தஞ்சாவூர் ஆக.28- தஞ்சாவூர் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை சிறப்பு குடிமராமத்து பணிகள் குறித்து ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆட்சியரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு சந்தித்து, பேராவூரணி தொகுதியில் நிறைவேற்றப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பேராவூரணி தொகுதிக்குட்பட்ட கடைமடைப் பகுதிகளில் விரைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள வலியுறுத்தினார். திருவோணம், சேதுபாவாசத்திரம், பேராவூரணி கடைமடைப் பகுதி விவசாயத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கவும், பெருமகளூர் பகுதியில் வரத்துவாரிகளை தூர்வாரி, கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார். முன்னதாக, பேராவூரணி தொகுதியில் ரூ.25 கோடியில் அமைய உள்ள நவீன அரிசி ஆலைக்கான இடத்தை தேர்வு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தினார்.