நாடகக்காதலுக்கு எதிராகவும் போலி திருமணங்களுக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொள்ளும் திரௌபதி திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் இயக்குனரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவிப்போரும் 2014-ம் ஆண்டு வெளியான சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்டி சென்னை ராயபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் 2013ம் ஆண்டு மட்டும் 3496 திருமணங்கள் பெண்ணைப் பெற்றோருக்குத் தெரியாமல் கள்ளத்தனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த உண்மை நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டே திரௌபதி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடுகின்றனர்.
அப்படத்தின் இயக்குநர் இப்படம் எந்த சாதிக்கும் எதிரானது அல்ல என்று தற்போது சொன்னாலும் முன்பு அவர் பா.ரஞ்சித், மாரி. செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோர் எடுத்த படங்களுக்கு எதிராகக் கருத்துக் கூறியதும் திரௌபதி ட்ரெயிலர் மீது ஒரு மேம்போக்கான பார்வையையும் அந்த ட்ரெயிலருக்கு வந்துள்ள பின்னூட்டங்களும் இந்த திரைப்படம் தலித் சமூகத்தைதான் குற்றம் சுமத்துகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்தத் திரைப்படத்திற்கு தடை கோருவோர் இப்படம் ஆணவக்கொலையை நியாயப்படுத்துகிறது என்றும் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கெதிராக மற்ற எல்லா உயர் சாதியினரையும் கொம்பு சீவி விடுகிறது என்றும் இது சமூக நல்லிணக்கத்தை முற்றிலுமாக சீர் குலைத்து விடும் என்றும் கூறுகின்றனர்.
இந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலகிருஷ்ண பாண்டியன் என்பவர் தொடுத்த ஆட்கொணர்வு மனு -எச்சிபி எண் 2767 டிக 2013-ல் 17-10-2014 அன்று நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வினால் வழங்கப்பட்டதாகும் (2014-6-சிடிசி-129). உண்மையில் சமூகத்தின்பாற் பெரும் அக்கறையுடன் வழங்கப்பட்ட இத்தீர்ப்பானது தவறாகப் பொருள் விளங்கும்படி மேற்கோள் காட்டப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. இத்தீர்ப்பின் அடிப்படை சாராம்சமானது வழக்கறிஞர்கள் தங்கள் தனி அலுவலக அறையிலோ, நீதிமன்ற வளாகத்தில் உள்ள தங்கள் சேம்பரிலோ, பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாங்களே ரகசியமாகத் திருமணம் செய்துவைத்து அதனைப் பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் செல்வாக்கினைப் பயன்படுத்திப் பதிவு செய்து கொடுப்பது குறித்ததாகும்.
தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவளின் பெற்றோர்கள் அவளது விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்துக் கொண்டு அவரைத் தன்னுடன் அனுப்ப மறுக்கிறார்கள் என்றும், தனது மனைவியை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவ்வாறு ஆஜர்படுத்திய தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டுமென்றும் 21 முதல் 25 வயது கொண்ட பல இளைஞர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது அடிக்கடி நிகழ்வதைக் கண்டு கவலையுற்ற இரு நீதிபதிகளும் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதனடிப்படையில் நீண்ட விசாரணைக்குப் பின்னர் சிபிசிஐடி காவல்துறை உயர் அதிகாரி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் தான் 2013-ஆம் ஆண்டில் மட்டும் 3496 திருமணங்கள் வழக்கறிஞர்களால் நடத்தி வைக்கப்பட்டு, அவை ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசின் 2009-ஆம் ஆண்டின் திருமணப் பதிவு சட்டத்தில் உள்ள ஒரு சாதகமான அம்சத்தைப் பயன்படுத்தி திருமணம் செய்து கொண்டவர்கள் நேரில் வராமலேயே திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதையும், பதிவு செய்ய மறுத்த திருமணப் பதிவாளர்கள் மிரட்டப்பட்டதையும் அறிந்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கத்தலைவர்கள், பார் அசோசியேஷன் பிரதிநிதி, அரசு வழக்கறிஞர் ஆகியோரின் வாதங்களையும், கருத்துக்களையும் செவிமடுத்த பின்னர் நீதிபதிகள் தெளிவான, உறுதியான, மிக நீண்ட தீர்ப்பினை வழங்கினர்.
சமூகத்தின் மீது அக்கறையும், இளவயதினர் எதிர்கால வாழ்வு மீது பெரும் கரிசனமும் கொண்ட இத்தீர்ப்பானது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு மிக முக்கியமான தீர்ப்பாகும். வழக்கறிஞர்கள் இவ்வாறு ரகசிய திருமணங்களை நடத்திவைப்பது வழக்கறிஞர்களின் வேலை அல்லவென்றும், அது வழக்கறிஞர் தொழிலின் மாண்புக்கும், மேன்மைக்கும், நற்பெயருக்கும் ஊறு விளைவிக்கும் என்றும் தெளிவுறக் கூறிய நீதிபதிகள், அத்தகைய வழக்கறிஞர்களுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர். சிறப்பு வாய்ந்த இத்தீர்ப்பில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
வழக்கறிஞர்களின் தனி அலுவலகத்திலோ, வழக்கறிஞர்களின் நீதிமன்றத்தில் உள்ள சேம்பரிலோ ரகசியமாக நடத்தி வைக்கப்படும் திருமணங்கள் முறைப்படி நடத்தி வைக்கப்பட்டவை அல்ல. இத்திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டும் இத்திருமணத்திற்கு எதிராக உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம்.
தகுந்த காரணங்கள் இருந்தாலொழிய, திருமணம் செய்து கொண்டவர்கள் நேரில் ஆஜராகாமல், பதிவாளர்கள் திருமணத்தைப் பதிவு செய்யக் கூடாது.
இத்தகைய திருமணம் செய்து கொண்ட இருவரில் ஒருவர் அவ்வாறான திருமணத்தை நடத்தி வைத்த வழக்கறிஞர் மீது பார் கவுன்சிலில் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமணப்பதிவு அதிகாரிகள் பாதுகாப்பு கோரி மனு அளித்தால் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இத்தீர்ப்பின் இறுதியில் நீதிபதிகள் மதுரை வழக்கறிஞர்களால் எடுக்கப்பட்ட, நிலைகுலைந்து வரும் வழக்கறிஞர் தொழிலின் மேன்மையையும், கண்ணியத்தையும், புனிதத்தையும் மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் வற்புறுத்தும் “சுத்தம் செய், யுத்தம் செய்து” என்ற குறும்படத்தினைப் பற்றிக் குறிப்பிட்டு அதில் கூறியுள்ளவாறு மகாத்மா காந்தி, டாக்டர். அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார் ஆகியோரால் போற்றிப் பின்பற்றப்பட்ட வழக்கறிஞர் பணி, ஒழுக்கமும், நெறியுமற்றோர் கைகளில் வீழ்ந்து விடாது என்றும் தங்கள் நம்பிக்கையைக் கூறியுள்ளனர். இப்போது தெளிவாக தெரிந்திருக்கும் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னணியும் அத்தீர்ப்பின் முக்கியத்துவமும்.
ஆனால் இப்பொழுது என்ன நடக்கிறது என்றால் வழக்கறிஞர்களால் ரகசியமாக நடத்தி வைக்கப்பட்ட 3496 திருமணங்களிலும் 3496 தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் 3496 உயர்சாதி பெண்களை பணத்திற்காக மயக்கி, பின்னர் கைவிட்டு விட வேண்டும் என்ற நோக்கில் திருமணம் செய்து கொண்டது போலவும் அதனை நீதிமன்றம் கண்டித்தது போலவும் ஒரு பொய்யான தோற்றத்தினை ஏற்படுத்த முற்படுகின்றனர். ஆனால் நீதிமன்ற உத்தரவில் எந்தவொரு இடத்திலும் தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த இளைஞர்கள் மேல்சாதி வகுப்பைச் சார்ந்த பெண்களை மயக்கியோ கட்டாயப்படுத்தியோ திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சொல்லப்படவேயில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் நகர இளைஞர்களும், கிராமப்புற இளைஞர்களும் சாதி சமயம் கடந்து பருவ வயது மோகத்திற்கும் இச்சைக்கும் ஆட்பட்டு காதலில் வீழ்ந்து விடுகிறார்கள் என்றுதான் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அதேபோல் பணக்காரப் பெண்களைக் குறி வைத்து ஏழை இளைஞர்கள் மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. மேலும் இத்தகைய ரகசிய திருமணங்களை நடத்தி வைத்த வழக்கறிஞர்களும் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றும் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். இத்தீர்ப்பின் 25வது பத்தியில் 2006ஆம் ஆண்டு லதா சிங் எள உ.பி. அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் சமூக நல்லிணக்கத்திற்காகவும் சாதி அமைப்பின் இறுக்கமான கட்டுத்தளைகளை உடைப்பதற்காகவும் மதங்களுக்கு இடையிலான மற்றும் சாதிகளுக்கு இடையிலான திருமணங்களை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் வழக்கறிஞர் சமூகத்தின் கடமை என்பதனையும் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளனர். இத்தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கண்டித்ததெல்லாம் இளைஞர்கள் பருவ மோகத்திற்கு ஆளாகி சீர்கெடுவதையும், வழக்கறிஞர்களே திருமணம் நடத்தி வைக்கும் பூசாரி-வழக்கறிஞர்களாக உருமாறி ரகசியமாகத் திருமணத்தை நடத்தி வைத்து அதனைப் பதிவுசெய்து கொடுப்பதையும் தான்.
பெண்களை மயக்கிக் காதலிப்பது போல் நடித்து, திருமணம் செய்து பின்னர் கைவிடுவது என்பது ஒரு கொடூரமான குற்றம் என்பதிலும் அத்தகைய கயவர்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால், இவ்வாறு செய்வதெல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும்தான், அதுவும் அப்படி ஏமாற்றுவதெல்லாம் உயர்சாதி பெண்களைத்தான் என்று சித்தரிப்பது தமிழ்ச் சமூகத்தைப் பிளவுபடுத்தி சாதி மோதல்களை உருவாக்குவதில்தான் போய் முடியும். காதலிப்பது போல் நடித்துக் கைவிடுவோர் சமுதாயத்தின் எல்லா அடுக்குகளிலும், எல்லா சமூகங்களிலும்தான் உள்ளனர். அதேபோல் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டு எல்லா எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்த்து நின்று தன் துணையோடு சிறப்புற வாழ்வாங்கு வாழ்வோரும் எத்தனையோ பேர் உள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்கத் தீர்ப்பினை திரித்துக் கூறுவோரின் கூற்றினை நம்புவோருக்கு இதனைத் தெளிவுபடுத்துதல் ஒரு சமுதாயக்கடமை.
கட்டுரையாளர் - சிபிஐ(எம்), திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினர்