்டம் கோவில்தேவராயன்பேட்டையில் சிவாலயத்து சாசனம் ஒன்று இதனைக் கூறுகிறது. இதன் பெயர் சுந்தர சோழ விண்ணகர ஆதுல சாலை ஆகும்.  இதேபோல் கி.பி 1019ல் ராஜேந்திர சோழனின் 7ஆம் ஆண்டு சாசனம் மற்றொரு உண்மையை கூறுகிறது. இதன்படி ஒரு வீட்டுமனையை ராசகேசரி சதுர்வேதி மங்களத்திலிருந்து விலைக்கு வாங்கி குந்தவை நாச்சியார் மருத்துவமனைக்கு தந்துள்ளார். மேலும் குந்தவை நாச்சியார் சித்த வைத்தியத்திற்கு இறையிலி நிலங்களை இலவச மருத்துவத்திற்கு தந்துள்ளார்.  இப்போது இந்திய அரசு சராசரியாக வெறும் 3 ரூபாய்தான் பட்ஜெட்டில் மருத்துவத்திற்கு ஒரு நபருக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது என்பதை நாம் ஒப்பிட வேண்டி உள்ளது. 

இன்னொரு முக்கிய சாசனம் கி.பி 1069 பற்றிய ஒரு கல்வெட்டு ஆகும். தஞ்சை மாவட்டம் குரங்காடு துறை (இப்போது ஆடுதுறை) பக்கத்தில் மருத்துவக்குடி என்ற ஊர் உள்ளது. முக்கூடல் கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்திருக்கிறது. இதில் 15 நோயாளிகள் சிகிச்சை பெற படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இரு மருத்துவர்கள், இரு பரிசாரகர்கள், இரு மருத்துவ செவிலியர், ஒரு நாவிதர், ஒரு துணிவெளுப்பவர், தண்ணீர் வழங்க ஒருவர் இருந்துள்ளனர். ஓராண்டுக்கு தேவையான மருந்துகள் அங்கு பராமரிக்கப்பட்டுள்ளன. இருவரில் ஒருவர் நோய்க்கு மருந்து தருபவர் மற்றொருவர் அறுவை சிகிச்சை செய்பவர் என பணி பிரிக்கப்பட்டுள்ளது. ஆயுர் வேத மருந்துகள் இங்கு கிடைத்துள்ளன. பசுவின் நெய்யும், ஆதுல சாலையில் இரவு முழுதும் விளக்கு எரிய எண்ணெய்யும் இங்கு வழங்கப்பட்டுள்ளன. இராஜேந்திர சோழனின் மகன் வீர ராஜேந்திரன் ஆட்சி அப்போது நடந்துள்ளது. பிறகு வந்த மன்னர்களும் மருத்துவ வசதியை விரிவுபடுத்தினர்.

மராட்டியர் ஆட்சியில் நூல்களுக்கு சரஸ்வதி மகால், இசைக்கு சங்கீத மகால், மருத்துவத்திற்கு தன்வந்திரி மகால் என்ற பிரிவுகள் இருந்துள்ளன. இலண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் 400 அறைகள் இருந்துள்ளன. அங்கு கூட இத்தகைய ஏற்பாடு இல்லை. தமிழகத்தில் இரண்டாம் சிவாஜி ஆரோக்கிய சாலை என்ற மருத்துவமனை நடத்தியுள்ளார். மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தனியே வைத்தியர்கள் இருந்துள்ளனர். “குதிரைகள், மாடுகள், யானை, ஒட்டகம், நாய், ஆடு, கரடி, மைனா ஆகியவற்றுக்கு கி.பி 1816களில் தனியே மருத்துவர்கள் இருந்தனர். தன்வந்திரி மகால் என்பது மருந்து விற்பனை சாலை அல்ல. நோய்களை ஆய்வு செய்வதும் அவற்றுக்கு மருந்தை உற்பத்தி செய்வதும் அதன் பணியாகும். தஞ்சை சரபோஜி அரசர் கண் மருத்துவம் கற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.” இதற்கு பிந்தைய காலத்தில் 1898களில் மைசூர், கோவை முதலிய இடங்களில் பிளேக் நோய் பரவியுள்ளது. சிறந்த செந்தூரங்களையும் மாத்திரைகளையும் தயாரித்து மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.சுண்ணம், பஸ்பம், செந்தூரம் போன்ற மருந்துகள் கோரோஜனை கஸ்தூரி மூலிகைகள் முதலியன கொண்டு மாத்திரை, லேகியம், தைலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆப்ரகாம் பண்டிதரின் மகாகோரோஜனை மருந்து, கருணானந்தர் சஞ்ஜீவி மாத்திரைகள், கொரோனா மருந்துகள் எல்லா வீடுகளிலும் தஞ்சாவூரில் இருந்துள்ளன. சோழ வந்தானை சேர்ந்த சண்முகனாருக்கு தஞ்சாவூர் கிராமமான அரித்துவாரமங்கலத்தில் முதுகில் கட்டிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஒரத்தநாடு முத்தாம்பாள் சத்திரத்தில் வழிப் போக்கர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருந்துள்ளனர். சனிக்கிழமைகளில் குளிக்க எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. சித்த, யுனானி, ஆயுர் வேத, ஆங்கில வைத்தியம் இணைத்து சரபேந்திரர் வைத்திய முறை ஒன்று நடைமுறையில் இருந்துள்ளது.

ஒரு லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் வரலாற்றை முதுகில் சுமந்து நடக்கிறான் என்று சொல்வர். தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய, குறுநில மன்னர்களின் பகுதிகளில் பாரம்பரிய வைத்திய முறை இருந்ததற்கு பல தரவுகள் உண்டு. இந்தியா முழுவதிலும் இதற்கு சான்றுகள் உண்டு. இப்போதைய அரசோ வைத்திய முறையை தட்டிக்கழிக்கிறது. ஏராளமான தனியார் மருத்துவமனைகளின் விரிந்த நிலம் பரந்து கிடக்கிறது. ஆயினும்  பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும்தான் கொரோனா தொற்று வந்தவர்களுக்கு படுக்கை வசதி செய்யப்படுகிறது. அருகில் உள்ள கேரளாவில் தொற்று வந்தவர்கள் உளவியல் ரீதியில் காயப்படுத்தப்படுவதில்லை. தனிமைப்படுத்துதல் என்பதற்கு பதிலாக பராமரிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் புலம்பெயர் தொழிலாளர்கள், விருந்தினர் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மற்ற பல இடங்களிலோ தொற்று வந்தவர்களும், புலம்பெயர்பவர்களும் ஏளனத்தையும் இழிவையும் சந்திக்கின்றனர். சுமார் 5 கோடி பேருக்கு கை கழுவ சோப்போ தண்ணீரோ வசதி செய்து தராத இந்திய அரசு தன் பொறுப்பிலிருந்து நழுவி எல்லா துறைகளையும் தனியாருக்கு ஒப்படை செய்கிறது. 

நான் யாரை விடுதலை செய்ய வேண்டும்? பாரபாஸையா? அல்லது யேசுவையா? என்று பிலாத்து கேள்வி கேட்கும் நிகழ்வு பைபிளில் உண்டு. இறுதியில் இந்த மனுசனின் சாவுக்கு நான் பொறுப்பாளி அல்ல. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி கூட்டத்தின் முன் பிலாத்து தன் கைகளை கழுவுகிறான்.

விளக்கேற்றியும், கை ஒலி எழுப்பியும் உருக்கமாகவும் பாசாங்காக பேட்டிகள் தந்தும் கொண்டாட்ட பெருமித மனநிலையில் இருக்கும் மத்திய, மாநில அரசுகள் மக்களை திண்டாட விட்டுவிட்டன.