பதான்கோட்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும், ஆல்ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா, தனது நண்பர் தோனியின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு அறிவித்த தினத்தன்று (ஆக., 15) தானும் கிரிக்கெட் போட்டிக்கு ஓய்வு அளித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு ஓய்வு அறிவித்தாலும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்காக பயிற்சி பெற அபுதாபியில் சென்றார்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் உறவினர்கள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில் குடியிருக்கின்றனர். இவர்கள் மீது கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது மாமா அசோக் குமார் உயிரிழந்தார். மேலும் ரெய்னாவின் சகோதரி ஆஷா தேவி மற்றும் அவரது அத்தை கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெய்னாவின் சகோதரர்கள் லேசான காயங்களுடன் சிகிக்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தால் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இந்தியா திரும்பியுள்ளார்.
இக்கட்டான நிலையில் தவிக்கும் ரெய்னாவிற்கு சென்னை அணியின் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் கூறியுள்ளார். ஏற்கெனவே சென்னை அணியில் கொரோனா தனது ஆட்டத்தை துவங்கி 13 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. தற்போது ரெய்னா வேறு குடும்ப விவகாரத்தால் விலகியுள்ளது சென்னை அணிக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளது.
குறிப்பு : ரெய்னா குடும்ப தாக்குதல் செய்தி - ஜக்ரன் (jagran) என்ற இணையதள செய்தி தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.