சென்னை ஐஐடியில் உள்ள ஒரு பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக உதவி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் உள்ள விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடத்திற்கு அருகில் உள்ள ஒரு பெண்கள் கழிவறையை பயன்படுத்த சென்ற ஆராய்ச்சி மாணவி, கழிவறை சுவரில் ஒரு சிறிய துளை இருந்ததை கண்டார். அதை அருகில் சென்று பார்த்தபோது, அந்த துளையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, சுவரின் மறு பக்கத்துக்கு சென்று பார்த்தபோது, அதே துறையைச் சேர்ந்த உதவி பேராசிரியரான சுபம் பானர்ஜி என்பவர் அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த மாணவி சுபம் பானர்ஜியின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் வீடியோ எதுவும் கிடைக்கவில்லை. இதை அடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுத் தொடர்பாக போலீசார், சுபம் பானர்ஜியை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுபமின் செல்போன்னை தடயவியல் ஆய்வகத்துக்கு, போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சுபம் பானர்ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.