தஞ்சாவூர்:
ஒரத்தநாடு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் போலி சிலையை வைத்து உற்சவர் சிலையை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக சிலை கடத்தல் பிரிவுகாவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தொன்மைவாய்ந்த, காசி விஸ்வநாதர் ஆலயத் தில் உற்சவ மூர்த்தி சிலைகள், மகற்சிலைகள் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்தஇக்கோவிலில் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த அனைத்து ஊர் மக்களும், இங்குதான் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். தற்பொழுது இரண்டு ஆண்டுகளாக கோவிலின் கட்டுமான பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் கோவிலின் செயல் அலுவலர் சுரேஷ் கோவிலில் உள்ள சிலைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்தார். 24 உற்சவர் சிலைகளும், 60 கற்சிலைகளும் இருந்தன.
சொத்து பதிவேட்டின்படி, இந்த எண்ணிக்கை சரியாக இருந்தாலும் கோவிலில் ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு ஆய்வு செய்தபோது, ஒரு சிலையில் மட்டும் மாற்றம் தெரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்புகோவிலில் வைக்கப்பட்டிருந்த உற்சவமூர்த்தி சிலைகளில் தொன்மையான காலசம்ஹார மூர்த்தி சிலையை கொள்ளையடித்து விட்டு, அதற்கு பதிலாக போலி சிலையை வைத்தது தெரியவந்தது. கொள்ளையடித்த சிலை பல லட்ச ரூபாய் மதிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.இதுகுறித்து செயலாளர் சுரேஷ் சிலை கடத்தல் பிரிவு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஒரத்தநாடு விசாலாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.