tamilnadu

img

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

தஞ்சாவூர், டிச.14- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், நெல் பயிரில் ஆனைக்கொம்பன் ஈயால் பாதிக்கப்பட்ட  சொக்கநாதபுரம், பள்ளத்தூர் மற்றும் கொள்ளுக்காடு ஆகிய கிராமங்களை சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திலிருந்த வருகை தந்த கூடுதல் வேளாண்மை இயக்குநர் (விதைகள்) டி.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்  பெருமகளுர், செந்தலைவயல், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், குருவிக்கரம்பை மற்றும் பூக்கொல்லை ஆகிய பகுதியிலும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இந்த பூச்சியின் தாக்குதலை பற்றி அரசு முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மை இயக்குநர் ஆகியேரிடம் பாதிப்பு விபரங்களை எடுத்துக் கூறுவதாக தெரிவித்தார்.  மேலும், நடப்பு சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடர் மழையினாலும் தட்ப வெப்ப மாறுதல்களினாலும் ஆனைக்கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும் கொசுவை போல சிறியதாகவும் இருக்கும் இந்த ஈ யின் தாக்குதலினால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறமாகவோ அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவோ வெங்காய இலை போல் காணப்படும். பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றமாக இருக்கும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர் உருவாகாமல் மகசூல் இழப்பு ஏற்படும்.  ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க நெல் வயலில் களைகளை இல்லாமல் வைத்திருக்க வேண்டும். பரிநதுரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும் ஆனைக்கொம்பன் ஈயின் இயற்கை எதிரிகளான சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும் 10 சதவீதத்திற்கு மேல் தாக்குதல் தென்பட்டால் ஏக்கர் ஒன்றுக்கு பிப்ரோனில் 500 கிராம் அல்லது பிப்ரோனில்  10 கிலோ அல்லது குளோர்பைரிபாஸ் 500 மிலி அல்லது தயோமீதாக்ஸம் 40கிராம் இவற்றில் ஏதேனும் ஒரு இராசயன மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். தனியார் உர நிறுவனங்கள் பரிந்துரை செய்யும் அளவிற்கு அதிகமான பூச்சி மருந்துகளை வாங்கி அதிக பணத்தினை செலவழித்திட வேண்டாம் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குநர் எஸ்.மாலதி, தரக்கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குநர் ஆர்.சாருமதி, வேளாண் அலுவலர் எஸ்.சங்கவி உடனிருந்தார்.