tamilnadu

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு...

சென்னை:
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 59ஆக உயர்த்தப்பட்டது.

பணி வாய்ப்பு கேட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் ஊழியர்களின் வயது வரம்பை உயர்த்துவது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்தன.அதாவது ஓய்வு பெறுபவர்களுக்கு அவர்களது ஓய்வூதிய பலன்களை அரசு அளிக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்ட நிலையில் செலவுகளைக் குறைக்க ஓய்வூதிய பலன்களைக் கருத்தில் கொண்டு ஒரு ஆண்டை உயர்த்தி அப்போதைய தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு மத்திய அரசு ஊழியர்களைப் போலவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில், போக்குவரத்துக் கழகத்தில் இம்மாதம் 31ஆம் தேதி முதல் வயது முதிர்வு அடிப்படையில் பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்கள், அவரவர் பிறந்த தேதியின் அடிப்படையில் 60 வயதை பூர்த்தி செய்யும் காலத்தில் பணியில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் வாயிலாக ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படும் என போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;