tamilnadu

img

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூர்:
இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநில விரிவு பெற்ற, மாநிலக் குழு கூட்டம், இரண்டு நாட்கள்  தஞ்சையில் நடைபெற்றது. சம்மேளனத் தலைவர் ஆர். சிங்காரவேலு கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் கே.தங்க மோகன்,சம்மேளன பொதுச் செயலாளர் டி.குமார்,மாநில துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு,சுப்பையா, மாநில உதவி பொதுச்செயலாளர்கள் ராமர், கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாவட்ட செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அன்வர் உசேன், கே. தங்க மோகன், ஆர்.சிங்காரவேலு, டி. குமார்,மாலதி சிட்டிபாபு ஆகியோர் இன்றைய அரசியல் நிலைமைகளையும், தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும்விளக்கிப் பேசினார்கள். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள நலவாரிய திட்டத்தில், கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, இயற்கை மரண உதவித்தொகை ரூபாய் 2 லட்சம், பென்சன் ரூ.3000 அறிவிக்கப்பட்ட உதவிகளுக்கு, உடனே அரசாணை வெளியிட வேண்டும். தரமான எம்-சாண்ட், பி-சாண்ட் மாற்று மணலை தமிழக அரசே உற்பத்தி செய்ய வேண்டும். குறைந்த விலையில் ஆற்றுமணல் வழங்க மாவட்டங்களில் குடோன் அமைத்து வழங்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் மார்ச் மாதம் கட்டுமான சங்க கிளைகள் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி சென்னையில் போராட்டம் நடத்துவது” என முடிவு செய்யப்பட்டது. 

;