தஞ்சாவூர், ஜூன் 11- தஞ்சாவூர் மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மல்லிபட்டி னம் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள பள்ளிவாசல் அருகில், கடைவீதிக்கு அருகாமையில், சாலையோரத்தில் குப்பைகளை, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, காக்கைகள், தெரு நாய்கள் தொந்தரவும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மற்றும் மதிமுக ஊராட்சிக் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.சேக் தாவூத் கூறுகையில், “இறைச்சிக் கழிவுகளை காகங்கள் தூக்கிச் சென்று வீட்டுப் பகுதியில் வீசிச் செல்கின்றன. உணவைத் தேடி வரும் தெருநாய்கள் சண்டையிட்டு சாலைப் பகுதிக்கு, திடீரென ஓடி வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.