tamilnadu

img

பேராவூரணி அருகே பெருமகளூரில் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

தஞ்சாவூர், ஏப்.20-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர் என்ற சிறு கிராமம் உள்ளது. பேராவூரணி-அத்தாணி-கட்டுமாவடி பேருந்து வழித்தடத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் இடிபாடுற்று கிடக்கும் சிவாலயத்தினை புதுப்பிக்கும் பணியில் இப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வூர் மக்களின் சார்பாக பெரியவர் சண்முகநாதன் கோவில் வளாகத்தில் புதையுண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தியினைப் படித்தறியும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதரும், தொல்லியல் ஆய்வாளருமான மணி.மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன், வை.இராமமூர்த்தி ஆகியோருடன் அவ்வூருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது பற்றி மணி.மாறன் கூறியதாவது, ‘‘களப்பணியின்போது சோமநாதர் கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதையும் குலோத்துங்க சோழனாலும், பாண்டிய மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது என்றும், பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் காலத்தில் கொடை அளிக்கப் பெற்ற செய்தியினைக் கூறும் மராத்தி மொழி மற்றும் மோடி எழுத்திலமைந்த கல்வெட்டே தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இக்கோவில் சோழர் காலக்கோவில் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கோவிலுக்கு நேர் எதிராக காவிரிக் குடிநீர்த் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற போது நடராஜர், விநாயகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் புதையுண்டிருந்து கண்டெடுக்கப்பட்டது. இவை தற்போது தஞ்சாவூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


பெருமுள்ளூர்

சோழ நாட்டில் முதலாம் இராஜராஜனால் உருவாக்கப் பெற்ற வளநாடுகள் பலவற்றை முதலாம் ராஜேந்திர சோழன் மேலும் பல வளநாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரித்தான். அவற்றுள் பாண்டிய குலாசனி வளநாட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப் பெற்ற ஜெயசிங்க குலகால வளநாட்டில் அடங்கிய ஒரு பேரூரே பெருமுள்ளூர் என்னும் ஊராகும். அன்று பெருமுள்ளூர் என்றழைக்கப்பட்ட இவ்வூர் பெயர் மருவி இன்று பெருமகளூர் என்று அழைக்கப்படுகிறது. வரலாற்றில் இவ்வூர், பெருமுள்ளூரான குலோத்துங்க சோழ சதுர்வேதிமங்கலம் எனக் குறிக்கப் பெறுகின்றது. குலோத்துங்க சோழன் காலத்திற்கு (கி.பி.1070-1125) முன்னதாகவே இராஜராஜனால் இச்சிவாலயம் எழுப்பப் பெற்றிருக்க வேண்டும். நம் வரலாற்றில் பல்வேறு சான்றுகள் மறைந்தும் புதைந்தும் கிடப்பதால் பல செய்திகளை வெளியுலகு அறிய இயலாமல் போய்விடுகிறது. கோவிலோடு இணைந்து திகழும் பெருங்குளமான தாமரைக்குளத்தின் நீர் வெளியேறும் அமைப்பும், கட்டுமானமும் இராஜராஜன் காலத்துப் பாணியைக் காட்டுகின்றன.பாண்டிய மன்னர்களால் இவ்வூரும், இங்கு திகழும் கோவில்களும் போற்றப் பெற்றுள்ளன.


பாண்டிய நாட்டின் எல்லையான வெள்ளாற்றின் அருகே இவ்வூர் அமைந்துள்ளதே இதற்குக் காரணம் ஆகும். இங்கு கிடைத்த கல்வெட்டில் காலத்தால் முந்தையது குலோத்துங்க சோழனின் கல்வெட்டாகும். பல்வேறு காரணங்களால் பிற கல்வெட்டுகள் காலப்போக்கில் அழிந்துள்ளன.இங்கு புதிதாகக் கண்டறியப்பட்ட மராத்திய மொழியின் ஒரு வடிவமான மோடி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் (கி.பி.1739-1763) காலத்தில் வெட்டப்பட்டதாகும். இக்கல்வெட்டில் சாலிவாகன சகாப்தம் 1674 என்றும் கலி ஆண்டு 4854 என்றும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதன்படி இக்கல்வெட்டு வெட்டப்பெற்ற ஆங்கில ஆண்டு கி.பி.1753 ஆகும். இக்கல்வெட்டுச் சாசனத்தில் செப்பேடு மற்றும் ஓலைச் சுவடிகளில் காணப்படுவது போன்று முத்திரை இடப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மேலும், சூரிய, சந்திரரைக் குறிப்பிடும் வட்டமும் பிறையும் வெட்டப்பட்டுள்ளது. மராத்தி-மோடி எழுத்துக்கள் கலந்து காணப்படும் இக்கல்வெட்டு பிரதாப சிம்மன் பெருமுள்ளூர் சிவாலயத்திற்கு வழங்கிய கொடையினை விவரிக்கிறது.கிட்டத்தட்ட 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட கல்வெட்டின் பக்கவாட்டில் இதே செய்தி, தமிழிலும் வெட்டப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ப்பகுதி மிகவும் சிதைவுற்று இருப்பதால் படித்தறிய முடியா நிலையில் உள்ளது. தமிழகத்தில் சோழர் காலத்துக் கோவிலில் கிடைத்துள்ள மராத்தி மொழி மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு இதுவேயாகும்’’ என்று மணி.மாறன் தெரிவித்தார்.

;