tamilnadu

img

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி! - எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உதவியாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி இவர் கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் தமிழ்ச்செல்வன் நண்பர் செல்வகுமார் மூலமாக பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 26ஆம் தேதி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ புகாரை பெற்று விசாரணை நடத்தியதில் வங்கி கணக்கில் ரூ.17 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் மணி மீது 120/B, 420 ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள மணியை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

;