tamilnadu

img

வட மாநிலங்களில் முதலில் இந்தியை சரியாக சொல்லிக் கொடுங்கள்

14-6-2019-தேதியிட்ட ‘இந்து-தமிழ்’ நாளிதழில்  எழுத்தாளர், ஆசிரியர் அ.வெண்ணிலா ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்திருக்கிறார். “தமிழ்நாடு முழுவதிலுமுள்ள தனியார் பள்ளிகளும், மத்திய அரசுப் பள்ளிகளும் இந்தி மொழியைக் கற்றுத் தரும்போது, அரசுப்பள்ளிகளில் இந்தி கற்றுத்தரக்  கூடாதா?” என்று கேட்டதோடு, இங்கிருக்கும் இருமொழி ஆதரவுத் தலைவர்களைப் பார்த்து, “இது என்ன இரட்டை வேஷம்?” என்றும் காட்டமாகவே கேட்டிருக்கிறார். “அரசுப் பள்ளியிலும் இந்தி கற்றுத் தர வேண்டும்” எனும் பதிலைக் கொண்டிருக்கும் கேள்வியிது. இதுதான் பிரச்சனையே! இருமொழியோ, மும்மொழியோ இந்தி வேண்டுமா? வேண்டாமா, எனும் கேள்விக்குச் சரியான பதிலை உணர்ந்து தெளிந்தாக வேண்டும். மத்தியஅரசு இந்தி படிக்கச் சொல்வதில் அரசியல் நோக்கமுள்ளது. அதை மறுப்பதும், அந்த அரசியல் நோக்கத்தைப் புரிந்த அரசியல் நோக்கம்தான்.   நேரு, இந்திரா போன்ற காங்கிரஸ் தலைவர்களாக இருந்தாலும், வாஜ்பாய், மோடி என பா.ஜ.க. தலைவர்களாக இருந்தாலும் இந்தியை இந்திய மாநிலங்கள் முழுவதும் பரப்புவதில் முன்னின்றவர்கள்தான், நிற்பவர்கள்தான். அதன் வழி இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தலாம். மொழிவழி ஆதிக்கம், இனவழி- அரசியல் ஆதிக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் என்ற அரசியல்தான். மறுப்பதும் இனவழி மொழிவழி ஆதிக்கத்தை மறுக்கும் அரசியல்தான். என்ன வேறுபாடெனில் முன்னது ஆதிக்க உணர்வின் அரசியல், பின்னது ஜனநாயக உணர்விலான அரசியல். இதை உணராமல் கல்வித்திட்டங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

காந்தி கூட இந்தியைப் பரவலாக்க வேண்டும் என்றாரே தவிர, தாய் மொழிவழிக் கல்வியை மறுக்கவில்லை! “எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நம் சிறுவர்கள் அந்நிய மொழி மூலம் கல்வி கற்பதை, இன்றே நிறுத்தி விடுவேன், தாய்மொழி மூலம் கற்பிக்கும்படிக் கட்டளை இடுவேன், எதிர்ப்பவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன்” என்று தெளிவாக எழுதுகிறார் (ஹரிஜன் இதழ் – 22-6-1947) ஆனால் காந்திஜி வழியில் ஆள்வதாகச் சொல்லிக் கொண்டே இந்தியை அனைத்து மாநில மொழிகளையும் பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தவே இவர்கள் நினைக்கிறார்கள். சரி, “இந்தித் திணிப்பை எதிர்ப்பது சரி, தமிழர்கள் மூன்றாவது மொழியாக இந்தியைப் படிப்பதால் என்ன குடி முழுகிவிடும்?” என்னும் கேள்வியை “நடுநிலையாக” வைப்போர்க்கான விடையைப் பார்ப்போம். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! தமிழர்கள் இந்தி மொழியை என்றும் எதிர்த்தவர்கள் அல்லர். இன்றும் தன் விருப்பாக இந்தியைப் படிப்போர் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்! “எதற்காகப் படிக்க வேண்டுமா?”எனும் வாதத்திற்குத்தான் அவர்களிடம் நியாயமான பதில் இல்லை. “இந்தி தேசிய மொழி” என்பது செயற்கையாக இவர்களாக –அரசியல் சட்டத்திற்கு மாறாக-  செய்வதுதான் பிரச்சனையே.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாவற்றிலும் இந்தியைப் புகுத்தியது அரசியல் சாசனத்திற்கு எதிரானதுதான் என்பதை இவர்களுக்கு யார் சொல்வது. சத்தீஸ்கர், தத்ரா- நகர் ஹவேலி, தில்லி, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 14 மாநிலங்களில் இந்தி மொழி பேசப் படுவதாக மத்திய அரசு சொல்வதைச் சற்றும் மாற்றாமல்  விக்கிப்பீடியாவும் சொல்கிறது.     ஆனால், இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் அனைவருமே இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர் அல்லர் என்பது முக்கியமான மற்றும் சொல்லப்படாத செய்தி. இரண்டாவது, மூன்றாவது மொழியாக வந்த இந்தி, கல்விமொழி, மாநில ஆட்சிமொழியாக இம்மாநிலங்களில் தொடர்ந்த பிறகு, தாய்மொழியை ஓரங்கட்டியதுதான் அண்மைக்கால ஆதிக்க  வரலாறு. இதுதான் இந்தித் திணிப்பின் நோக்கம் காஷ்மீர், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், பீகார், வங்கம், ஒரியா, சத்தீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மாநில மக்களுக்கு அந்தந்த மாநில மொழிகளின்  பெயரிலேயே பெரும்பாலான மாநிலப் பெயர்களும் அமைந்துள்ளதைக் கவனித்தால் ஒரு செய்தி புரியும். அது இவர்களுக்கு இந்தி தாய்மொழி அல்ல என்பதுதான்.  எனில், மத்திய அரசு இப்போது வெளியிட்டிருக்கும் “தேசிய கல்விக் கொள்கை-2019, வரைவு அறிக்கை” சொல்வது போல இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோர் எண்ணிக்கை 54 சதவீதம் என்பது தவறல்லவா? இந்த எண்ணிக்கை 43 விழுக்காட்டைத் தாண்டாதே? எனில், 43 விழுக்காட்டினர் பேசும் ஒரு மொழியையே மீதமுள்ள 57 விழுக்காட்டு மக்களும் ஏற்றுக் கொள்வதால் என்ன பயன் விளையுமாம்.

இந்தி மொழி வளர்ந்துவிடுமா. அல்லது இந்தியால் கல்விதான் வளருமா? எனில், புள்ளி விவரம் அதையும் இல்லையென்று அல்லவா சொல்கிறது? இதுபற்றிய விவரம் இதோ - இந்தியா விடுதலை பெற்றபின், மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்கள், இடவாரியாகப் பிரிக்கப்பட்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட் மாநிலங்களை விட முன்னேறியிருப்பதை, ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். இந்த மாநிலங்களின் கல்வி நிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்போமா? இந்த ஆண்டு, உத்தரப் பிரதேசப் பள்ளிக்கூடங்களில் 10,12 வகுப்புகளில், இந்திமொழித் தேர்வில் 10லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர்.  இந்தியே பாடமொழியாக மட்டுமின்றி, பயிற்று மொழியாகவும் கொண்டுள்ள சில வட  மாநிலங்களிலும் “இந்தித் தோல்வி” செய்திகளும் உண்டு! இந்தி மொழி பேசும் மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் பேர் பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வில் இந்தியில் தோல்வி! (சூன்,10 இந்துஸ்தான் டைம்ஸ்),   அரியானாவில் ஐம்பதாயிரம் மாணவர்க்கு மேல் இந்தியில் தோல்வி(மே,17 அதே).  

கடந்த பத்தாண்டுக்கும் மேலாகவே இந்த நிலைமைதான். அதோடு இந்திப் பாடத்தில் 50%க்கும் அதிகமான மதிப்பெண்களை பாதிக்கும் குறைவான மாணவர்களே பெறுகின்றனர் என்றும் ஒரு கூடுதல் செய்தி சொல்கிறது. ஏன் இப்படி? இதற்கான காரணம் முக்கியமானது! உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் வாழ்வோரில், பலகோடிப்பேரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைதிலி மொழிகளாகும். போஜ்புரியைத் தாய்மொழியாகக் கொண்டவர் எண்ணிக்கை மட்டுமே சுமார் ஐந்து கோடிக்கும் அதிகம். சாகித்ய அகாதெமி அங்கீகாரம் பெற்ற கலை-இலக்கிய வளம் மிக்க மொழிகள் போஜ்புரியும் மைதிலியும். ஆனால், சுதந்திரத்திற்கு முன்பு வங்கமொழியைப் போன்ற எழுத்துருக்கொண்ட போஜ்புரி நாளைடைவில் அழிந்து, இன்று பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது.  இன்றளவும் உபி, பீகாரில் அதிக அளவில் பேசப்படும் மொழி போஜ்பூரி ஆகும்.  ஆனாலும் ஆட்சியிலும், கல்வியிலும் தொடர்ந்த இந்தி மொழித் திணிப்பு காரணமாக, வீட்டில் தாய்மொழி பேசும் இன்றைய தலைமுறை இந்திப் பாடத்தில் தோல்வியடைகிறது. ஆக, மும்மொழித் திட்டமாகவோ, இருமொழித் திட்டமாகவோ, இந்தி நுழைந்தால், சொந்தத் தாய்மொழியும் அழியும், வந்த இந்தியும் சிந்திச் சிதறும், கல்வி நிலையும் சிதையும் என்பதையே உ.பி. முதலான இந்தித் தேர்வு முடிவுகள் முகத்தில் அறைந்து சொல்கின்றன.    

  இந்தியை உண்மையிலேயே வளர்க்க வேண்டுமானால்,  முதலில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோர் கல்வி வளர்ச்சியைத் தாய்மொழிவழித் திட்டமிட வேண்டுமே அன்றி, இந்தியை விடவும் பல ஆயிரம் ஆண்டுக்கு முன்னே வளர்ந்து நிற்கும் தமிழை அழிக்க நினைக்க வேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டு எதார்த்தம்.  இதற்கு மாறாக, இருமொழி பேசும் தமிழ்நாட்டின் பல்துறை வளர்ச்சி மற்றும் கல்வி, சுகாதார, பொருளாதார, சமூகச் சமத்துவ வளர்ச்சி இந்திய சராசரியைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளதையும் ஒப்பிட்டுக் காண்க : ஒன்றாம் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்ந்தால், 50பேர்தான் பள்ளி இறுதிக்கு வருகிறார்கள் என்பது இந்தியச் சராசரி. இது உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்னும் குறைவு.  ஆனால் தமிழ்நாட்டில் இது 79 அதாவது இந்தியச் சராசரிக்கும் அதிகம்! அதாவது மும்மொழி பேசுவோரை விடவும் (அ) இந்தியை ஒருபாடமாகப் படிப்போரை விடவும் இருமொழிபேசுவோரின் பள்ளிக் கல்விநிலை உயர்ந்துள்ளது. இதை விட முக்கியம், ஏற்கெனவே பள்ளியிறுதி (12ஆம் வகுப்பு) முடித்து, கல்லூரி உயர்கல்விக்குப் படிக்கப் போகின்ற இந்தியச் சராசரி-20.4%ஆக இருக்கும் நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் இதைவிடக் குறைவாகவே உயர்கல்விக்குச் செல்வோர் நிலை உள்ளது. குஜராத்-17.4%, ம.பி.-17.6%, உ.பி.,16.8%, ராஜஸ்தான்-18% ஆனால் தமிழகமோ இந்தியச் சராசரியை விடவும் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக 38.2% ஆக உள்ளது. தமிழகத்திலும் மும்மொழித் திட்டம் அமலானால், மாணவர் கல்விச் சுமை அதிகமாகி, அந்தக் காரணத்தாலேயே பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கவும், அதனாலேயே உயர்கல்விக்குச் செல்வோர் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு உண்டு. இப்போது சொல்லுங்கள், இருமொழியோ மும்மொழியோ இந்தி தமிழ்நாட்டுக்குச் சுமையாகுமா? சுவையாகுமா? கட்டுரையாளர் : அரசுப்பள்ளி பணிநிறைவு  செய்த தமிழாசிரியர், எழுத்தாளர் muthunilavanpdk@gmail.com

;