தஞ்சாவூர்:
கஜா புயல் தாக்கி இரண்டு ஆண்டிற்குள்ளாக மீண்ட தென்னை விவசாயிகளின் வாழ்வை மீண்டும் நிலை குலைய வைக்கசெய்யும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும், தென்னை வாரிய அலுவலகத்தை அமைக்கவும் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2108-ல் நவ.15 நள்ளிரவு தொடங்கி16-ஆம் தேதி அதிகாலை வரை வீசிய கஜாபுயல் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாலான மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சுமார் 62.42 லட்சம் தென்னை மரங்கள் வேரோடும், பாதியாகவும் முறிந்து விழுந்தன. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் மட்டும் சுமார் 45.07 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன. புயலை எதிர்கொண்டு நின்ற மரங்கள் காய்ப்பு தராமல் பட்டுப் போய்விட்டன. இதனால் விவசாயிகள் மிகவும் அவதியடைந்தனர். இருப்பினும், விவசாயிகள் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என புதிய தென்னங்கன்றுகளை வைத்து விட்டனர். ஆனால்தென்னங்கன்றுகள் வைத்த விவசாயிகளுக்கு, அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய மானியங்கள் முறையாக கிடைப்பது இல்லை எனதெரிவித்தனர். இதற்காக தென்னை வாரியத்தை தஞ்சையில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: கஜா புயலின் தாக்கத்தால் இழந்த தென்னை மரங்களுக்கு பதிலாக, ஒராண்டு போராடி புதிய தென்னங்கன்றுகளை நட்டு வைத்து மீண்டும் இழந்த வாழ்வாரத்தை மீட்கும் முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். அதன்படி தற்போது இரண்டு ஆண்டுகளில் பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை ஆகிய பகுதிகளில் 90 சதவீகித பகுதிகளில் தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டுவிட்டன. இருப்பினும் புயலால் பாதிக்கப்பட்ட பெரிய மரங்கள் இரண்டாண்டுகள் பாளை விடாமல் இருந்த நிலையில், தற்போது காய்க்க துவங்கி விட்டன.
ஆனால் புதிதாக தென்னை மரங்களைநடவு செய்ய வேண்டும் என்பதற்காக, புயலில் விழுந்த மரங்களை சாலையோரங்களிலும், ஏரி, குளங்களிலும் போட்டு விட்டு விட்டதால், அந்த மரங்கள் பல நாட்கள் மழை வெயிலில் வீணாகி, அதில் காண்டாமிருக வண்டுகள் உருவாக துவங்கியது. அதன் மூலம், நடவு செய்யப்பட்ட ஒரு வயதுக்கு மேல் உள்ள புதிய மரங்களை காண்டமிருக வண்டுகள் தாக்கி, தென்னை வளர்ச்சியை தடுத்து வருகின்றன. மீதமுள்ள புதிய கன்றுகளை காப்பாற்றவும் சரியான வழிக்காட்டுதல் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் தவித்துவருகிறோம்.மத்திய அரசின் தென்னை வாரியம் கேரளா மாநிலம் கொச்சியிலும், தமிழகத்திற்கான அதன் மண்டலம் சென்னையிலும்தான் உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள், சாகுபடி குறித்த தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், வளர்ச்சி திட்டங்களுக்கான தகவல்கள், மானியங்கள் போன்றவை பெறுவதற்கு சிக்கல் உள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூரில் தென்னை உற்பத்தி அதிகளவில் இருக்கும் பட்சத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாரியத்தில் இருந்து அதிகாரிகள் எட்டிபார்க்கவில்லை.இதற்கு தீர்வு காணும் வகையில், தென்னை வளர்ச்சி வாரிய தலைவர் மற்றும் துணை இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள், வளர்ச்சி வாரிய அலுவலகங்களை பேராவூரணி அல்லது தஞ்சையில் அமைத்தால்மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். தென்னை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.