பொன்விழாவை துவக்கிவைத்து பினராயி விஜயன் பேச்சு
திருச்சூர், நவ.11- கேரள அரசின் நிதி நிறுவனமான கேஎஸ்எப்இ உலகத்துக்கே முன் மாதிரியாக மாறியுள்ளது என முதல் வர் பினராயி விஜயன் கூறினார். கேஎஸ்எப்இ (Kerala State Finance Enterprices)யின் பொன் விழா கொண்டாட்டத்தை துவக்கி வைத்தும், திருச்சூரில் பிரம்மாண்ட மாக கட்டப்பட்டுள்ள புதிய தலைமை அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தும் ஞாயிறன்று கேரள முதல்வர் பேசியதாவது:
தனியார் சீட்டு கம்பெனிகளுக்கு மாற்றாக 50 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் இஎம்எஸ் தலைமையிலான கேரள அரசு இந்த நிதி நிறுவனத்தை துவக்கியது. அது இன்று அதிசயிக்கத் தக்க வளர்ச்சி கண்டுள்ளது. 1975இல் மாநில சீட்டு சட்டம் கொண்டு வரப் பட்டதை தொடர்ந்து சீட்டுகள் மட்டு மல்லாது நகை அடமானம், வீடுகட்ட கடன் என்று விரிவடைந்தது. 10 கிளை களுடன் துவக்கப்பட்டது இன்று 578 கிளைகளைக் கொண்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரசு பொறுப்பேற்கும்போது ரூ.236 கோடியாக இருந்த இதன் லாபம் இப்போது ரூ.445 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.240 கோடியாகும். இன்று கேஎஸ்எப்இ-யின் ஆதிக்கம் முக்கிய நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்கள் வரை பரவியுள்ளது. கேரளத்தில் நடக்கும் சீட்டுகளில் பாதிக்கு மேல் கேஎஸ்எப்பி சீட்டுகளாகும்.
மேம்பட்ட நிர்வாகம்
கால்சென்டர்களுடன்கூடிய செயல்பாடு, குழு காப்பீடு, மொபைல் செயலி போன்றவற்றால் இதன் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பயனடைந்து வருகிறார்கள். வெளி நாடுகளில் வாழ்வோருக்கான திட்டம் தற்போது வெளிமாநிலங்களில் வாழும் கேரள மக்களுக்கும் விரிவு படுத்த கோரிக்கைகள் வந்துள்ளன. சீட்டு - சேமிப்பு என்றாலும் இதில் வரும் பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட்டு வருகிறது என்பது முக்கியமானது. கேஎஸ்எப்இ முதலீடுகளுக்கு கிப்பி மூலம் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கிப்பி கேரளத்தின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு என உரு வாக்கப்பட்ட அமைப்பு. நமது பள்ளிகள் உட்பட உலகத்தரத்திலான செயல்பாடுகள் மூலம் நவகேரளம் படைக்கும் திட்டங்களுக்கு கிப்பி வழிவகுத்துள்ளது. அதற்கு கேஎஸ்எப்இ உதவுகிறது.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியால் நிதி நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன. நமது நாட்டில் 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள் ளது. இந்த சூழ்நிலையில் உலகத்துக்கு ஒரு முன்மாதிரியை கேஎஸ்எப்இ படைத்துள்ளது. தனியார் நிறவனங்களால் தான் சிறந்த சேவையை அளிக்க முடியும் என்பவர்கள் கேஎஸ்எப்இ செயல்பாடுகளை நேரில் பார்த்து தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
டாக்டர் தாமஸ் ஐசக்
விழாவுக்கு தலைமை வகித்த கேரள நிதி அமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் பேசியதாவது: ரூ.10 லட்சம் விற்று வரவுடன் துவங்கிய இந்த நிறுவனம் தற்போது ரூ.40 ஆயிரம் கோடி விற்று வரவை கொண்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்கும். வெறும் 40 ஊழியர்களுடன் தொடங்கப் பட்டது இன்று 7,000 ஊழியர்களைக் கொண்டதாக வளர்ச்சி கண்டுள்ளது. வெளிமாநில வாசிகள் இதில் சேர்வதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். திருச்சூர் டவுன் ஹாலில் நடந்த இந்த விழாவில் கேஎஸ்எப்இ பொன்விழாவை குறிக்கும் தபால் தலையை கல்வி அமைச்சர் பேராசிரியர் ரவீந்திரநாத் வெளி யிட்டார். கேஎஸ்எப்இ தலைவர் பிலிப்போஸ் தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.