tamilnadu

img

சமுதாயக் கூடம் திறப்பு

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 51 வது வார்டு பகுதியில் பூங்கா மற்றும் சமுதாயக் கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம்  முன்னிலை வகித்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் கீழ் மத்திய, மாநில மற்றும் மாநகராட்சி பங்களிப்புடன் திட்டத்தின் கீழ் ரூபாய் 98.40 இலட்சம் மதிப்பீட்டில் 2,000 குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் வார்டு 51 பகுதிக்குட்பட்ட முல்லை நகரில், முல்லை நகர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பூங்காவினையும், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில்   மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய சமுதாயக்கூடம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.  தொடர்ந்து, மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் உள்ள குறுகிய தெருக்களில் குப்பைகளை சேகரிக்க ஏதுவாக ரூபாய் 0.896 கோடி மதிப்பீட்டில் பதினாறு இலகுரக வாகனத்தினை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். ரூபாய் 14.82 லட்சம் மதிப்பீட்டில், துப்புரவு பணியாளர்களுக்கு ரப்பர் கையுறை, ஒளிரும் ஜாக்கெட், மூக்கு உறை, கம்பூட், மழைக் கோட், காலணி போன்ற பாதுகாப்பு உபகரணங்களையும், ரூபாய் 19.33 லட்சம் மதிப்பீட்டில், துப்புரவு பணிக்கான தளவாடப் பொருட்களையும், வேளாண்மைத் துறை அமைச்சர் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.  நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒருங்கிணைந்த மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவர் காந்தி, மாநகர நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.