tamilnadu

img

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை அமைச்சர் காமராஜ் பேட்டி

தஞ்சாவூர்:
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டதாக கூறுவது தவறான தகவல் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

தஞ்சையை அடுத்த மடிகை மற்றும் மூர்த்தியம்பாள்புரம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்  கோவிந்தராவ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலைமண்டல மேலாளர்(பொறுப்பு) சிற்றரசு, துணை மேலாளர் பன்னீர்செல்வம்,  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-மேட்டூர் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தேவையான மும்முனை மின்சாரத்தை கோடை சாகுபடிக்கு வழங்கியதால், எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் விவசாயம் நடந்தது.

இந்த ஆண்டு இதுவரை 26 லட்சத்து 69 ஆயிரத்து 167 டன் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நெல்கொள்முதல் வரலாற்றில் மைல் கல். 28 ஆயிரம் டன் வரை கொள்முதலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 4 லட்சத்து 29 ஆயிரத்து 598 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். ரூ.5 ஆயிரத்து 48 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் ஊக்கத்தொகை மட்டும் ரூ.168 கோடியே 93 லட்சம் வழங் கப்பட்டுள்ளது.டெல்டா முழுவதும் 412 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 83 நெல் கொள்முதல் நிலையங்களும் என 495 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள் ளன. இதனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் கொள்முதல் நடந்து வருகிறது. ஏதாவது புகார்கள் வந்தால் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள் ளப்படும். தேவைப்படும் இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்  கொள் முதல் நிலையங்களை திறக்க உத்தரவிடுவார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன்கள் வழங்க வேண்டாம் என யாரும் அறிவிக்கவில்லை. இது தவறான செய்தி. கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை தர வேண்டும் என உத்தரவு உள்ளது. எனவே அவர்கள் நிச்சயம் கொடுத்துத்தான் தீர வேண்டும். அதற்காக தமிழக அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் நல்ல மழை பெய்து வருவதால், தண்ணீர் பிரச்சனை வர வாய்ப்பில்லை. விவசாயிகள் கவலையில்லாமல் சாகுபடியை செய்யலாம். விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கடைமடை வரை சென்று விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

;