tamilnadu

img

அசுத்தமான குடிநீரால் பருத்திகுடி மக்களுக்கு உடல்நலம் பாதிப்பு சிபிஎம் நூதன போராட்டம் அறிவிப்பு

கும்பகோணம், மே 20 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பருத்தி குடி ஊராட்சியில் தலித் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் அசுத்தமாக வருவதால், மக்கள் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சுத்தமான குடிநீர் வழங்கக் கோரி நூதனப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பருத்திகுடி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் குடிநீர் வசதியின்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர். தெருவில் இருந்த கை பம்பு பழுதடைந்து விட்டது. இது சம்பந்தமாக அத்தெரு மக்கள் மற்றும் வாலிபர் சங்க செயலாளர் சிரஞ்சீவி, குடிநீர் வழங்கக் கோரி போராடிய பிறகு சிறிய தண்ணீர் டேங்க் கட்டி தரப்பட்டது.  

தற்போது அந்த டேங்கில் இருந்து வரும் நீர் காவி நிறத்தில் மண் கலந்து தூசியுடன் கலங்கலாக உள்ளது.  வேறு வழி இல்லாததால் அப்பகுதி மக்கள் இதனை குடிப்பதற்கும் மற்ற தேவைக ளுக்கும் பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதனால் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக்குறை வுடன் உள்ளனர். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் நேரில் கூறியும் இதுவரை எவ்வித பயனு மில்லை.

ஆகவே அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனையில் தலை யிட்டு கொள்ளிடத்தில் இருந்துவரும் குடிநீரை  மக்களுக்கு கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவிடைமருதூர்  வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜீவபாரதி, மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, வாலிபர் சங்க செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் திருவிடை மருதூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.  அவர் உடனடியாக அதனை சீர்படுத்தி சுத்தமான குடிநீர் தருவதாக உறுதி அளித்தார். ஆனால் ஒரு வார காலத்திற்குள் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை எனில் குடிநீர் தேவைக்காக போராடுவதை துரிதப்படுத்தி சிபிஎம் சார்பில் மக்களைத் திரட்டி ‘குடிநீர் அருந்தா போராட்டம்’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.