இளம்பிள்ளை , ஏப்.29- இளம்பிள்ளையில் வடமாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருவதாக மாவட்ட காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து அவர்களுக்கு அரிசி, மளிகை பொருள் வழங்கப்பட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து ஜவுளி நிறுவனத்தில் கூலிவேலை புரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இவர்கள் உணவில்லாமல் தவித்து வருவதாக சேலம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல்துறை ஆய்வாளர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் 13 பேருக்கு பணிபுரியும் ஜவுளி தொழில் உரிமையாளரே உணவு அளித்து வருவதாகவும் , மீதம் 7 பேர் உணவில்லாமல் இருந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து சேலம் தெற்கு வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன்பின்னர் வட்டாட்சியர் ரமேஷ் குமார் , இளம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் சம்பவ இடம் வந்து அரிசி மற்றும் மளிகை பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்கி சென்றனர்.