“மக்கள் மருத்துவர்”தான் மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் என்பதற்கு இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு வேண்டும்? ஆம், தோழர் லட்சுமி நரசிம்மன் உடல் அடக்கம் செய்யப்பட்ட அவரது குடும்பத்தோட்டத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. ஒரு நாள் ஒரு தோழரின் காலை ஒரு தனியார் மருத்துவமனையில் வெட்டி எடுத்துவிட்டு, அதற்குமேல் செலவு செய்ய முடியாமல், சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனைக்கு மருத்துவர் லட்சுமியிடம் அழைத்துச் சென்றேன். அப்பொழுது அவர் என்னை பார்த்து சொன்னார்... “நீங்க மாவட்டச் செயலாளராக இருக்கிறீங்களேன்னு பாக்கிறேன்; இல்லீன்னா இந்நேரம் கன்னத்திலேயே அறைந்திருப்பேன்; நா எதுக்கு இங்க இருக்கிறேன்? நேரா இங்க அழைத்து வர வேண்டியதுதானே; அவரின் கால எடுக்காமலே சிகிச்சை அளித்திருக்கலாமே’ என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டிருச்சி”. (அதோடு, வாழும் விடுதலைப் போர் வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் இரங்கலையும் வாசித்தார்)
-ஏ.மோகன் சிபிஐ சேலம் மாவட்டச் செயலாளர்.
நீ... ஒரு போராளி
போராளிகள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப் படுகிறார்கள்! ஆம், இதோ இங்கே உம்மில் இருந்து ஆயிர மாயிரம் போராளிகளாக எழுவோம் என அரசு மருத்து வர்கள் சூளுரைக்கிறார்கள்! ஆம், மக்கள் மருத்துவரே நீ புதைக்கப்பட வில்லை; விதைக்கப்பட்டு இருக்கிறாய்!” (அத்துடன் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் இரங்கல் உரையை வாசித்தார்)
என்.பிரவீன்குமார் (சிபிஎம் சேலம் வடக்கு மாநகரச் செயலாளர்)
கனவை நனவாக்குவோம்!
“மருத்துவர் லட்சுமி நரசிம்மன் விட்டுச் சென்ற பணியை
விடாது உயர்த்திப் பிடிப்போம். அரசு மருத்துவர்கள் நலனுக்கு மட்டும் அவர் பாடுபடவில்லை. ஏழை எளிய மக்களுக்கும் அவர் ஒரு மக்கள் மருத்துவராக இருந்திருக்கிறார் என்பதை இங்கே இப்போ தெரிந்து கொண்டோம். அவரின் நினைவாக அறகட்டளை அமைத்து, அவருக்கு இங்கே நினைவிடம் அமைத்து, அவரின் நினைவுநாளில் இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் மூலம் அவரின் கனவை நனவாக்குவோம். அவர் எங்களுக்குள் சே குவாராக, காஸ்ட்ரோவாக, காந்தியாக, அம்பேத்கராக, மார்க்ஸ்சாக, பெரியாராக வாழ்ந்தார்... இனியும் வாழ்வார்” பாலகிருஷ்ணன், அகிலன், கருணாகரன் (மருத்துவர் சங்கத் தலைவர்கள்)
சிறந்த கம்யூனிஸ்ட்!
“லட்சுமி நரசிம்மன் எனது கணவர் மட்டுமல்ல. 18,000 அரசு மருத்துவர்களின் தலைவர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட். போராளி. அவரை இந்த இடத்தில் நான் அடக்கம் செய்ய அடம் பிடித்த காரணமே... இந்த இடம் இனி உங்களுக்கானது. அவரின் கனவு நனவாக்க நீங்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் மருத்துவனை அமைத்து மக்களுக்கு சேவையாற்ற கனவு கண்டார். அவரின் கனவை நனவாக்குங்கள். ஒரு அன்னையாய் அழைக்கிறேன்”.
அணுராதா (லட்சுமி நரசிம்மனின் துணைவியார்)
“இனிமே இதுபோன்ற ஒரு மக்கள் மருத்துவரைக் காண எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ என அங்கே கண்ணீர் சிந்தியவை மருத்துவர் கண்களும், இதயங்களும் மட்டுமல்ல, அவர் வைத்து பார்த்து, பார்த்து வளர்த்த மா, வேம்பு, தென்னை, பனை போன்ற பல்லுயிர்களும்தான்”.