தஞ்சாவூர், டிச.18- தஞ்சாவூரில் நடந்த உடல் தகுதி போட்டியில் வெற்றி பெற்று வயர்மேன் (கேங்க்மேன்) பணிக்கு இரண்டு குழந்தைகளின் தாய் தேர்வு செய்யப்பட்டார். கணவரால் முடியாததை மனைவி சாதித்து காட்டி யுள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில், வயர்மேன் பணிக்கு உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வுகள் கடந்த டிச. 9 ஆம் தேதி முதல் துவங்கி டிச. 18 ஆம் தேதி முடிந்தது. இதற்கு 1,600 பேர் விண்ணப்பித்த நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்தனர். இத்தேர்வு, திருச்சி மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் வளர்மதி முன்னிலையில் நடந்தது. இதில் தஞ்சாவூர், திருச்சி, சேலம், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடந்த உடல் தகுதித் தேர்வில், அரியலூர் மாவட்டம் வளவட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணரசி (36) என்பவர் 30 அடி உயரம் கொண்ட மின்கம்பத்தில், 8 நிமி டத்திற்குள் ஏறி இரும்பு குறுக்கு சட்டத்தை இணைக்கும் போட்டியில், 6 நிமிடம் 43 வினாடிக்குள் ஏறி சட்டத்தை இணைத்தார். கிரிப்பர்ஸ் கட்டும் போட்டி யை 2 நிமிடத்தில் முடிக்க வேண்டியதை ஒரு நிமிடம் 40 வினாடிக்குள்ளும், இரும்பு சட்டத்தை தூக்கிக் கொண்டு 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்தில் கடக்க வேண்டியதை 25 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார். இதுவரை நடந்த போட்டிகளில் 41 பெண்கள் பங்கேற்றனர். அதில் பெண்ணரசி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணரசியின் கணவர் அழகரசன் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு 42 வயதாகிவிட்டதால், வயர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து பெண்ணரசி கூறுகையில், “வயர்மேன் பணிக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் பயிற்சி பெற்றேன். எனது கணவர்தான் முழு பயிற்சியும் அளித்தார். அவர், என்னால் நிரந்தர ஊழியராக முடியவில்லை, நீயாவது சாதித்துக் காட்டு என அளித்த ஊக்கமே, இந்த வெற்றிக்கான காரணம். திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அபர்ணா என்ற மகளும், அரவிந்தராஜ் என்ற மகனும் உள்ளனர்” என்றார்.