சேலம் , மே 1- நாகலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள அசாம் ரைபிள் படை வீரர்களுக்குத் தேவையான 1.15 லட்சம் லிட்டர் ஆவின் பால் மற்றும் 8 டன் மருந்துப் பொருட்கள் சேலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் இந்திய ரயில்வே, முக்கிய பணியாற்றி வருகிறது. குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டமானது, சேலம் மற்றும் ரயில்வே கோட்ட எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அனுப்பப்படும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது.
தற்போது, நாகாலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள அசாம் ரைபிள் படை வீரர்களுக்குத் தேவையான 1.15 லட்சம் லிட்டர் பால் (டெட்ரா பாக்கெட்டில் அடைக்கப்பட்டது) மற்றும் 8 டன் மருந்துப் பொருட்களை சேலத்தில் இருந்து சிறப்பு சரக்கு ரயில் மூலமாக அனுப்பப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் தலைமையில் ரயில்வே மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம், 5 உயர் கொள்திறன் கொண்ட சரக்கு வேகன்கள் மற்றும் எஸ்எல்ஆர் கோச்சுகளில், பால் மற்றும் மருந்துப் பொருட்களை சேலத்தில் இருந்து நாகாலாந்து மாநிலத்துக்கு அனுப்பப்பட்டது.
முன்னதாக, கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, சுமை தூக்கும் தொழிலாளர்கள், பால் பாக்கெட் உள்ளிட்ட சரக்குகளை சரக்கு ரயிலில் ஏற்றும் முன்னர், அவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் அறிகுறி இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. பின்னர், தொழிலாளர்கள் அனைவரும் கிருமி நாசினி திரவம் கொண்டு கை கழுவி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சரக்குகளை, ரயிலில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வணிகப் பிரிவினரின் செயல்பாடுகளை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை ஆகியோர் பாராட்டினர்.
இதுகுறித்து முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரி கிருஷ்ணன் கூறுகையில், ‘சேலம் ரயில்வே கோட்டமானது, அத்தியாவசியப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் அனைத்தையும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் 24 மணி நேரமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உற்பத்தியாளர்கள், வணிகள் தங்கள் வர்த்தக சரக்குகள், அத்தியாவசியப் பொருட்களை சரக்கு ரயில் மூலம் அனுப்புவதற்கு முன்வர வேண்டும். குறிப்பாக, கோவிட்-19 தொற்று அபாயமுள்ள நிலையில், மருந்துகள், உணவுப் பொருட்கள், முகக் கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறித்த நேரத்தில், பாதுகாப்புடன் உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கு சரக்கு ரயில் வசதி செய்து தரப்படும்.
நாடு முழுவதும் சிறப்பு சரக்கு ரயில்களை இயக்கி, மாநில அரசுகள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான பொருட்களை நாடு முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உள்ளிட்டோர் ரயில்வே துறையின் சிறப்பு சரக்கு ரயில் வசதியால் பயனடைந்துள்ளனர். சரக்குகளை அனுப்ப விரும்புவோர் வசதிக்காக, பெரிய ரயில் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு வணிக ஆய்வாளர்களை (கோவை- 9003956955, திருப்பூர்- 9600956238, ஈரோடு- 9600956231, சேலம்- 9003956957) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.