tamilnadu

img

சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சென்றாயம்பாளையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து தூக்கிலிட்டுக் கொன்றது. இதை அடுத்து, குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்கு தொடர்ந்தனர்.


இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பூபதி, ஆனந்தபாபு, ஆனந்த், பிரபாகரன், பாலகிருஷ்ணன் என்ற 5 பேரை குழந்தை பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றம் சட்டத்தின் கீழ் கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்தனர்.


இந்நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதில் குற்றவாளிகள் 5 பேருக்கும் கடத்தல், கொலை, போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இரட்டை ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

;