தஞ்சாவூர், மே 30-ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி திட்டமிட்டபடி வரும் ஜூன் 4ஆம் தேதி தஞ்சையில் அனைத்து கட்சியினர், இயக்கங்கள் கலந்து கொள்ளும்ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. தஞ்சாவூரில் வியாழக்கிழமை அன்று அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி முன்னிலை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலாளர் அயனாவரம் சி.முருகேசன், சிபி(எம்.எல்)மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர் இரா.அருணாச்சலம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி(மா.லெ மாவோ சிந்தனை) மாவட்டச் செயலாளர் அருண்சோரி, காவிரி பாசன விவசாயிகள் சங்கம் பழனிச்சாமி ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.மாலதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், சரவணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாநகரக்குழு ஹெச்.அப்துல் நசீர், ராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாநகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும். விவசாய விளைநிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும்பணியைக் கைவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கேட்டுப் பெற வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு, திட்டமிட்டபடி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக, ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கும் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், போராட்டத்தில் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைப்பு விடுத் தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.