தஞ்சாவூர், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவர், தனக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் கரும்பு நடவு செய்துள்ளார். தற்போது கரும்பு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சுப்பிரமணியனுக்கு சொந்தமான கரும்பு வயல் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் 21 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டு இருந்த கரும்பு பயிர் பெரும்பாலானவை தீயில் கருகி நாசமானது. மேலும், அடுத்தடுத்த வயலுக்கும் தீ பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து வந்து மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கரும்பு வயலை, பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி, பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்படாமல் மீதமுள்ள கரும்புகளை வெட்டி அரவை ஆலைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரும்புகள் சேதமடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.