tamilnadu

img

விளையாட்டுக்கதிர்: தடகளத்தின் ‘தலைமகன்’! - சி.ஸ்ரீராமுலு

“இந்திய தடகளத்தில் சாதிக்கும் ஓட்டப்பந்தய வீரர்கள் ஒவ்வொரு வருக்கும் வழிகாட்டி ‘மில்கா சிங்’ என்றால் அது மிகையல்ல. ஆனால் நமக்கு தெரிந்து உலகின் ‘மின்னல் போல்ட்’ என செல்லமாக அழைக்கப்பட்ட ஜமைக்காவின் உசேன் போல்ட் மட்டுமே. காரணம், 1980களுக்குப் பிறகு பிறந்த அவர் தடைகளை தகர்த்து தடகளத்தில் அதிக தங்கப்பதக்கம் வென்றவர்களில் தனக்கு நிகர் தான் மட்டுமே என்பதை நிரூபித்துக் காட்டியவர்.
‘பறக்கும் மன்னன் ‘
இந்திய தடகளத்தின் அடையாளம். காமன்வெல்த் விளையாட்டில் முதல் தங்கம் வென்ற இந்திய தடகள வீரர். இந்தியாவின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர்... என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவர்தான் மில்கா சிங்! 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஓர் ஓட்டப் பந்தயத்திற்கு அழைப்பு வந்தது. ஆனால், பழைய நினைவுகள் கண்முன் நின்றதால் அந்த பந்தயத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார் மில்கா சிங். அன்றைய பிரதமர் நேருவின் அன்பு கட்டளைக்கு அடிபணிந்து தனது முடிவை மாற்றிக் கொண்டார். பாகிஸ்தான் வீரர் அப்துல் காலிக் இந்திய வீரர் மில்கா சிங் என்று அந்த போட்டி பாகிஸ்தானில் விளம்பரப்படுத்தப்பட்டது. அந்த சவாலை ஏற்றுக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் இரு வீரர்களும் ஓடி வந்தனர். உள்ளூர் வீரருக்கு அதிகமாகவே ஆதரவு இருந்தது. மின்னல் வேகத்தில் ஓடி எல்லைக் கோட்டைக் கடந்து வென்றது இந்திய வீரர் மில்கா சிங். மில்கா சிங்கின் அபார திறமையை பார்த்து மலைத்துப் போன பாகிஸ்தான் ஜெனரல் அயூப் கான்பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், ‘நீங்கள் ஓடவில்லை, பறந்து சென்றீர்கள்’ என்று பாராட்டியிருக்கிறார். அங்குதான் அவருக்கு ‘ஃபிளையிங் சிங் (பறக்கும் சீக்கியர்)’ பட்டமளிக்கப்பட்டது. நாட்டின் அடையாளம்! 80 களுக்குப் பிறகு பிறந்த பெரும்பாலானோர் இந்த மில்கா சிங்கைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை.

பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய பாகிஸ்தானில் ஒரு பகுதியாக இருக்கும் முசாபர் மாவட்டம் (பஞ்சாப் மாகாணம்) முசாபர் நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்தபுரா கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு 1929-ல் நவம்பர் 20ஆம் தேதி பிறந்ததாக பாகிஸ்தான் நாட்டின் பதிவுகள் கூறுகிறது. அதே சமயம் இந்திய ஆவணங்கள் 35 ல் பிறந்தார் என்று தெரிவிக்கிறது. இளம் வயதில் கால் கடுக்க நடந்ததுதான் அவர் தடகள வீரராக மாறியதற்கான ஆரம்பப் புள்ளி. தினமும் 20 கி.மீ. நடந்து சென்று கல்வி பயின்றுள்ளார். 15 வயதில், இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில், மில்கா சிங்கின் கண் முன்னே தந்தை, தாய், இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன் உட்பட 5 ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். அந்த கலவரத்தில் செய்வதறியாமல் கதறிக் கொண்டிருந்த இளைய மகனிடம், சாகும் தருவாயில் இருந்த தந்தை ‘ஓடிவிடு, இல்லாவிட்டால் உன்னையும் சுட்டுக் கொன்று விடுவார்கள்’ என சொன்னதைக் கேட்டு உயிருக்கு அஞ்சி, காட்டு வழியே ஓடி, ஒரு ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்தவர் தான் மில்கா சிங்! உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓட ஆரம்பித்தான் சிறுவன் மில்கா சிங்.

அந்த முதல் ஓட்டத்தில் வெற்றிகரமாக ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொண்டு அங்கிருந்து, தில்லியில் உள்ள சகோதரியிடம் அடைக்கலமானார். அவருடைய சகோதரரின் அரவணைப்பில் வளர்ந்தார். அந்த சமயம் ஒரு முறை டிக்கெட் எடுக்க பணமில்லாமல் ரயிலில் பயணித்தபோது கைது செய்த அதிகாரி ‘திகார்’ சிறையில் அடைத்தார். இந்தத் தகவலை அறிந்த சகோதரி, கொஞ்ச நஞ்சம் வைத்திருந்த நகைகளை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு தம்பியை சிறையிலிருந்து மீட்டு வந்தார். பள்ளிப் படிப்பை முடித்த மில்கா சிங், இந்திய ராணுவத்தில் சேர விரும்பினார். உருவத்தில் ஒளியாக இருந்ததால் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டார். மூன்றாவது முயற்சியில் வெற்றி கிடைத்தது. ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் மிக்குறைந்த நேரத்தில் 5 மைல்கள் ஓடும் முதல் பத்து வீரர்களுக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் ஒருவராக வந்தபோதுதான் தனக்குள் ஒரு ஓட்டப்பந்தய வீரர் இருப்பதை ராணுவப் பள்ளி அடையாளம் காட்டியது. 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த போது தனது திறமையை அறிந்து ஓடத் தொடங்கினார். அதன்பிறகு தடை காலத்தில் கொடிகட்டிப் பறந்தார்.
சாதனைகள்...
2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் வட்டு எறிதலில் இந்திய வீரர் கிருஷ்ணா பூனியா தங்கம் வெல்லும் வரை தடகள தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே வீரர் மில்கா சிங். 1958 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 200 மீட்டர்,400 மீட்டர் ஓட்டத்திலும் 1962 ஆம் ஆண்டு தென் கொரியாவில் 400 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டத்தில் 4 தங்கப்பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்தார். தேசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் 400 மீட்டர் ஓட்டங்களில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் குவித்து கொடிக் கட்டி பறந்தவர்.
சர்வதேச போட்டிகளில் 1956 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், 1960-ல் இத்தாலியின் ரோம், 64-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோ என மூன்று கோடை ஒலிம்பிக் போட்டியிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டு தடகள விளையாட்டில் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமைக்குரியவர். இதில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 0.1 ஒரு வினாடி பின் தங்கியதால் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டு நான்காவது இடத்தை பிடித்தார். அவரது ஒலிம்பிக் பதக்க கனவு மட்டும் கைகூடவில்லை.
பாடம்...
இந்திய தடகளத்தில் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு தந்தையாகிய மில்கா சிங், பணி ஓய்வுக்குப் பிறகு தனது முழு நேரத்தையும் ஓட்டப்பந்தய வீரர்கள் பதக்கம் வெல்வதற்கு தயார்படுத்தும் பணியில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் கால் பதிக்காத மாநிலங்களே இல்லை என்று கூற முடியும். இதனால்தான் தடகள வீரர்கள் பலரிடமும் ‘ரோல் மாடல்’ மில்கா சிங்.. மில்கா சிங்... என்றே கேட்க முடிகிறது. இவரது வாழ்க்கை வரலாறு மேற்கு வங்க மாநில பள்ளி பாடப்புத்தகத்தில் ‘பாக் மில்கா பாக்’என அவரது இடம்பெற்றுள்ளது. இந்தியில் ஏராளமான வெற்றிப் படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ஒருவர், தடகள வரலாற்று வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அனுமதி கேட்டிருக்கிறார் அதற்கு மில்கா சிங்கும் அவரது மகனும் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.  பிறகு, ‘ரங் தே பசந்தி’ படத்தை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ராவுக்கு இவ்வாய்ப்பை அளித்துள்ளார். படத்துக்கான உரிமையாக ஒரு ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டார் மில்கா சிங். படத்தின் லாபத்தில் கிடைக்கும் 15 சதவிகிதத்தை மில்கா சிங் தொண்டு நிறுவனத்துக்குத் தர ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த திரைப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.
கனவுகள் மெய்ப்பட...
பிறந்த மண்ணான பாகிஸ்தானில் அந்நாட்டு வீரருக்கு எதிராக ஓடிய போது, சிறு வயதில் எனக் உயிரைக் காப்பாற்ற ஓடியது ஞாபகத்துக்கு வந்தது’ என கூறியிருக்கும் மில்கா சிங், ‘இந்தியாவில் இப்போது என்னை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. கிரிக்கெட்டை மட்டுமே நேசிக்கும் ஒரு சமூகம், இந்தியாவுக்கு புகழ்சேர்த்த ஒரு தடகள வீரர் யார் என்றே தெரியாமல் வாழ்வது அவமானத்தை தவிர வேறென்ன?  “நான் கண் மூடுவதற்குள் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்ல வேண்டும்” இது மில்கா சிங் உருக்கமாக் கூறிய பெருங்கனவின் வார்த்தைகள். அந்த ஆசை நிறைவேறும் என்று 80 வயதைக் கடந்த நிலையிலும் அவர் உறுதியாக நம்பிக்  கொண்டிருக்கிறார். அவரது லட்சியமும் கனிவும் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் நிறைவேற்றப்படும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.