தஞ்சாவூர் கருணாசாமி கோவில் திருக்குளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியின்போது சுடுமண்ணாலான 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை கரந்தை பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் எதிரே சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குளம் மற்றும் இந்த குளத்திற்கு வரக்கூடிய நீர் வழிப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில், சிவனடியார்கள் இந்த குளத்தை மீட்டு, நீர் வழிப்பாதையை கண்டறிந்து. தஞ்சை வடவாறு ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு குளத்திற்கு தண்ணீர் வந்து குளம் நிரம்பியது. தற்போது ரூ.2.25கோடி மதிப்பீட்டில் குளத்தில் தூர்வாரும் பணி கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இந்த குளத்தில் தூர்வாரும்போது ஆங்காங்கே 3 அடி சுற்றளவு சுடுமண்ணாலான 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குளத்தை முழுமையாக தூர்வாரினால் பல உறை கிணறுகள் இருக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.