tamilnadu

img

‘இயற்கையின் சதியால் மட்டும் அல்ல, அரசியல் சதியாலும் காவிரி வறண்டுவிட்டது’

தஞ்சாவூர், ஆக.29- காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி தஞ்சாவூரில் புதன்கிழமை அன்று திமுக விவசாய அணி சார்பில், காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.  தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., செ.ராமலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் கரூர் ம.சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணிச் செயலாளர் முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்றார்.  கருத்தரங்கில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; டெல்டா மாவட்டங்கள் வறண்டு விட்டது. குறுவை சாகுபடி இல்லை. பருவமழை பொய்த்து விட்டது. மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்படவில்லை. விவசாயமும் நலிவடைந்து விட்டது. விவசாயிகள் தற்கொலை பெருகி விட்டது. விவசாயிகள் வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாய பூமியை பழிவாங்க மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கொண்டு வரப்படுகிறது. விவசாயிகளின் நிலங்களை பலவந்தமாக அபகரித்து எட்டு வழிச் சாலை போடப்படுகிற சூழல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சனைகள் உடனே தீர்க்கப்படவில்லை என்றால் தமிழகம் மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும். இது தஞ்சை பிரச்சனை மட்டும் அல்ல, ஒட்டுமொத்தமான தமிழகத்தின் பிரச்சனையாக நாம் பார்க்க வேண்டும். காவிரி நீரை விவசாயத்திற்காக 12 மாவட்ட விவசாயிகளும், குடிநீர் தேவைக்காக 19 மாவட்ட மக்களும் நம்பி உள்ளனர். தஞ்சைக்கு ஆபத்து என்றால், தமிழகத்திற்கும் ஆபத்து. இயற்கையின் சதியால் மட்டும் அல்ல, அரசியல் சதியாலும் காவிரி வறண்டு போய்விட்டது. தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது. காவிரியில் தண்ணீரை கேட்பது தமிழகத்தின் உரிமை. அதை கர்நாடகா வழங்குவது கடமை. ஆனால் கர்நாடக அரசு அந்த கடமையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.  காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு தான் பி.ஜே.பி., பக்கபலமாக உள்ளது. தமிழகத்தை பற்றி அவர்களுக்கு துளிகூட அக்கறை இல்லை.  இதை பற்றி விமர்சனம் செய்யவோ, தட்டிக் கேட்கவோ முதுகெலும்பு இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடக அரசு காவிரி விவகாரத்தில் அவர்களது மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள். ஆனால் அந்த உணர்வு தமிழக அரசிற்கு இல்லை. கொள்ளையடிப்பதில் தான் கவனமாக உள்ளனர். அதே வேளையில் தண்ணீரை பெற்று தர வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு தான் உள்ளது.  கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மன்னார்குடி எஸ்.ரங்கநாதன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ நன்றி கூறினார்.